1
சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரியா நடித்த ஸ்ரீ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம் அப்படத்தின் இயக்குனர் புஷ்பவாசகன் பத்திரிகை பேட்டி ஒன்றில் ”சே குவேரா, ஹோசிமின், பிரபாகரன் போன்ற புரட்சியாளர்களை பார்த்து நாம் வியந்திருக்கிறோம், ஆனால் அவர்கள் எப்படி, எதன் தூண்டலால் புரட்சியாளர் ஆனார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. உலக புரட்சியாளார்கள் எப்படி உருவானார்கள் என்று இப்படம் சொல்லும்” என்று சொல்லியிருந்தார். புது இயக்குணர் வேறு. சூர்யா கூட அப்போதுதான் நந்தாவில் நடித்து முடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார். எனவே முதல் நாளே அத்திரைப்படத்தை பார்க்க பெரும் எதிர்பார்ப்புடன் சென்றேன். அத்தனை எதிர்பார்ப்பும் புஸ் என்றாகி படம் இயலுமானவரை சொதப்பலாக எடுக்கப்பட்டிருந்தது. அனேகமாக சூரயாவின் மற்றும் அவர் ரசிகர்களின் ஞாபக இடுக்குகளில் இருந்து இப்படமே மறைந்து போயிருக்கும். அதற்கு பிறகு புஷ்பவாசகனும் வேறுபடம் ஒன்றும் எடுக்கவில்லை. தயவுசெய்து அவர் எங்கிருந்தாலும் உடனடியாக “the motor cycle diaries” திரைப்படத்தை பார்ப்பது நல்லது. அவ்வளவு அருமையாக சே என்கிற மகா புரட்சியாளன் எப்படி ஒரு புரட்சியாளனாக உருவானான் என்று படிப்படியாக ஆற்றியுள்ளார் இயக்குணர் Walter Salles.
2சே பற்றி சிறு வயதில் இருந்தே துண்டு துண்டாக பல விடயங்களை அறிந்தும் படித்தும் வந்துள்ளதால் “சே” என்கிற விம்பம் மீது தீவிரமான ஒரு ஈர்ப்பு இருந்தேவந்தது. தொடர்ந்து சே பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறும் அவரது கனவிலிருந்து போராட்டத்துக்கு புத்தகமும் வாசித்தபின்னர் உலகப் புரட்சிகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி போல சொல்லப்படுகின்றன அவர் பற்றியும், அவரது புரட்சிகள் பற்றியும் நிறைய அறிய முடிந்தது. ஒரு மென்மையான, கூச்ச சுபாவம் கொண்ட, சதா ஆஸ்த்துமாவால் வாடுகின்ற Ernesto Guevara (1928 – 1967) எப்படி உலகமே வியக்கும் சே என்கிற தலைவனாக மாறினான் / மாற்றப்பட்டான் என்று தெளிவாக காட்டப்பட்டுள்ளது. படம் ஸ்பானிஷ் மொழியில் இருந்தாலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் பெருமளவு தடங்கள் இன்றி ஒன்றித்து படம் பார்க்க முடிகின்றது.
தமது மோட்டர் சைக்கிள் பழுதடைந்து பின்னர் பெரு நோக்கி செல்லும்போது வேலை தேடி செல்லும் கணவன் – மனைவியை காண்கின்றனர். அப்போது அவர்கள் தாம் எப்படி அடிமையாக்கப்பட்டோம் என்று சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட்களாய் இருந்ததற்காக தாம் நசுக்கப்பட்டோம் என்றும் பல சக கம்யூனிஸ்ட்கள் காணாமல் போய்விட்டனர் என்றூ தெரிவிக்கின்றனர். வேலை கிடைக்குமா என்பதே தெரியாமல் பயணிக்கும் அவர்களின் நிலை “சே”யை உலுக்குகின்றது. இந் நேரம், அவர் முகம் இறுக்கமடைவதையும், தன் ஆஸ்துமாவையும் பொருட்படுத்தாமல் தன் குளிருக்கான ஆடைகளை அந்த தம்பதியரிடம் சே வழங்குவதையும் அவர் மனநிலையில் உருவாகும் மாற்றத்தை வெளிக்காட்டுகின்றது. தொடர்ந்து வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது தாகம் தீர்க்க தண்ணீர் கூட கொடுக்காமல் அழைத்து செல்லும்போது அது பற்றி கேள்வி எழுப்புகின்றார், தொடர்ந்து அந்த வாகனத்துக்கு கல்லால் எறிந்து தன் எதிர்ப்பையும் காட்டுகின்றார். மக்கள் உரிமைகளுக்காக சே வன்முறையை கையெடுக்கும் முதல் கட்டம் அது.
பின்னர் பெருவில் மக்களின் நிலை அவரை பெரிதும் பாதிக்கின்றது. இன்கா நாகரிகம் சார்ந்த அந்த மக்களுக்கு வானசாஸ்திரம், மருத்துவம், கணிதவியல் போன்ற துறைகளில் ஆழமான அறிவிருந்தும் துப்பாக்கி என்கிற ஒரே வல்லமை கொண்டு அனைத்து மக்களும் அதிகாரத்தின் கீழ் ஒடுக்கப்பட்டமை கண்டு வேதனை அடைகின்றார். இதில் இவர் எழுப்பும் What would America look like today if things had been different? என்ற கேள்வி இன்று வரை எல்லார் மனதுள்ளும் உள்ளது. (ஓபாமா எழுப்பிய மாற்றம் தேவை என்கிற கோஷம் கூட இந்த மனநிலையின் வெளிப்பாடுதான்).
படத்தின் மிக முக்கியமான தருணங்கள் சில படத்தில் இறுதிப்பகுதியில் தொழு நோய் ஆஸ்பத்திரியில் இடம்பெருகின்றன. இதில் நடைபெறும் ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாக கவனிக்கப்படவேண்டியவை. “சே” என்கிற பேராண்மை கச்சிதமாக கட்டியெழுப்பப்படுகின்ற சம்பவங்கள் அவை. தொழு நோயளிகளுடன் விளையாடியும், கைகுலுக்கி அரவணைத்தும் பழகும்போது அவரது மனிதாபிமானமும், ஆற்றின் மறுகரையில் இவரது பிறந்த நாளை கொண்டாடும்போது இவர் ஆற்றின் குறுக்காக நீந்தி (கவனிக்கவும் இவர் ஒரு ஆஸ்துமா நோயாளி) தொழு நோயளிகளுடன் சேர்வது ஒரு அருமையான இடம். இது இவர் மன உறுதியை காட்டுவதுடன் இவர் கரை ஏறும்வரை இவரை அந்த முயற்சியை கைவிடும்படி சொல்லும் இவர் நண்பர், கரையேறியவுடன் “I always knew he’d made it” என்று சொல்வது சாதாரண மக்களின் குணவியல்பை பிரதிபலிக்கின்றது.
வரலாற்றின் பக்கங்களில் அழிக்கவேமுடியாத தடங்களை ஏற்படுத்திச்சென்ற சே என்கிற தனிமனிதனின் கதையை சே எப்படி உருவானார் என்பதுவரை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குணர். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, ஆளுமை, மனித நேயம் என்று ஒரு தலைவனுக்கு தேவையான அத்தனை குணமும் கொண்டு போராடிய சே பற்றி சுருக்கமான ஒரு அறிமுகம். ஒப்பீடற்ற ஒரு ஆளுமை பற்றி அறிந்த திருப்தியை இந்த திரைப்படம் அறிந்தாலும் எமது சமுதாயத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற ஆளுமைகள் பற்றிய நேர்மையான படைப்புகள் எபோது வெளிவரும் என்கிற கவலை எழுவது உண்மைதான்
3
Slum Dog Millionaire திரைப்படம் பெரு வெற்றியையும் பலத்த கவனத்தையும் பெற்று வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. கோல்டன் க்ளோப், பாஃப்டா விருதுகளை தொடர்ந்து ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் ஆஸ்காரிற்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் இந்தியர்களும் தமிழர்களும் ஆஸ்காரை எதிர்பார்த்தபடி இருக்கின்றனர்.
இந்நிலையில் வழமைபோல இந்தப்படம் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை பார்க்கவேண்டாம், இந்தியாவின் மரியாதையை இழிவு செய்கின்றார்கள், இந்தியாவில் உள்ள வறுமையை உலகமெல்லாம் கூவி கூவி அம்பலப்படுத்தி காசு உழைக்கின்றனர் என்கிற ரீதியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. படத்தின் தலைப்பு ஏழை / சேரி மக்களை அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி இத்திரைப்படம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக வெளிநாட்டு முதலீடுகளுடன் மூன்றாம் உல்க நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்துவருகையில் இதன் பின்னாலிருக்கும் நியாயத்தையும் அரசியலையும் நாம் கவனிக்கவேண்டும். இப்படியான படங்கள் அவற்றை பார்ப்பவர்களிடையே இந்தியா ஒரு வறுமை பீடித்த நாடு, ஏழைகள் மீது பணக்காரர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் தொடர்ந்து நிலவும் ஒரு நாடு, சேரிகளிலும், தெருவோரங்களிலும் சுகாதாரம் மிக மோசமாக உள்ள நாடு போன்ற கருத்துகளை உருவாக்கலாம். இதனை முன்வைத்து பார்க்கின்றபோது இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி நிலை பற்றிய கற்பிதங்களிலும், பிரமிப்புகளிலும் இருப்போருக்கு இந்தியா பற்றிய விம்பம் மாற்றி அமைக்கப்படலாம். பொதுவாக மேலைநாடுகளில் வாழ்பவர்களுக்கு பட்டினியும், பிச்சை எடுப்போர் நிறைந்தவை, அசுத்தமான தெருக்களும் நோய்வாய்பட்ட மக்களும் நிறைந்த நாடுகள் என்று மூன்றாம் உலக நாடுகள் பற்றிய பொதுப் புத்தி இருக்கின்றபோது இப்படியான படங்கள் அவர்களின் எண்ணத்தை உறுதி செய்யும். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இவர்களின் போராட்டங்களின் பின் இருக்க கூடிய நியாயங்களை அறியமுடிகின்றது (இந்த சமுதாய அக்கறையே அவர்களின் ஒரே நோக்கமாக இருப்பின்).
கனடாவில் வார நாட்களில் இரவு 9:30 க்கு ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இந்தியர்களின் வாழ்கை முறையை மையமாக காண்பிக்கப்படுகின்றது. இதனை பிறநாட்டை சேர்ந்த எனது சக ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொடரில் வேற்று மதத்தவரை பார்த்தாலே உடனே முகத்தை திருப்பிக் கொண்டுபோய்விடுவார்கள், அவர்களின் சாதிவெறி, காதலித்து பிற சமூகத்தை சேர்ந்தோரை திருமணம் செய்ய விரும்பும் மகனிடம் “நீ எனது மகனுமில்லை, உனக்கு எனது சொத்தில் பங்குமில்லை” என்று கூறும் தந்தை என்று காட்சிகள் போகின்றன. இதனை பார்த்த என் சக நண்பர், நீங்கள் எல்லாரும் இப்படியா?” என்று மிகப்பெரும் ஆச்சரியங்களுடன் என்னை கேட்டார். ஒரு காலத்தில் அப்படி இருந்தது, இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது என்று ஒருவாறு சமாளித்தேன்.
ஆனால் உண்மையில் எத்தனை சதவீதம் மாறிவிட்டது என்ற கேள்விக்கு மரியாதை தரும் பதில் வராது என்பதுதான் உண்மை. வறியவன் மேலும் வறியவனாகிக்கொண்டு போகின்றான், பணக்காரன் மேலும் பணக்காரனாகி வருகின்றான். இதனால் இந்தியா ஒளிர்கின்றது போன்ற கோஷங்கள் ஒலிக்கின்ற அதேநேரம் அடிப்படை உரிமைகளுக்காக கூட குரலெழுப்ப தெரியாமல் நைந்துபோகும் ஒரு சமுதாய அமைப்பு பெருகிவருகின்றது. அவர்கள் அப்படி இருக்கின்றார்கள் என்று ஆளும் வர்க்கம் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை, தாம் அடிமையாக இருக்கின்றோம் என்று அவர்களும் ஒருபோதும் உணரப்போவதில்லை. இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதை விட மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும். அதைவிட்டு இப்படி வழக்கு போடுவது என்று காலத்தை செலவழித்தால் காலமெல்லாம் வழக்குப்போட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.