Monday, August 31, 2009

பதிவுலக நண்பர்களும் அனுபவங்களும் மற்றும் புல்லட் உடனான என் மீண்ட நட்பு

-1-

து 2006ம் ஆண்டு. கனேடிய புலம்பெயர் வாழ்வு தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது வரை கொண்டாடிய உறவுகளும், நட்புக்களும், நம்பிக்கைகளும் தம் கோரமான சுய முகத்தைக் காட்டி என்னைக் கேலிபேசிக் கொண்டிருந்த காலம். புலம்பெயர முன் ஈழத்தில் கிடைக்கப் பெற்று, உலகெல்லாம் சிதறிக் கிடந்த சில நட்புக்களும், ஓரிரு உறவுகளும், எப்போதும் நான் நேசித்த புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே எனக்கு துணை வந்து கொண்டிருந்தன. எப்போதும் கூட இருந்த இருபதுக்கு மேற்பட்ட நட்புகளும், ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியும் மெல்ல விலகிச் செல்ல தனிமையின் குழந்தையாய் வெறுமையை உணரத் தொடங்கினேன். அதுவரை புத்தகங்களையும் இதழ்களையும் இணையத்தில் மட்டுமே வாசித்து வந்து கொண்டிருந்த எனக்கு தனது வலைப்பதிவு ஒன்றினை அவுஸ்திரேலியாவில் இருந்து நண்பன் தெய்வீகன் அறிமுகம் செய்தான். அவன் வலைப் பதிவும், அதில் இடப்படிருந்த பின்னூட்டங்களும் எனக்கு அப்போது ஆச்சர்யங்களாக இருந்தன. அந்த பிரமிப்பு தீர முன்னரே தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றையும் அறிமுகம் செய்தான்.

தமிழ் மணத்தில் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் டீசே தமிழனின் எழுத்துக்களைப் பார்த்து அதிகம் பிரமித்து ஒரு ரசிகனாகவே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். இதே நேரத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பதிவர் கானா பிரபா. அப்ப்போது அவர் அதிகம் நினைவுப் பதிவுகளாகவும், மலையாள மற்றும் பிறமொழி திரைப்படங்கள் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தார். அவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விடயங்கள் எனக்கிருந்தன. இயலுமானவரை பின்னூட்டங்கள் மூலம் செய்யப்பட்ட பகிர்தலின் இடையே, பகிர்தலுக்கு பின்னூட்டம் மட்டுமே வழி என்ற நிலையில் இருந்த போதாமையை நான் உணார்ந்து கொண்ட ஓர் இரவில் நான் என் கருத்துக்களை, எண்ணங்களை, கோபங்களை, பேசுவதற்கு எவருமே கிடையாத தனிமையை பதிவுகள் மூலம் வெளியிடத்தொடங்கினேன்.

பதிவுகளுக்கு சொல்வதெல்லாம் உண்மை என்று பெயர் வைத்த பின்னர் என்ன பெயரில் எழுதலாம் என்று யோசித்த போது அந்த நாட்களில் ராஜராஜசோழன் மேல் இருந்த அதீதமான காதலினால் (இதற்கு பொன்னியின் செல்வனும், பாலகுமாரன் எழுதிய ராஜராஜசோழன் பற்றிய கதைகளும் காரணமாக இருக்கலாம்) அருண்மொழிவர்மன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் நான் எழுதிய சில பதிவுகளை வாசிக்கும்போது வெட்கவே தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை உலக தரத்தில் ஒரு சினிமா என்று சொல்கிற முட்டாள்தனத்தை எல்லாம் செய்திருக்கிறேன். கவிதைகள் என்கிற பெயரில் சில கொடுமைகளை (இது சாடிஸத்தின் கீழ் கூட வரும்..???) கூட பதிந்திருக்கிறேன். அண்மையில் நண்பர் மெலிஞ்சி முத்தன் சில பழைய பதிவுகளை நீக்கி விடலாமே என்றூ ஒரு வேண்டுகோளாக வைத்தபோதும் கூட அதை நான் நீக்கவில்லை. நான் எழுதிய எல்லா அபத்தங்களுக்கு இடையிலும் அப்போதைய என் மன நிலையும், பேதமையும் நிறைந்தே இருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்துதானே நான். தவிர, எத்தனை மேற்படிப்பு படித்தாலும், “அ”னா “ஆ”வன்னா எழுதிப் பழைய பழைய கடதாசிகள் மற்றவர்களுக்குத்தான் குப்பைகள். எழுதினவனுக்கு பொக்கிஷங்கள்.

பதிவுகள் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தொழினுட்ப ரீதியாக இருந்த சில அறிவுக் குறைவுகள் காரணமாக என்னால் அவற்றை தமிழ்மணத்தில் இணைக்க்வோ, பதிவுப் பட்டையை இணைக்கவோ முடியவில்லை. அப்போது என்னுடன் உலாவந்த தாழ்வு மனப்பாண்மை காரணமாக அதற்கான முயற்சிகளைச் செய்யக்கூடவில்லை. ஒரு இன்ப அதிர்ச்சியாக “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்று நான் எழுதிய பதிவு ஒன்றிற்கு நான் அதிகம் கொண்டாடிய டிசே தமிழன் பின்னூட்டமும் இட்டு, பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கவும் கேட்டுக்கொண்டார். இதே போன்று கானாபிரபாவும் கேட்டுக்கொண்டதுடன், என்னுடன் எந்த அறிமுகமும் இல்லாதபோதும், என் வலைப்பதிவில் பதிவுப்பட்டையை இணைத்தும், வேறு சில வசதிகளைச் செய்தும் தந்தார். தனிப்பட்ட வாழ்விலும் நிறைய சிக்கல்களுல் சிக்கி உழன்று கொண்டிருந்த நாட்களில் எனக்குப் பெரும் நம்பிக்கையும், என் தனிமையை, மன உளைச்சல்களைக் கொல்ல ஒரு வெளியாக ப்திவுகளைத் தொடர உதவிய இருவர்க்கும் காலமெல்லாம் நன்றிகள்.

இதன்பின் ஒரு நீண்ட இடைவெளி. மன உளைச்சல்களால், தனிப்பட்ட சிக்கல்களால், உறவுகள் தந்த ஏமாற்றங்க்ளால், இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் நண்பர்கள் வட்டமே சிதறி விட ஏற்பட்ட வெறூமையினால் அதிகம் அல்லாடினேன். மீண்டும் ஒரு முறை கானாபிரபா மடல் எழுதினார். ஏன் நீண்ட காலம் பதிவுகள் எழுதவில்லை என்று கேட்டு, சுகம் விசாரித்து, மீண்டும் எழுதும்படி மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருந்த கடிதம் அது. அன்று இருந்த விரக்தியில் “என் மீதும் அக்கறைப் பட மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை தந்த கடிதம் அது. 2007ம் ஆண்டு பிப்ரவரியில் எழுதிய பதிவின் பின்னர் மீண்டும், 2008 மேயில் பதிவெழுதத் தொடங்கினேன். இடைப்பட்ட இந்தக் காலத்தில் சக பதிவர் விஜேசந்திரன் டொரண்டோ வந்திருந்தார். வலைப்பதிவுகளில் ஏற்பட்ட அறிமுகத்தில் அவர் டொரண்டோ வரும்போது சந்திப்பதாக உறுதி செய்திருந்தேன். உண்மையில் அதில் மிகவும் ஆவலாயும் இருந்தேன். ஆனால் அவர் இங்கு வந்திருந்த நேரம் தேவையில்லாத ஒரு வழக்கு காரணமாக அவர் பலமுறை அழைத்தும் சந்திக்க முடியாமல் இருந்தேன். இப்போதும் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் வேதனை அது.

எந்த நேரத்திலும் நான் மன் அழுத்த நோய்க்கு உள்ளாகிவிடலாம் என்று குடும்ப வைத்தியர் அபாயச் சைகை காட்டியிருந்த நேரத்தில் டிசே தமிழன மற்றும் நிவேதாவை ஒரு குறும்பட வெளியீட்டு விழாவில் முதன்முறையாக சந்தித்தேன். காலம் செல்வம் அறிமுகம் செய்துவைத்தார். அதன் பின்னர் அருண்மொழிவர்மன் என்று என்னை அறிமுகம் செய்து நிறையப் பேசினோம். ” வலைப்பதிவுகளுக்கு நான் புதியவனாக இருந்தாலும் உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டேன். எனது இலக்கிய தேடல்களுக்கும் வழிகாட்டல் இல்லாத வாழ்க்கைக்கும் உங்கள் அறிமுகம் உதவும் என்று நம்புகிறேன்.” அவரது பதிவொன்றிற்குப் பின்னூட்டமிட்டதனை அதிகம் நம்பத் தொடங்கினேன். அவர் மூலமாக நிறைய எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அனேகமாக எல்லா இலக்கிய விழாக்களிற்கும் செல்லத் தொடங்கினேன். சராசரி, நடுத்தர புத்தகங்களை விட்டு விலகி நவீன இலக்கியங்களை வாசிக்கவேண்டும் என்ற அதீதமான ஆவலும், எதை வாசிப்பது என்ற குழப்பமும் நிறைந்திருந்த என்னை பல திசைகளில் பயணிக்க பழக்கப்படுத்தினார். அருமையான பல புத்தகங்களை பகிர்ந்துகொண்டார். மெல்ல மெல்ல என்னை மன உளைச்சல்கள், அழுத்தங்கள், அலைச்சல்களில் இருந்து மீட்க அதிகம் உதவியது அவர் அறிமுகம். கிட்டத் தட்ட இதே காலப்பகுதியில் ஊரில் என் தோழனாயிருந்த, பிரதீபனின் கனேடிய வருகையும் எனக்கு ஆதரவாக இருந்தது. தூக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு விடிய விடிய இலக்கியம், அரசியல் என்று நிறையப் பேசினோம். பேசுவதற்கு ஆட்களே இல்லை என்ற தனிமையில் இருந்து மனம் விட்டு நிறையப் பேசலாம் என்று நட்புகள் அருகிலேயே நெருங்கத் தொடங்கின. அனேகமான என் எல்லாப் பதிவுகளின் முதல் வாசகனாய் இருந்து அதிகம் ஊக்கப்படுத்திய, கடல் கடந்து இருந்தாலும் பெரும்பாலும் தினமும் கதைத்து விடுகிற, 17 ஆண்டுகால நட்பில் சண்டை பிடிப்பதற்கான உரிமையை எப்போதும் தந்துவிடுகிற கதியால் தந்த ஆதரவும் பெரும்பங்கு.

பொதுவாக நிறையப் பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிடுவது மிகக்குறைவு. பல பதிவுகளை வேலை நேரத்தில் வாசிப்பதாலும் (தமிழில் தட்டச்சும் வசதி கிடையாது) இயல்பாகவே எனக்கு இருக்கும் சோம்பேறித் தனத்தாலும் பின்னூட்டமிடுவதற்கான சந்தர்ப்பங்கள் தவறிப்போய்விடுகின்றன. அப்படி இருந்தும் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் கதியால், தமிழன் கறுப்பி, துர்க்கா-தீபன், கிருஷ்ணா, வாசுகி, பாரதி போன்றவர்கள் நிச்சயம் நன்றிக்குரியவர்கள். அது போலவே எந்த அறிமுகமும் இல்லாமல் எனக்கு சுவையார்வ பதிவர் என்று கௌரவம் தந்து நல்ல அறிமுகம் தந்த கோவி. கண்ணனும். ஒரு மூத்த, பிரபல பதிவரான இவர் தந்த அறிமுகம் எனக்கெல்லாம் பெரும் ஊக்கம் தருவது.


-2-

அண்மையில் இந்த பதிவுலகம் எனக்கு இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. அண்மையில் கொழும்புவில் நடந்து முடிந்த பதிவர் சந்திப்பின் படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன. படங்களைப் பார்த்த நண்பன் விசாகன் msn messenger மூலம் தொடர்புகொண்டு “டே உனக்கு “புல்லட்” யாரென்று தெரியுமா? என்று கேட்டான். கேள்விப்பட்டிருக்கிறேன், தெரியாதென்றேன். அவன் உடனே புல்லட்டின் டம் ஒன்றை அனுப்பினான். ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனேன். அதே மூக்கு, அதே கண், அதே சில்க் தலை முடி, அவனேதான். 95ல் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் ஒரு பாரிய இடப்பெயர்வு நடந்தது நினைவிருக்கலாம். அப்படி இடம்பெயர்ந்து இருந்த போது நானும் அவனும் ஒரே வீட்டில்தான் தங்கி இருந்தோம். அவனுக்கு என்னை விட 6 வயது குறைவு. என் தம்பியின் வயது. வயது வித்தியாசம் தாண்டி ஒரு நட்பு உருவாகி இருந்தது. ப்கல் முழுதும் ஓயாத பேச்சு, மாலை முழுவதும் நான், என் தம்பியர் இருவர், புல்லட், அவர் தம்பி, விசாகன், தயாபரன், சயந்தன் என்ற நண்பர்கள் என்று கிரிக்கெட் இப்படியாக அந்த இருண்டகாலத்தையும், இனிப்பானதாக மனதில் பதிய வைத்ததில் புல்லட்டுக்கும் அவன் தந்தைக்கும் பங்குண்டு. அதன் பிறகு 96ல் மீண்டும் யாழ் சென்று பின்னர் நாம் 97ல் கொழும்பு வந்துவிட தொடர்புகள் அறுந்துவிட்டன. பல தடவைகள் நான் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. பதிவர் சந்திப்பில் பார்த்த அவர் படங்களின் பின்னர் மீண்டும் தொடர்புகொண்டேன். அவனுடனான தொடர்பாடலை அவன் அனுமதியுடன் கீழே இணைத்துள்ளேன். பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்தவர்களுக்கும், படங்களை வெளியிட்டவர்களுக்கும் தனி நன்றிகள்.


கடிதம் 1
வணக்க்ம்

புல்லட்,
நினைவிருக்கிறதா? என் பெயர் சுதர்ஷன் / சுதன் அண்ணா என்றழைப்பீர்கள்

கொடிகாமத்தில் ஒரே வீட்டில் இருந்தோம்.

இன்றுதான் விசாகன் உங்கள் படத்தைப் பார்த்து நீங்கள்தான் புல்லட் என்று சொன்னான்.

உங்கள் சுகம் எப்படி. நான் சுகமே உள்ளேன். இப்போது கனடாவில் இருக்கிறேன். மிச்ச எல்லாரும் கொழும்பில்.
உங்கள் தந்தையின் செய்தி எனக்கு தாமதமாக தான் கிடைத்தது
சொரி புல்லட்
தம்பி, தங்கை என்ன செய்கிறார்கள்?

அம்மா எப்படி இருக்கிறார்?

நான் சும்மா அருண்மொழிவர்மன் என்ற பெயரில் solvathellamunmai.blogspot.com என்று எழுதுகிறேன்....

உங்களுடன் நிறைய கதைக்க வேணும் போல உள்ளது....

அந்த கொடிகாம வீட்டில் இருந்து 3 பதிவர்கள் உருவாகி விட்டோம்
(நான், நீங்கள், கதியால் என்ற பெயரில் எம் நண்பன்)

உஙகளிடன் ஃபேஸ்புக் இருந்தால் sutharshan@hotmail.com ல் என்னை இணைக்கலாம்... இல்லை நான் இணைக்க முயல்கிறேன்

வேற்ன்ன...
சந்திப்போம்

என்றென்றும் அன்புடன்
சுதர்ஷன்


கடிதம் 2

கதிரை மலைக்கந்தா! அட அநியாயமே? உங்கள் முழுப்பெயர் சுதர்சனா? நான் பெஸ் புக்கில தேடாத கொம்பினேசன் இல்லை .. சுதன் சிறிநிவாசன் , சிறிநிவாசன் சுதன் என்று .. உங்கள் ஏனைய சகோதரர்களின் பெயர் மறந்து விட்டேன்.. தீபன் என்று என்வயதில் ஒருத்தன் இருந்ததாக ஞாபகம்.. மற்றது ஒரு 3 வயது மூத்த ஒருவரும் ஒரு தங்கையும் இருக்கிறாரக்ளல்லவா? அம்மாவின் பெயர் தவனாக்கா தானே? கடவுுளே.. எவ்வளவு காலம் 15 வருடங்களாகிவிட்டது.. ம்ம்.. நான் பல்கலையில் எஞ்சினீரிங் முடித்து ஒரு அமெரிக்க கம்பனியில் வேலை செய்கிறேன்.. தம்பியார் ஓரிரு வருடங்களில் மருத்துவராகி விடுவார்.. தங்கை ஏ எல் படிக்கிறார்.. அப்பம்மா 2000 இல் இறந்து விட்டார்.. அப்பா 2006 இல் இறந்து விட்டார்.. வேறு புதினங்கள் இல்லை.. நான் மேல் படிப்புக்காக கனடா அல்லது அமெரிக்கா செல்லும் எண்ணம் உள்ளது.. 2011 இல் என்று முடிவெடுத்துள்ளேன்.... மற்றது உங்கள் வீட்டாருடன் கட்டாயம் தொடர்பை ஏற்படுத்துவேன் முகவரி தரும் பட்சத்தில்.. வேறு என்ன? உங்களின் முகம் ஞாபகம் இல்லை.. ஒரு உயரமான நெடுத்த உருவம் சறமும் டீசேட்டும் போட்டு மங்கலாக ஞாபகம் இருக்கிறது..

தில்லானா முத்து பட பாட்டு கேட்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் ஒரு முறை வந்து போகும்.. ஏனெனில் இந்த பாட்டு முதன்முதல் கேட்டது உங்கள் டேப்ரெக்கோடரில“தான்.. காதலன் பெடராப் பாட்டு நீங்கள் கொண்வந்தபோது கேட்கமுடியாமல் அவஸ்தைப்பட்டதும் ஏறத்தாழ 8 வருடங்களுக்கு பிறகு அந்த பாட்டை கேட்க முடிந்த போது சிரித்துதும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.. உண்மையை சொலவதானால் யாழில் இருக்கும் போதெல்லாம் உங்களயெல்லாம் நினைத்துப்பார்த்ததோ அப்பாவிடம் நீங்கள் எங்கேயென்று விசாரித்ததோ இல்லை.. இப்போது தனிமையில் கொழும்பில் இருந்து பழவையனவற்றை மீட்கையில்தான் மனது கனக்கி றது..

உங்கள் தாயார் ஒரு விசேடமாக புட்டு செய்வார்.. நான் சாகமுன்பு அதை எப்படிச் செய்வது என்று தெரிந்து விடவேண்டுமென்ற முயற்சியில்தான் உங்களை தேடும் மயற்சியில் இறங்கினேன்.. சிரிப்பாயிருக்கிறதா? அவர் ஒரு முறை செய்த சக்கரைப்புட்டு இன்னும் நாவில் நிற்கிறது.. அவர் முகமும் மற்ந்து விட்டது.. எப்படி உள்ளார்கள் எல்லாரும் ? கேட்டதாக சொல்லுங்கள்.. உங்களுக்கு திருமணமாகி விட்டிருந்தால் மனைவி குழந்தைகளை க்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்..

நீங்கள் தொடர்பு கொண்டது இன்ப அதிர்ச்சி.. விசாகன் அண்ணாவுக்கு நன்றிகளை சொல்லுங்கள்.. அவர் தற்போது சிங்கையில்தான் உள்ளாரென்று நினைக்கிறேன்.. அவர் தொட‌ர்பும் இல்லை..

பரபரப்பில் எல்லாம் உளறலாக எழுதி விட்டேன்.. தொகுத்து வாசித்துக்கொள்ளுங்கள்.. :) உங்கள் பதிவை வீடு சென்று அறுதலாக வாசிக்கிறேன்..
நான் சின்னப்பிள்ளைத்தனமாகத்தன் எழுதுவேன்.. பதிவுலகில் சந்திக்க நேர்ந்தது பாரிய மகிழ்ச்சி..

தொடர்பிலிருங்கள்..

புல்லட்..


கடிதம் 3

mmm புல்லட்.

மிகவும் சந்தோஷமாக உள்ளது இப்படியாவது தொடர்பு கிடைத்ததே என்று. நான் நிறைய உங்களைப் பற்றி யோசிப்பேன். விசாகன் சொன்னான் சிலதடவைகள் உங்களை சந்தித்துக் க்தைத்ததாக, ஆனால் தொடர்புகள் இருக்கவில்லை என்று

புல்லட் உண்மையில் அந்தக் கொடிகாம வீட்டில் நிறையப் பேர் இருந்தாலும், நாங்கள் இரண்டு குடும்பமும் நிறையப் பழகினோம் இல்லையா?. நீங்கள் ஒரு கிரிக்கெட் பட் செய்வித்தீர்கள். அதைக் கொண்டு கிரிக்கெட் எல்லாம் விளையாடி இருக்கிறோம்... அதுவும் ஐயாவுக்குத் தெரியாமல். ம்ம் அது ஒரு காலம்.

இன்று எங்கள் வீட்டாரிடம் கொழும்பில கதைப்பேன். அப்போது உங்களைப் பற்றி சொல்வேன். புல்லட்,, உங்கள் தொலைபேசி இலக்கம் என்ன?.
தந்தால் கதைப்பேன்....


வேறென்ன புல்லட், உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்வேன்.
உங்கள் படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். உங்களில் முகத்தில்ல் அதே சாயல் உள்ளது. ஆனால் வளர்ந்துவிட்டீர்கள். மூக்கும், கண்ணும் அதே மாதிரி உள்ளது...

புல்லட், நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை, (உங்கள் உண்மைப் பெயரை மறைத்து) எனது ப்ளாக்கில் போடலாமா? உங்களுடன் உறவு மீண்டது பற்றி ஒரு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்
Enrenrum Anbudan ----------------Sutharshan


கடிதம் 4

நிச்சயமாக செய்யுங்கள்.. வேண்டுமானால் உங்கள் செம்மையான தமிழ்ப்பாணியில் அதை மாற்றி போடுங்கள்.. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.. நேற்றும் முந்தநாளும் உங்கள் பதிவுகளில் தேடியதில் கொடிகாமத்தை பற்றி எதையும் காணோம்.. சற்று கவலையாக இரந்தது.. நவாலிப்பதிவில் இடம்பெயர்ந்து சென்றதாக மட்டும் குறிபிபட்டிருந்தீர்கள்.. ஆனால் நானும் எழுதவில்லைதான் ... எனக்கு என்னத்தை எழுதுவது என்றுதான் பரபரப்பு .. எழுதவெளிக்கிட்டால் ஒரு பெரிய புராணம் போல தான் எழுத வேண்டும்..


என் தொலைபேசி இலக்கம் *********** .. தயவுசேய்து என்னை நீ என்றே அழைக்கவும் ... தொலைவாக உணர்கிறேன்.. :) நீங்கள் சற்றுக்குண்டாகி விட்டதுதான் வித்தியாசமாக உள்ளது..

நன்றி எல்லாவற்றுக்கும்...

புல்லட்



-3-

கீத் உடனான அறிமுகம் எனக்கு அண்மையிலேயே நிகழ்ந்தது. அவரது பல பதிவுகளை வாசித்துள்ளேன். அவரது சுவாரசியமான எழுத்து நடை எனக்கு அதிகம் பிடிக்கும். தவிர கலாசாரம், பண்பாடு என்று சமுதாயம் போடும் வேடங்களைக் கிழித்து நாராக்குவதில் காட்டும் வேகம் அதிகம் பிடிக்கும். ஒரு குறுகிய அறிமுகத்திலேயே “நள்ளிரவு 12 மணிக்கு அழைத்தாலும் சிரித்தபடி பேசும்..” என்று ஒரு அறிமுகத்துடன் என்னை இந்த “பதிவெழுத வந்த கதை” தொடர் பதிவிற்கு அழைத்துள்ளார். நல்ல நட்புகளை தேடுவதில் எப்போதும் ஆவலாய் உள்ள எனக்கு இவை எல்லாம் மகிழ்வூட்டுவனவே. நானும் என் பங்குக்கு 4 பேரை அழைத்து வைக்கிறேன்.

தமிழன் கறுப்பி ரசனை பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய பேரின்பநாயகியின் மயக்கம் எனக்கு இன்னும் தீரவில்லை. உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக அவர் எழுதிய ஒரு கதையைப் பார்த்துவிட்டு, நாம் எல்லாம் என்ன பிழைப்படா பிழைக்கிறோம் என்று சலித்தது தான் மிச்சம் சென்றவாரம் என் பிறந்த நாளிற்கு அமர்க்களமான ஒரு வாழ்த்தை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார்.

கதியால் – கிடுகுவேலி என்ற வலைப்பதிவில் எழுதுபவர். என் நெடுநாள் நண்பர். கடல் கடந்து இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் அதிகம் நான் பேசிக்கொண்டு இருந்தது இவருடனாகத் தான் இருக்கும். ஈழத்து ஆலயங்கள், கிரிக்கெட் என்று கலந்து கட்டி எழுதுபவர். இன்னும் சுவையான பல விடயங்களை எழுதக் கைவசம் வைத்துள்ளவர்.

புல்லட் வலைப்பதிவுகள் எனக்குப் புதுப்பித்து தந்த நட்பு. சிறு வயதிலேயே சூட்டிகையானவர். ஒரு முறை மாலை நேர வீதி உலாவிற்கு நானும் தயாபரனும் ஆயத்தமான போது பிராக்குப் பார்க்க போகிறீர்களா? என்று கேட்டார். நாம் ஓமென்று சொல்ல, frock என்றால் பெண்கள் போடும் சட்டை, அப்ப சைட் அடிக்க போகிறீர்கள். அப்படித்தானே என்றார். அப்போது அவருக்கு வயது 10.

இன்னும் நிறையப் பேரை அழைக்க ஆசைதான். ஆனால் எத்தனை பேரிடம் திட்டு வாங்குவது. இப்போதைக்கு இவர்கள் மூவரும் திட்டினால் போதும்.




Monday, August 24, 2009

வடலி வெளியீடுகள் மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும்

1


என் முன்னைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போலவே வாசிப்பதற்கு உரிய மன நிலை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது போலவே தோன்றுகின்றது. அதிகம் வாசித்தேன் என்பதைவிட பரந்து பட்ட அளவில் வாசித்தேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கின்றது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக குடிக் கலாச்சாரம், மாற்றுப் பாலினர் தொடர்பான பதிவுகள் முன்வைக்கப்படுகின்றன. காலச்சுவடில் சுகிர்தராணி கவிஞர்கள் சந்திப்பை முன்வைத்து குடிக் கலாச்சாரம் பற்றிய ஒரு கட்டுரையை எழுத அதில் இருக்கும் உள்குத்து, வெளிக்குத்து போன்ற விடயங்கள் பலராலும் ஆராயப்பட்டு, லீனாமணிமேகலை X சுகிர்தராணி என்கிற தனிநபர் பிரச்சனைகள் எல்லாம் (அப்படித்தான் ஆராயப்பட்டடது) கூறப்பட்டு இப்போது லீனா மணிமேகலை இதுபற்றிய தனது கட்டுரை விரைவில் வெளியாக உள்ளதாக உறுதியளித்துள்ளார். இது பற்றி பேசும்போது உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்கள் புலம் பெயர் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு புத்தகம் வெளியிடுவதாகவும் லீனா குற்றஞ்சாட்டியுள்ளார். (இது போன்ற ஒரு கருத்தை தமிநதியும் கூறியதாக முன்பொருமுறை விகடனில் வெளியான அவரது பேட்டியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தனது பேட்டி திரிக்கப்பட்டிருந்ததாக தமிழ்நதி வெளியிட்ட மறுப்பும் அடுத்த விகடனில் வெளியானது. இது பற்றி முழுமையாக நினைவிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளவும்). உண்மையில் இது பற்றிய முறைப்பாடுகளை நானும் பல இடத்தில் கேட்டுள்ளேன். எழுத்தாளர்கள் மரியாதையுடன் நடத்தபடவேண்டும் என்கிற சில அடைப்படையான விவாதங்களுடன் பார்க்கும்போது இது நியாயமாக தெரிந்தாலும் இது பற்றிய ஒரு வேறுபட்ட பார்வையும் எனக்குள்ளது.

காலச்சுவடு, உயிர்மை போன்ற நிறுவனங்கள் தற்போது தமது பெயரை ஓரளவு திடப்படுத்தி, தமக்கென ஒரு சந்தையை உருவாக்கி உள்ளன. அது தவிர தீவிரமாக சந்தைப்படுத்தவும் செய்கிறார்கள். இப்படியான நிறுவனங்கள் ஊடாக புத்தகங்கள் வெளிவரும்போது அது நிச்சயம் புதுமுக எழுத்தாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே அமையும். தவிர ஒரு எழுத்தாளன், அறியப்படாத வரை அவனுடைய படைப்பினை வெளியிடுவதில் செய்யப்படுகின்ற சூதாட்டம் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியது. இது போன்ற புறக்காரணிகளும் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன. முன்பு ஜெயந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியபோது அது பற்றிய பலத்த விமர்சனங்கள் எழுந்தபோது வெகுஜனப் பத்திரிகை என்ற குதிரையில் ஏறிப் பயணிக்கும்போது நான் செல்கின்ற வீச்சம் அதிகமாகின்றது என்று ஜெயந்தன் கூறியதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். அதே கருத்துடனேயே மேற்சொன்ன குற்றச்சாற்றையும் அணுகவேண்டும். தமிழர்கள் உலகெல்லாம் பரவிக் கிடந்தும் வாசிப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்ற ஒரு சூழலில், பெரு நிறுவனங்களூடாக சந்தைப்படுத்தப்படும், முன்னெடுக்கப்படும் படைப்புகளும் படைப்பாளிகளுமே அதிக வீச்சில் அறியப்படுகின்ற ஒரு நிலை இருப்பது கசப்பான உண்மையே.



2



ஒரு உதாரணத்துக்கு நம் காலத்து ஈழத்துப் படைப்பாளிகள் இருவரை எடுத்துக் கொள்வோம். ஈழத்துப் படைப்பாளிகளுல் இன்று அதிகம் அறியப்பட்டவர் அ.முத்துலிங்கம். இந்தியாவில் அவருக்கு இருக்கும் வாசக வட்டம் பெரியது. அதற்கு காரணமாக அவர் ஈழத்து எழுத்தாளர் என்று பல ஈழத்தவர்கள் கொண்டாடும்போதும், ஈழத்தில் பிறந்தது தவிர அவரது எழுத்துகளில் ஈழத்து எழுத்துகளுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதே நேரம் அவரது எழுத்துக்களும் காலச்சுவடு, உயிர்மை, காலம், திண்ணை, தாய்வீடு, பதிவுகள் உட்பட்ட நிறைய இதழ்களில் தொடர்ச்சியாக வெளியாகின்றன. அவ்வப்போது ஆனந்த விகடனிலும், தீராநதியிலும் கூட வருவதுண்டு. இதுதவிர அவ்வப்போது இவர் பற்றி நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும் இவரது நண்பர் ஒருவரும் ஏதாவது எழுதிவைப்பார். சென்ற புத்தக சந்தையில் கூட இவரது “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” வெளியான போது அவரும் எழுதிவைக்க சாருவும் கூட எழுதிவைத்து, தனக்கு மட்டுமல்லாமல் ஜெயமோகனுக்கும் பிடிக்கக் கூடிய வகையில் இவரது எழுத்துக்கள் இருப்பதாக சொல்லிவைத்தார். அ.மு. வைப் பொறுத்தவரை அவர் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதையும் கருப்பொருளாக எடுப்பதில்லை. எதையும் அழகியலாக பார்க்கின்ற மகிழ்வூட்டும் பிரதிகள் அவர் எழுத்துக்கள். அதாவது முன்பொருமுறை உயிர்மையில் குடும்பங்களில் நிகழும் பாலியல் துஷ்பிரயோயங்களைப் பற்றி “அகில் ஷர்மா” என்பவர் எழுதிய An Obedient Father” என்ற புத்தகம் பற்றி எழுதும்போது, இவ்வளவு காலம் எடுத்து, உழைத்து எழுத்திய நாவலில் இப்படியான ஒரு விடயத்தைக் கருப்பொருளாக எடுத்துவிட்டாரே என்று கவலைப்பட்டு எழுதும் அளவுக்கு ஒரு gentleman writer இவர்.

இதே நேரம் கிட்டத்தட்ட இவருக்கு சமவயதினரான தேவகாந்தன் கவனிக்கத்தக்க அளவு நல்ல படைப்புகளைக் கொடுத்த போதும் கவனிக்கப்பட்டது மிகக் குறைவு. அவர் எழுதி, தேர்ந்த பல வாசகர்களால் சிலாகிக்கப்பட்ட “விதி”யும் சரி, தமிழின் மிக முக்கியமாக மறுவாசிப்புகளுள் ஒன்றான கதாகாலமும் சரி, இலங்கை பிரச்சனையை ஐந்து பாகங்களாக நாவல் வடிவில் தந்த கனவுச் சிறையும் சரி பெறவேண்டிய கவனிப்பில் சிறுபங்கைத்தன்னும் பெறவில்லை. இதற்கு இவரது நாவல்களைத் தாங்கிவந்த பதிப்பகங்களின் பிரபலமின்மையோ அல்லது மோசமான சந்தைப்படுத்தல்களோ கூட காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் அ.முத்துலிங்கம், மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் தமது முதலாவது புத்தகத்தை அறிமுக எழுத்தாளர் புத்தகவெளியீட்டுத் திட்டத்தை பின்பற்றிய மணிமேகலைப் பிரசுரம் மூலமாகத்தான் வெளிக்கொணர்ந்தார்கள். புத்தகத்தின் தரம் பற்றிய எதுவித மரியாதையும் மணிமேகலைப்பிரசுரத்துக்கு இல்லாதபோதும் அவர்களின் சந்தைப்படுத்தல் முறைகளும், உலக நாடுகளில் அவர்கள் ஒழுங்கு செய்யும் கண்காட்சிகளும் குறிப்பிடத்தக்கன. இது போன்ற காரணிகளால் ஒரு எழுத்தாளனுக்கு உருவாகும் கவனிப்பு, அவன் எழுத்துக்களை செழுமையாக்க உதவும்.


3


அண்மையில் வடலி பதிப்பகம் இலங்கைத் தமிழ் எழுத்துகளுக்கு ஒரு களமாக எதிர்காலத்தில் உருவாகும் என்கிற நம்பிக்கையை ஓரளவுக்கு உருவாக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து அகிலனின் மரணத்தின் வாசனை, கருணாகரனின் பலி ஆடு, கானாபிரபாவின் கம்போடியா என்கிற மூன்று புத்தகங்களை தபால் மூலம் பெற்றிருந்தேன். அகிலனின் மரணத்தின் வாசனை ஒரு கவிதைப் புத்தகம் என்பது போன்று பிரமை சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் த. அகிலனின் மரணத்தின் வாசனை என்று சொல்லப்படும்போது அதுவும் ஒரு கவிதை நூல் என்று கருதப்படும் வாய்ப்பு அதிகம். இது போன்று அவர் படைப்புகளைக் கைதுசெய்யும் தடையீடுகளை (கவிஞர் போன்ற குறியீடுகளை) அகிலன் கடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கருணாகரனின் பலி ஆடுகள் புத்தகம் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதால் வாசிக்க முடியவில்லை. ஏறத்தாழ என் ஒத்த ரசனை கொண்ட நண்பர் நன்றாக இருக்கிறாது என்றூ சிலாகித்ததால் எனக்கும் பிடித்துப்போக அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன. கானா பிரபாவின் கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி நிச்சயமாக நல்ல முயற்சி. இதற்கு முன்னர் இதயம் பேசுகிறது மணியன், லேனாதமிழ்வாணன், சிவசங்கரி, ஜெயகாந்தன் போன்றவர்கள் பயணக்கட்டுரைகளை தமிழில் எழுதினார்கள். சுஜாதாவும், அசோகமித்திரனும் தம் பயண அனுபவங்களை நாவல் வடிவில் (பிரிவோம் சந்திப்போம், மேற்கே ஒரு குற்றம் போன்ற சுஜாதாவின் நூல்களும், அசோகமித்திரனின் ஒற்றன்). நீண்ட கால இடைவெளியின் பின்னர் கானா பிரபாவின் கம்போடியா, இந்தியத் தொன்மங்களை கம்போடியாவில் தேடி காண்பதாய் அமைகின்றது. இது ஒரு அரிய முயற்சியாக இருந்தபோதும், இந்தப் புத்தக வடிவமைப்பு இன்னும் மேன்மைப் பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. தவிர, கானாபிரபா இணையத்தில் மலையாளத் திரைப்படங்கள் பற்றியும், நினைவு மீட்டல்களாகவும், நல்லூர் திருவிழாவை வைத்து எழுதிய பதிவுகளும் இதைவிட அதிகம் செறிவாகவும், சிறப்பாகவும் இருந்தன.

வடலி வெளியீடுகளின் அறிமுகவிழா கனடாவிலும் எதிர்வரும் வெள்ளி மாலை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 6 மாதங்களின் முன்னர் மரணத்தின் வாசனை பற்றிய பரபரப்பு இருந்த காலப்பகுதியில் இந்த வெளியீடுகள் நடந்திருந்தால் இன்னும் பயன் தருவதாக இருந்திருக்கும். எனினும், later always better than never. இனி வரும் காலங்களில் வடலி குழுவினர் இவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.



Sunday, August 9, 2009

ஈழப் போராட்டம் பற்றிய சில கட்டுரைகளும், சென்ற வாரக் குறிப்புகளும்


பெரும்பாலும் வாரம் ஒன்றில் ஏழு நாட்களும் வேலை என்பதாகவே திணிக்கப்பட்ட வாழ்வில் எப்போதாவது கிடைக்கின்ற ஓய்வு நாட்களும் சலிப்புடனேயே கடந்து செல்லுகின்றன. கொடுக்கப்பட்ட குறுகிய சில மணித்தியால ஓய்வுகளையே கொண்டாடிப் பழகிய மனதிற்கு அரிதாகவே கிடைக்கின்ற முழு ஓய்வு நாட்களை கொண்டாட தெரியவில்லையோ தெரியாது. சுதந்திரம் கிடைக்காதவர்களை விட கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாதவர்களே அதிகம் என்று ஏனோ தோன்றுகின்றது. சில நாட்களாகவே மையம் கொண்டிருக்கும் வெறுமை வலைப்பதிவில் கூட கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு அனுசரிக்கவில்லை. ஏமாற்றாங்களும், வெறுமைகளூமே வாழ்வின் நிரந்தரமோ என்ற எண்ணம் ஏனோ அடிக்கடி தலை தூக்கிவிடுகின்றது.

அதிகம் நேசிக்கப்பட்டவர்களுடன் கடந்த வார இறுதியில் ஒழுங்கு செய்யபட்ட BBQ Party கூட உறவுகளைக் கேள்விக்குள்ளாக்குவதோடு கசப்பானதாக முடிவுற்றது. எல்லாவிதத்திலும் கொண்டாடப்பட்ட நண்பன் தானே முடிவெடுத்த ஒரு கணத்தில், 12 ஆண்டுகளாக நான் பழகிய முறைமை பற்றி கேள்விக்குள்ளாக்கி என்மீது குற்றம் சாற்றப்பட்ட கணத்தில் எமக்கான நட்பினையே தூக்கில் போட்டுவிட்டதாய் உணர்ந்தேன். அதே தினம், அவனே கதைத்த விடயங்களை திடீரென்று அப்படி கதைப்பது பிழை என்று முடிவெடுத்த ஒரு கணத்தில் என்மீது குற்றம் சாற்றப்பட்ட போது ஏமாற்றம் தரும் இயலாமையை மறுபடி ஒரு முறை உணர்ந்து கொண்டேன். காதலையும், நட்பையும் கொண்டாடியவனுக்கு அவை விட்டுச் செல்பவை தீர்க்கவே முடியாத வலிகளே என்றூ தோன்றுகின்றது.



2



எதிலேயும் மனதை ஒட்டவைக்க முடியாமல் அலைக்கழித்த கடந்த சில தினங்களில் எனக்கு எப்பொதும் ஆதரவாய் இருந்தவை புத்தகங்கள் மட்டுமேதான். என் தனிமையைக் கொல்ல நான் எடுக்கும் புத்தக வாள்கள் ஒரு போது என்னைக் கைவிட்டதில்லை. சென்ற வாரம்தான் ஜே. பி. சாணக்யா வின் கனவுப் புத்தகம் என்ற சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்திருந்தேன். அவரது பல கதைகளை தனித் தனியாக வாசித்து இருந்தாலும் ஒரு புத்தகமாக வாசிப்பது இதுவே முதல் முறை. தலித் மக்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் உறவு முறைச்சிக்கல்கள் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட கதைகள் அவருடையவை. உயிர்மை இதழ் ஆரம்பித்த காலங்களில் அதில் வெளியான அமராவதியின் பூனை என்ற கதை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. பத்துக் கதைகள் அடங்கிய இந்தத் தொகுதியில் எனக்கு அதிகம் பிடித்த சிறு கதை “ஆண்களின் படித்துறை “ தான். கோடை வெயில் என்கிற கதை ஒரு கதையாக பிடித்திருந்தபோதும், யோசித்துப் பார்க்கையில் தன் கணவனின் வேலைக்காக தான் அண்ணா என்று அழைத்த உறவு முறைக்காரனுடனேயே வசந்தா உடலுறவு கொள்ளுகின்றாள் என்று வ்ரும் முடிவு தரும் தாக்கம், புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை நினைவூட்டுகின்றது. (இந்த முடிவை முன்வைத்து வியாகூல சங்கீதம் என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா புதுமைப்பித்தனை காய்ச்சி எடுத்திருப்பார்) இந்தக் கதைக்கு முடிவாக புரட்சிகரமாக கதையை முடித்து வைக்கிறேன் என்று வேறு விதமாக எழுதியிருந்தால் அங்கே ஒரு நாடகத் தன்மை வந்திருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், மனதளவில் இந்தக் கதையின் முடிவு அமைதியின்மையை ஏற்படுத்தியது உண்மை. சமீபகாலமாக அவர் பெரிதாக எழுதுவதில்லை என்று அறிந்தேன். சில வேளை அவர் ஈடுபட்டிருக்கும் உதவி இயக்குனர் பணிகள் காரணமாக அவரது எழுத்துப் பணி தடைப்பட்டிருக்கலாம். அதைக் கடந்து அவர் எழுதும்போது இது போன்ற நல்ல கதா அனுபவங்களையும், சமுக அமைப்பு பற்றிய அடிப்படையான சில கேள்விகளையும் நாம் அடையப்பெறலாம் என்றெண்ணுகின்றேன். (அவரின் என் வீட்டின் வரைபடம் புத்தகத்தை நண்பர் ஒருவரிடம் வாசிக்கக் கேட்டுள்ளேன். அதை வாசித்து விட்டு அது பற்றிப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்)


3


சில மாத இடைவெளியின் பின்னர் காலச்சுவடு ஆகஸ்ட் இதழைப் இந்த முறை வாங்கிப் பார்த்தேன். தமிழின் மிக மோசமான வணிக சூழ்நிலைகளூடாக தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு என்கிற இரண்டு இலக்கிய இதழ்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகாளாக வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே (உயிர்மையின் ஆகஸ்ட் இதழுடன் சரியாக 6 ஆண்ஃபுகள் நிறைவுறுகின்றது.) இடைப்பட்ட காலங்களில் காலச்சுவடு அவ்வப்போது செய்யும் சில “அரசியல்” வேலைகளால் மனம் வெறுத்து காலச்சுவடு படிப்பதை நிறுத்தினாலும், பின்னர் மீண்டும் படிக்கத் தொடங்கிவிடுவதற்கு காலச்சுவடில் வெளியாகும் நல்ல ஆக்கங்களும் காரணமாக இருக்கவேண்டும். அநாமதேயன் குறிப்புகள் என்ற பெயரில் கடந்த சில இதழ்களில் யாழ்ப்பாணத்து நிலவரம் பற்றி கட்டுரைகளைத் தொடர்ந்து இந்த மாதக் காலச்சுவடு இதழில் ஈழப் பிரச்சினை பற்றிய கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. கிட்டத் தட்ட இதழின் 75% ஆன பக்கங்களை இந்தக் கட்டுரைகளே எடுத்துவிடுகின்றன. இதில் ஈழப் போரின் இறுதி நாட்கள் – களத்தில் இருந்து ஒரு அனுபவப் பகிர்வு என்ற கட்டுரையில் நிறைய விடயங்கள் பகிரப்படுகின்றன. ஏற்கனவே தெரிந்தவர்கள் ஊடாக இது போன்ற நிறைய சம்பவங்களைக் கேட்டிருந்தாலும், ஒரு முக்கிய இதழில் வருவது இதுவே முதன் முறை என்று நினைக்கின்றேன். ஈழப் போராட்டம் பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடும் போது “ஒரு ஆதிக்க சக்திக்கு எதிராக போராட தொடங்கியவர்கள் தம்மை இன்னுமொரு ஆதிக்க சக்தியாக நிறுவியபோது முன்னிருந்தவர்களைப் போல / அதைவிட மோசமாக நடந்து கொண்டார்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். இதை தயவு செய்து புலி எதிர்ப்பு - தியாகம், துரோகம் என்கிற கண்ணோட்டங்களூடாக பார்க்கவேண்டாம். இப்படியான கறுப்பு வெள்ளைப் பார்வைகள் கூட இந்தப் போராட்டத்தின் பின்னடைவிற்கு ஒரு முக்கிய காரணமாகும். களத்தில் இருந்து பாதிக்கப் பட்ட மக்கள் சொல்பவற்றை, அவர்கள் புலிகள் தோற்றுப் போனதால் அப்படிச் சொல்லுகின்றார்கள் என்றோ, ராணுவத்துக்குப் பயந்து அப்படி சொல்லுகின்றார்கள் என்றோ, அவர்கள் எல்லாரும் புலிகளுக்கு ஆதரவளித்திருந்தால் வென்றிருப்பார்கள் என்றோ கூறி நிராகரிப்பது மிகுந்த வக்கிரம் உடையது. அங்கு இருந்த மக்கள் இரண்டு ராணுவத்தாலும் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்ற உண்மையை திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதை விடுத்து இப்படி எழுதும்போது காசு வாங்கி எழுதுகிறார் என்று குற்றஞ்சாட்டுவது முழுக்க முழுக்க தவறான மனப்பான்மையே. இப்படிக் காசு வாங்கி எழுதுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் எத்தனை பொருளாதார நெருக்கடிகளூடாக வாழ்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்த ஒருவர் அண்மையில் கூறிய போது எம்மவர்களை நினைத்து சீ என்று போய்விட்டது. அதுபோல சங்கரன் சித்தாந்தன் என்பவர் எழுதிய இலங்கை ஊடகங்கள் : ஓயாத போர் என்ற தலைப்பில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் பற்றியும் இலங்கை அரசின் அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில் உயிர்மையில் தீபச்செல்வன் எழுதிய “ஈழம் இன்று” என்ற கட்டுரை யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் பற்றிப் விரிவாக சொல்லுகின்றது. யுத்தம் அகோரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் ஆளாளுக்கு புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்கிற நிலைகளை எடுத்து அரசியல் கட்டுரைகாள் என்ற பெயரில் ஏதேதோ எழுதித் தள்ளி ஓய்ந்து போயிருக்கும் காலங்களில் யமுனா ராஜேந்திரன் (உயிர்மை, உன்னதம், இனியொரு போன்றவற்றில்) வளர்மதி (கீற்று) போன்றவற்றில் எழுதும் கட்டுரைகள் ஓரளவு நேர்மையுடன் பிரச்ச்னைகளை அணுகுகின்றன. வேறுபட்ட தளங்களிலும், நோக்குகளிலும், பார்வை கொண்டவர்களாலும் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும்போதுதான் ஓரளவு தெளிவைப் பெறமுடியும் என்று நினைக்கின்றேன். எதிர் எதிர் பார்வை கொண்டவர்கள் இடையே ஒரு பொருள் குறித்த் உரையாடல்கள் நடக்கும் போது அவற்றிற்கு இடையே இருக்கின்ற புள்ளியிலேயே பெரும்பாலும் உண்மை இருக்கின்றது என்பது எனது அனுபவம்.



4



எப்போதும் நட்பு, காதல் என்ற உறவுகளை புனிதப்படுத்தி அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே திரைப்படங்களைப் பார்க்கும் தமிழ் திரைப்பட சூழலில் குறுகிய கால இடைவெளியில் சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்ற இரண்டு திரைப்படங்கள் இந்த இரண்டு உறவுகள் பற்றியும் இன்னுமொரு கோணத்தைக் காட்டி, அதே நேரத்தில் ஜெயித்தும் காட்டியிருக்கின்றன. அதிலும் இத்திரைப்படங்களில் கதை நாயகர்களாக காட்டப்படும் நால்வரும் தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கென எதிர்பார்க்கும் எந்த கல்யாண குணங்களும் இல்லாமல், ரத்தமும் சதையுமாக எம்முடன் வாழும் சக மனிதர்களை நினைவுறுத்துகிறார்கள். இது போன்ற இயல்பான திரைப்படங்கள் 70களின் பிற்பகுதிக்குப் பின்னர் மீண்டும் அதிகம் வெளியாகத் தொடங்கியிருப்பது நிச்சயம் வரவேற்கவேண்டியது. அதே நேரம் சரணின் “மோதி விளையாடு” திரைப்படம் அவ்ருடைய முன்னைய திரைப்படங்களில் இருக்கும், வேகத்திற்கும், சீரான திரைக்கதைக்கும் ரசிகனான எனக்கு பெரும் வெறுப்பையே தந்தது. ஹரிஹரன் – லென்ஸியின் இனிமையான, வித்தியாசமான இசையும், ஹரிஹரன், லென்ஸியுடன் தேவா இணைந்து நடிக்கும் மோதி விளையாடு என்ற பாடலின் படமாக்கலும் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்தன. சரணின் திரைப்படங்களில் இருக்கும் இயல்பான நகைச்சுவை கூட தொலைந்து சந்தானம் “அறுத்தெடுத்ததை” சகிக்க வேண்டி வந்தது. மற்றொரு புறம் வைகை என்கிற படம் பற்றி அதிகம் சாதகமான விமர்சனங்கள் வெளிவந்திருந்தன; ஆனால் படத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலனின் நினைவாக காலம் எல்லாம் காத்திருக்கும் முடிவெடுத்த கதாநாயகி என்பதைத் தவிர பெரிதாக எதுவும் புதிதாக சொல்ல முடியவில்லை திரைக்கதையின் வேகமும் மிக மந்தமாகவே உள்ளது. கதாநாயகனின் குடும்பம் பற்றிய பயம் காரணமாக தற்கொலை செய்ய முயன்று, கடைசியில் ஊரைவிட்டு வெளியேறி ஒளித்து வாழும் நாயகி கடைசியில் நாயகி ஊர் திரும்பும் போது, நாயகி இறந்துவிட்டாள் என்றூ நம்பிய நாயகன் தற்கொலை செய்து இறந்து விட, அவனின் நினைவாக நாயகி கடைசிவரை இருக்கின்றாள் என்றூ திரைப்படம் முடிகின்றது. இதுவரை காலமும் திரைப்படங்களில் நாயகி செய்ததை இதில் நாயகன் செய்வதாகவும், நாயகன் செய்ததை நாயகி செய்வதாகவும் காட்டியதைத் தவிர இத்திரைப்படத்தில் பெரிதாக எதையும் ரசிக்க முடியவில்லை அதே நேரம், இப்படிக் காட்டியது கூட மிகப் பெரிய மாற்றம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.