Tuesday, October 13, 2009

நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்


- 1 -



vijayநடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற வைத்துள்ளனர். இந்த மோசமான வணிகத்தை புலம்பெயர் நாடுகளிலும் பெரும்பாலான பத்திரிகைகளும், ஊடகங்களும் தம் பங்குக்கு பெரிதாக்கி, நாளும் பொழுதுமாக செய்திகளை வெளியிட்டு செய்யும் அட்டகாசம் பெரிதாகியே வருகின்றது. முதலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், உரிமை.


ஆனால் நடிகர்கள் மட்டுமே முதல்வர்கள் ஆகலாம் என்கிற பிம்பத்தை உரிவாக்கியவை எல்லாமே ஊடகங்கள் தானே. விஜயை எடுத்துக் கொள்வோம். அவருக்கு அரசியலில் என்ன அரிச்சுவடி தெரியும்?. எந்த மக்கள் பிரச்ச்னை பற்றி அவர் தீவிரமாக குரல் கொடுத்திருக்கிறார்? இது பற்றிய எந்தக் கேள்விகளும் இல்லாமல் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் அரசியலுடன் முடிச்சுப் போட்டு, ஒவ்வொரு பேட்டியிலும் அவரிடம், நீங்கள் அரசியலுக்கு வருவீர்காளா? என்கிற அதி முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டுத் தொலைத்ததெல்லாம் ஊடகங்கள் தானே. விஜய் தன்னும் ஓரளவு தன்னை திரை உலகில் நிலைப்படுத்திக் கொண்ட நடிகர். ஆனால் சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா, விஷால் என்று மூன்று படம் நடித்து முடித்துவிட்டாலே அவர்களைப் பார்த்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்பது போன்ற கேனத்தனம் வேறு எதுவும் இல்லை.



இது பற்றி என்ன சொன்னாலும் உடனே எம்ஜிஆர் நடிகர் தானே அவர் 13 வருடம் நாடாளவில்லையா என்பார்கள். எம்ஜிஆர் என்ன செய்தார், அது இலவசம், இது இலவசம் என்று வாக்குக் கொடுத்து மக்களை நிரந்தர சோம்பேறி ஆக்கினார். அதை ஜெயலலிதா தொடர்ந்தார். இப்போது இலவச டிவி வரை கருணாநிதி கொண்டுவந்திருக்கிறார். ரேஷன் பொருட்கள் இலவசம் என்று இந்நாளைய முதல்வர் சொல்ல, அதை வீடு வீடாக இலவச டெலிவரி செய்வேன் என்று "வருங்கால முதல்வர்" விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். மக்களுக்கு உழைப்பதற்கான ஆற்ற்லும், சக்தியும் நன்றாக இருக்கின்றபோது ஏனையா இலவசம்?. இப்படி இலவசம் மேலாக இலவசம் என்று கொடுத்து ஒரு மக்கள் கூட்டத்தையே சிந்திக்க விடாமல் அடக்கி வைத்திருக்கிறீர்கள். விஜய் ஏன் அரசியலுக்கு வருவார் என்பதற்கு அவரது முதல் கட்ட தகுதியாக அவர் பலருக்கு உதவுகிறார், பலரைப் படிப்பிக்கிறார் என்றெல்லாம் அவர் தந்தை சொல்ல அதை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து பிரசுரித்தன. உண்மையாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே தகுதியாகிவிடுமா? அபப்டிப் பார்த்தால் இவரை விட அதிகம் சமூக சேவை செய்த அன்னை தெரஸா, வித்யா சாகர் போன்றவர்களை எல்லாம் யாராவது அரசியலுக்கு இழுத்தார்களா? பிறகேன் இவரை மட்டும் அதோ வாறார், இதோ வாறார், ஆடி வாறார் அசைந்து வாறார் என்ற அளவுக்கு ஆலாபனை செய்கிறீர்கள். இது போன்ற செய்திகளைப் பார்த்து பார்த்து விகடன், குமுதம், குங்குமம் என்கிற மூன்று கமர்ஷியல் குப்பைகளையும் படிப்பதென்றாலே அலர்ஜி ஆகிவிடுகின்றது.


- 2 -



நன்றாக எழுதி, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்துவிட்டு திடீரென்று தம்மை மௌனப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருவர் பற்றி கடந்த வாரம் ஒருமுறை அசைபோட்டேன். முதலில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்ற ஈழத்து எழுத்தாளர். 80களில் கணையாழியில் பத்திகள், சிறுகதைகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சுகிர்தராஜா இப்பொழுதெல்லாம் பெருமளவு எழுதுவதில்லை என்றே தெரிகின்றது. அவரது சில சிறுகதைகளை தொகுத்து அ/சாதாரண மனிதன் என்ற பெயரில் ஒரு புத்தகமாக காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. 80களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளின் சிறப்பு, அக் காலப்பகுதிகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் எப்படி சாதாரணர்களைப் பாதித்தது என்று சொல்லிச் செல்வதாகும். எனது வாசிப்பில் இதில் முக்கியமான கதை என்று "அ/சாதாரண மனிதன்" என்ற கதையையே சொல்வேன். பொதுவாக செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் திடீரென்று வீழ்ச்சி நடைந்துவிட்டால் நான் முதலிலேயே யோசித்தனான். இது எனக்கு முதலிலேயே தெரியும் என்கிற பீடிகைகளுடன் ஆலோசனை தர ஒரு கூட்டமே தயாராக இருக்கும். அப்படி தெரிந்திருந்தால் அதை முன்னரேயே சொல்லியிருக்கலாம் தானே?. இந்தக் கதையிலும் டேவிட் முரே என்ற பாத்திரம் இப்படி ஒரு நிலைக்கு வரும்போது அவரது முன்னாள் சக ஊழியர், இவை எல்லாவற்றையும் விட அவருக்குப் பிடித்த மட்டன் கபாப்களில் கொஞ்சம் வாங்கிக் கொடுப்பது இந்த ஆலோசனை எல்லாவற்றையும் விட மேலானது என்று முடிவு செய்வதுடன் கதை முடிகின்றது. இவரது அண்மைக் கால எழுத்தாக "காலம்" இதழில் வெளியான ஒரு கட்டுரையையும், "ஸ்லம் டோக் மில்லியனியர்" பற்றிய ஒரு கட்டுரையையும் தவிர எதையும் வாசிக்கவில்லை. வாசிக்கும் ஆர்வம் நிறையவே இருக்கின்றது.



அடுத்ததாக, ஜே. பி. சாணக்யா வின் கனவுப் புத்தகம் என்ற சிறுகதைத் தொகுதியை சில வாரங்களுக்கு முன்னர்தான் வாசித்து முடித்திருந்தேன். அவரது பல கதைகளை தனித் தனியாக வாசித்து இருந்தாலும் ஒரு புத்தகமாக வாசிப்பது இதுவே முதல் முறை. தலித் மக்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் உறவு முறைச்சிக்கல்கள் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட கதைகள் அவருடையவை. உயிர்மை இதழ் ஆரம்பித்த காலங்களில் அதில் வெளியான அமராவதியின் பூனை என்ற கதை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. பத்துக் கதைகள் அடங்கிய இந்தத் தொகுதியில் எனக்கு அதிகம் பிடித்த சிறு கதை “ஆண்களின் படித்துறை “ தான். கோடை வெயில் என்கிற கதை ஒரு கதையாக பிடித்திருந்தபோதும், யோசித்துப் பார்க்கையில் தன் கணவனின் வேலைக்காக தான் அண்ணா என்று அழைத்த உறவு முறைக்காரனுடனேயே வசந்தா உடலுறவு கொள்ளுகின்றாள் என்று வ்ரும் முடிவு தரும் தாக்கம், புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை நினைவூட்டுகின்றது. (இந்த முடிவை முன்வைத்து வியாகூல சங்கீதம் என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா புதுமைப்பித்தனை காய்ச்சி எடுத்திருப்பார்) இந்தக் கதைக்கு முடிவாக புரட்சிகரமாக கதையை முடித்து வைக்கிறேன் என்று வேறு விதமாக எழுதியிருந்தால் அங்கே ஒரு நாடகத் தன்மை வந்திருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், மனதளவில் இந்தக் கதையின் முடிவு அமைதியின்மையை ஏற்படுத்தியது உண்மை. சமீபகாலமாக அவர் பெரிதாக எழுதுவதில்லை என்று அறிந்தேன். சில வேளை அவர் ஈடுபட்டிருக்கும் உதவி இயக்குனர் பணிகள் காரணமாக அவரது எழுத்துப் பணி தடைப்பட்டிருக்கலாம். அதைக் கடந்து தொடர்ந்து எழுதும்போது இது போன்ற நல்ல கதா அனுபவங்களையும், சமுக அமைப்பு பற்றிய அடிப்படையான சில கேள்விகளையும் நாம் அடையப்பெறலாம் என்றெண்ணுகின்றேன்.



- 3 -



கனேடிய மண்ணில் இருந்து மெலிஞ்சி முத்தனின் முதலாவது நூல் உயிர்மை வெளியீடாக வெளிவர இருக்கின்றது. “நான் தனிமையில் இருந்த போது எழுதத் தொடங்கினேன், பின்பு எழுதுவதால் தனியனானேன்” என்று தன் படைப்புகளின் ஊடாகச் சொல்கின்ற மெலிஞ்சிமுத்தன் கூத்து மற்றும் கவிதை ஆகிய துறைகளிலும் தன் ஆளுமையை ஏற்கனவே ஆழப் பதித்தவர். அச்சில் வர இருக்கும் இவரது முதல் புனைவு இதுவே. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தன் இணையத் தளத்தில் இந்த நூலுக்காக தான் எழுதியிருந்த முன்னுரையினை வெளியிட்டிருந்தார். பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு நல்ல ஆளுமையும், திறமையும் இருந்தும் அவர்கள் பெருமளவுக்கு வெளியில் தெரிய வராமைக்கு அவர்கள் சரியான முறையில் வெளிக்கொணரப் படாமையும் காரணமாக இருக்கவேண்டும். அதிலும் இளம் ஈழத்து எழுத்தாளர்கள் எவரையும் கண்டு கொள்ளாத அல்லது கடுமையான விமர்சனங்கள் மூலமாக நிராகரித்து விடுகிற சூழலே பரவலாக இருக்கின்ற நிலையில் – உதாரணமாக ஜெயமோகன் சிலாகிக்க வேண்டும் என்றால் அ.மு எழுதவேண்டும், சாரு நிவேதிதா கொஞ்ச நாள் ஷோபா சக்தியையும் சுகனையும் சொன்னார். மற்றும்படி இந்த விடயங்களில் பாபாவை நினைத்து தியானத்தில் மூழ்கிவிடுவார் – எஸ். ராமகிருஷ்ணனின் இந்த செயல் பாராட்டுக்கு உரியதே.



vadaliஅண்மைக்காலமாக காலச்சுவடு, உயிர்மை, அடையாளம் போன்ற பதிப்பகங்கள் பல ஈழத்தமிழர்களின் எழுத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இது நிச்சயம் ஒரு நல்ல அறிகுறியே. ஆனால் எம்மிடையே இருக்கின்ற சொல்ல மறந்த / மறுக்கப்பட்ட எல்லாக் கதைகளையும் இந்தியப் பதிப்பகங்கள் ஊடாகச் சொல்ல முடியாது என்பதுதானே யதார்த்தம். அண்மையில் த. அகிலனின் மரணத்தின் வாசனை வெளியிடப்பட்டபோது கூட அதன் பெயரை மாற்றுமாறு திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம் தானே வடலி பதிப்பகம் உருவாகக் காரணமாக அமைந்தது. இப்படியான நேரங்களில்தான் எமக்கென்று ஒரு பதிப்பகம் அமையவேண்டிய தேவை எழுகின்றது. இதுவரை வடலி வெளியீடாக வெளிவந்த 4 புத்தகங்களுமே ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களாக அமைந்ததுடன், வெவ்வேறு விடயங்கள் சார்ந்தனவுமாக இருக்கின்றன. தவிர, புலம்பெயர் நாடுகளில் வடலி நண்பர்கள் வட்டம் என்று அமைத்து புத்தக அறிமுகங்களைச் செய்யும்போது அது பலரைச் சென்றடையவும் வாய்ப்பாகின்றது. இளைஞர்கள் சேர்ந்து செய்த இம்முயற்சி தொடர்ந்து வெற்றிபெறுவது வாசகர் கையிலேயே இருக்கின்றது.



ஈழ நேசன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது


புகைப்படங்கள் நன்றி: ஈழநேசன்



Sunday, October 4, 2009

சடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்

-1 –



சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.

sadankuசெந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.

வெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஆபாசமாக கதை எழுதினார் என்பதற்காக மு. தளையசிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் உளறித்தள்ளும் அறம் சார்ந்த மேதாவிகள் இந்தக் கதை பற்றி என்ன சொன்னார்களோ தெரியவில்லை.



-2-



புலம் பெயர்ந்தும், சொந்த நாட்டில் வேலை நிமித்தமாகவும் குடும்பத்தையும், சொந்த மண்ணையும் பிரிந்திருந்து தம் இளமையை ஆகுதியாக்கும் எத்தனையோ பேரின் கதைகள் நிச்சயம் பதிவாக்கப்படவேண்டும். போர் தின்ற எம் சனங்களின் வாழ்வின் எத்தனையோ கதைகள் இன்னும் பதிவாக்கபடாமலேயே இருக்கின்றன. ஈழத்தில் இருந்து போர் தூக்கி எறிந்த எத்தனையோ பேர் உலகெங்கும் பதிவர்களாகப் பரவிக் கிடந்தாலும் இன்னும் பதிவாக்கப்படாமலேயே எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம் வருத்தத்துக்குரியது. அண்மையில் நண்பர் அந்நியனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு பதிவரும் மானசீகமாக, ஒவ்வொரு தலைப்பை அல்லது விடயத்தை தன் பதிவுகளில் முன்னிலைப்படுத்தவேண்டும். அதாவது அந்தப் பதிவர் வேறு விடயங்கள் பற்றி எழுதக் கூடாது என்பதில்லை. எதைப் பற்றியும் எழுதலாம். ஆனால் தான் மானசீகமாக எடுத்துக் கொண்ட விடயம் பற்றி ஆழமான, விரிவான பதிவுகள் எழுத வேண்டும். எல்லாப் பதிவர்களும் இதைப் பின்பற்றினால் பேசப்படாத விடயங்கள் அதிகமாகப் பதியப்படும். உதாரணத்துக்கு பதிவுகளில் இதுவரை 95 ஒக்டோபரில் இடம்பெற்ற இடப்பெயர்வு பற்றி பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. அதுபோல வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, தம்மை நாராக்கி தம்மைச் சார்ந்தவர்களை உயர்த்தியபின் ஆயிரம் கனவுகளுடன் ஊர் திரும்பி, வாழ்வின் வசந்தங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்ந்த இளைஞர்கள் – யுவதியர் பற்றிப் பேசப்படவில்லை. இதுபற்றியெல்லாம் தொடர்ச்சியாக எழுதப்படும்போது அவை எமக்கான ஆவணங்களாகக் கூட கருதப்படலாம்.



-3-



கனடாவின் வன்கூவரில் நடைபெற இருக்கின்ற திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்படுவதற்காக ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 1999 என்கிற திரைப்படம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்றறிந்து மகிழ்ந்தேன். கனடாவில் தமிழ் இனக்குழுக்களின் மோதல்கள் உச்சத்தை அடைந்திருந்த 1999 ம் ஆண்டளவில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற தகவலையும் அறிந்தேன். புலம்பெயர் நாடுகளில், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இனங்களில் ஒன்றான ஈழத்தவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இந்தக் குழுக்களிடையேயான மோதல்களும் இருக்கின்றன.

1999

வேற்றினத்தவர்கள் எம் மீது அதிகாரம் செய்ய செய்ய முற்பட்டதாலேயே எம் இளைஞர்கள் குழுக்களாகி வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்கின்ற ”ஜில்மால்” கதைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு இந்தப் பிரச்ச்னைகள் எப்படி உருவாகின்றன?, ஏன் உருவாகின்றன? என்றெல்லாம் திறந்த வெளியில் உண்மைகளைப் பேசுவதால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். (எனக்குத் தெரிந்த அளவில் தமிழ் இனக்குழுக்கள் தமிழ் இனக்குழுக்களுடன் மட்டுமே மோதுவது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன). இது போன்ற காரணங்களாலும், ஒரு முக்கிய திரைப்பட விழாவில் திரையிடப்பட தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற வகையிலும் இத்திரைப்படத்தையாவது கள்ள விசிடி வரும்வரை காத்திருக்காமல், திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டுகிறேன். மேலும் இப்படியான சில நல்ல திரைப்படங்களைப் பார்க்காமல் விடுவது கூட குருவி, ஏகன், போன்ற கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட ஒரு காரணமாக இருக்கின்றது. கருட புராணத்தில் இதற்கும் ஏதோ தண்டனை இருக்கிறதாம். எச்சரிக்கை.



நன்றி : ஈழநேசன் இணைய இதழ்



புகைப்படங்கள் நன்றி: ஈழநேசன்