Saturday, December 26, 2009

நானும் என் வாசிப்பும்.

எப்போது நேரம் கிடைத்தாலும் ஏதோ பெரும் கடன் போல உடனே ஏதாவதொரு புத்தகத்தை தூக்கி படித்துக்கொண்டிருக்கும் என்னை ஒரு விநோத ஜந்துவாக அடிக்கடி என் நண்பர்கள் பார்ப்பது வழக்கம். சற்று விலத்தியிருந்து யோசிக்கும்போது எனக்கும் என்னுடைய வாசிப்புப் பழக்கம் பற்றிய ஆதாரமான சில கேள்விகள் இருந்தாலும் இந்த தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தால் நான் அடைந்தது அதிகம். அதிலும் போரின் உக்கிரத்தால் வேறு எந்த விதமான பொழுது போக்கு வசதிகளும் கைகூடாத அந்த நாட்களில் புத்தகங்கள் என்னை சில ஆண்டுகளுக்கு தத்து எடுத்திருந்தன.

சிறுவயதில் கொழும்புவில் இருந்த எ
னது பெரியப்பா மூலமாக எமக்கு நிறைய புத்தகங்கள் வந்து சேரும். பெரியப்பா தனது கல்லூரிப் படிப்பை இந்தியாவில் படித்தவர். தமிழ் நாட்டில் மொழிப்போர் வீறு கொண்டிருந்த அந்த நாட்களில் திமுகவுடன் பெரும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர் கொழும்புவில் இருந்து எமக்கு அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பூந்தளிர், பாலமித்ரா போன்ற சஞ்சிகைகளையும், பல புத்தகங்களையும் தொடர்ந்து அனுப்புவார். இதனால் புத்தகங்களுடனான எமது தொடர்பு வலுவாகவே வளர்ந்துவந்தது. அந்த நாட்களில் எமது வீட்டில் எமது விவாதங்கள் கூட புத்தகங்கள் மீதானவையாகவே இருந்துவந்தன. அது போல பெரும்பாலான நண்பர்கள் கூட புத்தக வாசிப்பின் அடிப்படையிலேயே அமைந்தனர். கிட்ட தட்ட சத் சங்கம் என்றூ சொல்லப்படுவது போன்ற ஒரு அமைப்பு இது. போரின் கொடுமை என்னை ஈழத்தை விட்டு தூக்கியெறிந்த போது, இந்த சத் சங்கத்தைவிட்டும் நான் தூக்கி எறியப்பட்டேன். தனி மனிதனாக என் வாழ்வின் அடிப்படைகளை அசைத்த ஒரு தாக்கம் இது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு வன வாசத்துக்குப் பின்னர் அண்மையில் கனேடிய எழுத்தாளர்களான செல்வம், டிசே தமிழன், நிவேதா, தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன் போன்றவர்களுடன் அருமையான வாய்ப்புகள் வந்துள்ளன. எதிர் வரும் நாட்களின் அழகிய சில த்ருணங்களை அமைத்துத் தரப்போகின்ற அறிமுகங்கள் இவை என்கிற நம்பிக்கை ஆழமாக உண்டு.


2

சலனங்கள் தொலைந்த அமைதியான நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடந்து போன நினைவுகளை மீட்டிப் பார்க்கும் சுபாவம் அனேகமாக எல்லாரிடத்திலும் இருக்கின்றது. அண்மையில் வாசித்து முடித்த சில அருமையான புத்தகங்கள் தந்த அமைதிக்கும் / அமைதி இன்மைகளிற்கும் (முக்கியமாக the long way gone வாசித்து முடித்த போது பெரும் அமைதியின்மை ஏற்பட்டது) நடுவே என் சிறு வயதில் வாசித்த சில புத்தகங்களின் நினைவுகள் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. ஆகச் சிறு வயதில் ஒன்று, இரண்டு..... பத்து வரை எண்ணத் தெரியும் என்று பெருமையாக சொல்லியிருக்கின்றோம். பின்னர் உலகிலேயே பெரிய எண் 100 என்று சில காலம் நினைத்திருக்கின்றோம். திடீரென்று ஒருவன் மில்லியன் என்று ஒரு எண் இருக்குதாம். ஒன்றுக்குப் பின்னால 6 சைபராம் என்று சொன்னபோது அவன் ஒரு பிறவி மேதை போன்றே காட்சி தந்தான். அதையும் தாண்டி, சிவபெ
ருமானின் அடியும் முடியுமான இலக்கம் என்று ஒரு இலக்கத்தை சொல்லி இன்னொருவன் பேராச்சரியங்களுக்குள் எம்மை தள்ளினான். இப்போது நினைக்க சிரிப்பாக இருந்தாலும், அந்த வயதில் அது தானே எமக்கான நிஜம். அது போல பால்யத்தில் வாசித்த புத்தகங்கள் எல்லாம் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை இழந்திருந்தாலும் அந்த வயதில் அவை எழுப்பிய உணர்வுகள் நிஜம்.

நான் முதல் முதல் வாசித்த நாவல் கே. டானியல் எழுதிய தண்ணீர். அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு எந்த வித தகுதியும் இல்லாத 10வது வயதில் அதை வாசித்தேன். மிக ஆழமான வாசிப்புக்குரிய அந்த நாவலின் ஆழத்தை அப்போது அடைய முடியாத
போதும் அடித்தட்டு மக்கலின் வாழ்க்கை முறையை அறிய அந்த நாவல் உதவியது. இதன் பின்னர் செங்கை ஆழியாணின் காட்டாறு. இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் ஏனென்று சொல்லத் தெரியாத சில காரணங்களால் என்னை இந்த நாவல் அதிகம் கவர்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து செங்கை ஆழியானின் நிறைய புத்தகங்கள், குறிப்பாக கிடுகு வேலி, பிரளயம், யானை, ஆச்சி பயணம் போகிறாள், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்றனவற்றை வாசித்தேன். அந்த காலப்பகுதியில் இலங்கையில் இந்தியப் புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருந்தது என நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை. இதனால் எனது வயதுக்கு சற்றும் பொருத்தமில்லாத சொந்தக்காரன், மலைக்கொழுந்து, செ. கணேசலிங்கனின் நிறைய புத்தகங்கள் (முக்கியமாக செவ்வானம், போர்க்கோலம் போன்றன) என்றூ வாசித்துத் தள்ளினேன்.

இந்தியப் புத்தகங்களில் தொடக்க காலத்தில் வாசித்தவை ராஜேந்திரகுமாரின் “வரமாட்டியா மம்மி?” என்றா குறு நாவல். இந்தக் கதையின் முடிவு மனதளவில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு முறை இதே கதையை வாசிக்கவேண்டும் தேடிவருகிறேன். கிடைக்கவில்லை. அதுபோலவே அகிலனின் கொள்ளைக்காரன், பால் மரக் காட்டினிலே, மு. வரதராசனின் மண் குடிசை, கரித்துண்டு, ரா. கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த கையில்லத பொம்மை என்ற கதை என்று நிறைய புத்தகங்களை 90 ஆண்டு போர் மீண்டும் வெடித்திருந்த காலப் பகுதியில் வாசித்தேன். இதற்கு முன்னரே 1987ம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் போர் உக்கிரமடைந்திருந்த காலப் பகுதியில் சத்திய சோதனையையும் வாசித்திருந்தேன். அந்த வயதில் (அப்போது 8 வயது) வாசித்து முடித்தேனே தவிர அதில் சொல்லப் பட்ட விடயங்கள் பெரும்பாலும் புரியவேயில்லை. ஆனால் 91,92ல் வெறி பிடித்தது போல ஒன்றன் பின்னர் ஒன்றாக பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பாண்டிமா ராணி, கடல் புறா என்று வாசித்துத் தள்ளியபோது அவை இலகுவாக புரிந்தே இருந்தன. இதனால்தான் முன் கதைச் சுருக்கத்தில் பாலகுமாரன் தான் 13 வயதிலேயே பொன்னியின் செல்வன் வாசித்தேன் என்று ஆச்சர்யமாக சொல்லும்போது இதிலென்ன ஆச்சர்யம் என்றுதான் தோன்றியது. உண்மையில் இலங்கையில் பெரும்பாலான வாசிப்புப் பழக்கம் இருப்பவர்கள் தம் 12 / 13ம் வயதிலேயே கல்கியை வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கதைக்கும் போது பொன்னியின் செல்வன் வாசித்தோம் என்பதை விட எத்தனை தர்ம் வாசித்தோம் என்றுதான் பேசிக் கொள்வது வழக்கம். உண்மையில் பொன்னியின் செல்வனை அது கல்கியில் தொடராக வந்த போது வரும் சித்திரங்களுடன் பார்ப்பது எப்போதும் ஒரு சுகமான அனுபவ்ம்தான். வர்த்தமானன் பின்னர் மலிவு விலைப் பதிப்பாக பொன்னியின் செல்வனை எந்தச் சித்திரங்களும் இல்லாமல் வெளியிட்டார்கள். சப்பென்றுதான் இருந்தது.

இதற்கு அடுத்த காலகட்டத்தில் அதாவது என் 15வது 16வது வயதுகளில் பாலகுமாரனுக்கு தாவினேன். அந்தக் காலம் சுஜாதாவை தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தகாலம். முதன் முதலாக பாலகுமாரனின் நெல்லுக்கு இறைத்த நீர் புத்தகம் வாசித்ததாய் ஞாபகம். விசாகன் வீட்டில் இருந்
து திரும்பி ஒரு செக்கல் பொழுதில் ஒரே அமர்வில் வாசித்து முடித்த புத்தகம். அதன் பிறகு பாலகுமாரனைப் படிப்பதே தலையாய கடமை என்று வீட்டில் தேடித் தேடி ஒவ்வொரு பாலகுமாரனின் புத்தகமாய் வாசிக்கத் தொடங்கினேன். உள்ளம் கவர் கள்வன், வன்னி மரத்தாலி, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, க்டற்பாலம் சிறுகதைத் தொகுப்பு என்று வாசிக்க வாசிக்க ஆச்சரியங்களையே அள்ளி இறைத்துச் சென்றார் பாலகுமாரன். இதன் பிறகு கொழும்பு வந்து கனடா வந்து இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், சினேகமுள்ள சிங்கம் என்று வாசித்த பாலகுமாரனின் நாவல்கள் பாலகுமாரனை மிஞ்சி எந்த எழுத்தாளனும் வரப் போவதில்லை என்றே என்னை அப்போது எண்ண வைத்தது. பின்னர் “ஆப்பிள் பழம் உருட்டி விடப்பட்ட விளைவோ என்னமோ” அவரது எழுத்துகள் பிடிக்காமல் போக ஆரம்பித்தது. இது பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன். (ஒன்று, இரண்டு)

கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் கொழும்புவில் நான் இருந்தபோது பெரியப்பாவுடன் அதிகம் கதைத்து அவருக்கு இருந்த திராவிட இயக்கங்கள் மீதான பற்றால் நான் திராவிட இயக்க புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். கருணாநிதி எழுதிய கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் வாசித்து இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் முரசொலி இணையத் தளத்துக்கு சென்று உடன்பிறப்புக்கு கடிதத்தை வாசிப்பதை தவறாமல் செய்து வந்தேன். உண்மையில் திராவிட இயக்க எழுத்துக்களை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்ததால் எனக்கு ஏற்பட்ட முக்கிய பலன் அதன் போலித்தனங்களை அறிந்து கொண்டது தான். திராவிட இயக்கங்கள் என்று மட்டுமல்ல, நம்பிக்கை அதிகம் வைத்து நாம் கொண்டாடிய அமைப்புகள் பின்னர் எவ்வாறு மக்கள் நலன் என்ற விடயத்தில் இருந்து நீர்த்துப் போனார்கள் என்ற அனுபவத்தை 95/96 காலப் பகுதியில் இருந்து ஈழத்திலும் கண்டு வருகிறேன். அமைப்புகள் எல்லாமே எடுக்கும் முனைவுகளும், மு
ன்னெடுப்புகளுமே தம்மை அமைப்பு ரீதியாக நிலையாக்கவே அன்றி மக்கள் நலனை முன்வைத்தல்ல என்பதை காலம் எமக்கு திரும்ப திரும்ப அனேக ரணங்களுடன் காட்டியே வருகின்றது.

உண்மையில் எனது வாசிப்பு அனுபவத்தில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம் முக்கியம் வாய்ந்தது. கனடா வந்த ஆரம்ப காலங்களில் எனக்கு வாசிப்புப் பழக்கம் உள்ள எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு தோழி இருந்தாள். அவளுடனான நட்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஈழத்து வாசிப்பு அனுபவத்தின் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்த பால
குமாரனும், திராவிட எழுத்துக்களும் மேற்கொண்டு படிக்கவே முடியாத அளவுக்கு சலிப்பூட்டுவனவுமாக மாறி இருந்தன. இந்த நேரத்தில் குமுதமும், விகடனும் வாசித்து என் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்வதே அதிக சாத்தியமூட்ட்வதாக இருந்தது. ஆனால் நான் மாற்றாக தேர்ந்தெடுத்தது தன் கட்டுரைகளிலும், சமயங்களில் கணேஷ் – வசந்த் கதைகளிலும் கூட சுஜாதா நிறைய எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். மெல்ல அவர் அறிமுகம் செய்து வைப்பவர்களை குறித்துக் கொண்டு அவற்றை வாசிக்கத் தொடங்கினேன். சுஜாதாவைப் பாப்பனப் பன்னாடை என்றும், எழுத்துலக விபச்சாரி என்று திட்டினார்கள், அப்படித் திட்டுவதையே ஒரு சுய மோகமாகக் கொண்டு மகிழ்ந்தார்கள். இவர்கள் எல்லாரும் ஒரு முறை இதய சுத்தியுடன் யோசிக்க வேண்டும். இப்போது அவர் செய்த பணிகளை யார் செய்கிறார்கள். அவரில் நீங்கள் கண்ட தவறைப் போல பன்மடங்கு தவறுகளை உங்களிலும் இன்னொருவர் காட்டமுடியும், அப்போது சுட்டிக் காட்டுபவர் உங்களுக்கு சொல்லும் பேர்கள் நீங்கள் சுஜாதாவை வசையாடிய அதே வரிகளாகத் தான் இருக்கும். வெகுஜன எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் பாலமாக இருந்தவர் சுஜாதா. அந்த இழப்பு இன்னும் சில ஆண்டுகளிலேதான் அதிகம் உறைக்கும்.

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் என் வாசிப்பு
மன நிலை முற்றிலும் மாறி இருக்கின்றது. அல் புனைவுகளை வாசிப்பதில் தான் அதிகம் ஈடுபாடு வருகின்றது. அ-புனைவுகளை வாசிப்பதன் முக்கியத்துவத்தை நண்பர் அந்நியனும் அதிகம் வலியுறுத்தி இருந்தார். போதிய நேரம் கிடைக்காத போதும், கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பு அனுபவமாக மாற்றியே வருகின்றேன். பெரும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் சில எழுத்துகள் ஏமாற்றங்களாய் முடிவதும் உண்டு. ஜி. நாகராஜன் மறைந்த பின்னர் அவரது கையெழுத்தில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டதான முன்னுரையுடன் அவரின் சிறுகதைகள் தொகுப்பில் இருக்கும் “ஆண்மை” கதை முழுக்க முழுக்க ஏமாற்றமாயே போனது. குடும்பத்தின் ஏழ்மைக்காக தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கும் பெண்ணின் நிலை அறிந்து அவளை விட்டுச் செல்வதுதான் ஜி. நாகராஜன் சொல்லும் ஆண்மையோ என்றே தோன்றியது. ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்து கிடைப்பது வாழ்க்கை மட்டுமல்ல, இலக்கியமும்தான்.

என் நட்சத்திர வார அறிமுகத்தில் சொன்னது போலவே


The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
- Robert Frost




Thursday, December 24, 2009

அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள் மற்றும் எஸ். ராமகிருஷ்ணனின் விகடன் கட்டுரை



சென்றவார ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வெளிநாட்டுக்காரர்கள் அறிவு ஜீவிகளா என்ற கட்டுரை இடம்பெற்று இருக்கின்றது. வெளிநாட்டுக்காரர்கள் பற்றி எம்மவரிடையே இருக்கின்ற பொதுப் புத்தி பற்றி இந்தக் கட்டுரையில் அலசப்பட்டிருக்கின்றது. இது போன்ற பொதுப் புத்திகளை நாமும் நிறைய அவதானித்தே இருக்கின்றோம். அதிலும் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் அதிக
ம். வெள்ளையர்கள் எல்லாரும் குடிப்பவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் எப்போதும் துப்பாக்கியுடனே திரிவார்கள் என்றும் இவர்கள் எல்லாம் பாலியல் தேவைகளுக்காக இலகுவாக அணுகக்கூடியவர்கள் என்றும் எம்மிடையே இன்றும் அபிப்பிராயம் இருக்கவே செய்கின்றது. 10 ways to find a Srilankan என்றோ, 10 ways to find an Indian என்றோ அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் கூட இது போன்ற பொத்தாம் பொதுவான விடயங்களையே கேலியாக சொல்கின்றன. இது போன்ற எந்த மின்னஞ்சல்களையும் இன்னொருவருக்கு அனுப்பி அஞ்சல்-ஓட்டத்தில் பங்கேற்பதில்லை என்பதில் அதிகம் உறுதியாகவே இருக்கின்றேன். பாம்பாட்டிகளும், பிச்சைக்காரர்களும் நிறைந்த நாடு என்று இந்தியா மேற்கு நாட்டவர்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படுவது போலத்தான் அவர்கள் மேல் நாம் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களும் என்று உணரவேண்டும். பொதுவாக எந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிற சமூகத்தவர் மீது இது போன்ற முன் அனுமானங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்ற போதும், இந்த முன் அனுமானங்களையும், பொதுப் புத்திகளையும் விட்டு எம்மை விலக்கிக் கொள்வது எமது பார்வையை ஆரோக்கியமாக்கும்.

பொதுவாக கயானாவைச் சேர்ந்தவர்கள் என்றாலே அவர்களை குடியும், கும்மாளமும் நிறைந்த வாழ்வை வாழ்பவர்கள் என்றுதான் பொதுவாக புலம்பெயர் மக்களிடையே அடையாளம் இருக்கின்றது. இவர்களில் (Guyanese) பெரும்பாலோனோர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளாக தாய் நாட்டை விட்டு வாழ்ந்து, ஆங்கிலத்தையே பிரதான மொழியாக ஏற்று வாழ்பவர்கள் இவர்கள். ஆனால் எனது Guyanese நண்பர் ஒருவர் ஊடாக மதுவே அருந்தாத, இன்றூவரை காலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் செய்து, காலைப் பூஜை செய்து, ஆசாரமானவர்கள் என்று பொது மட்டத்தில் தீர்மாணிக்கப்படும் எல்லா விடயங்களும் செய்தே அலுவலகங்களுக்குப் புறப்படுபவர்களை நான் அறிவேன். இதில் கவனிக்க வேண்டிய விடயம், இவர்கள் எவருமே புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவ்ர்கள் அல்லர் என்பது.

சென்றமாத வைகறையில் கன்னிகா (ஆங்கிலத்தில்) எழுதி இருந்த கட்டுரை ஒன்றில் கூட (Eppadi Naan Tholaintheen?) தம்மைப் புதிதாகக் காணும் தமிழர்கள் முதல் சந்திப்பிலேயே “யாழ்ப்பாணத்தில எந்த இடம்? என்ற கேள்வியை எழுப்புவதைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழராயிருந்தால் அது யாழ்ப்பாணத்தவராய் இருக்கவேண்டும் என்ற பொதுப் புத்தியே இங்கும்
எழுப்பப்படுகின்றது. இப்படி ஒருவரைக் கண்ட மாத்திரத்திலேயே சுற்றிச் சுற்றி அவர் எந்த சாதியை / சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறியும் நோக்குடன் கேல்விகள் எழுப்பப்படுவதை பல இடங்களிலும் அவதானித்தும் இருக்கிறேன். இது போன்ற, ஊரில் நாம் கட்டிக் காத்த வழக்கங்களை புலம்பெயர் நாடுகளுக்கும் கட்டிக் காவி வந்து அடுத்த தலைமுறைக்கும் அள்ளிக் கொடுப்பது மிகக் கேவலமானது.


-2-

அங்கிள் சாம்’க்கு மண்ட்டோ கடிதங்கள் என்ற சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய கடிதங்களின் தொகுப்பை ராமாநுஜமின் தமிழாக்கத்தில் பயணி வெளியீட்டகத்தினர் அழகாகப் புத்தகம் ஆக்கியிருக்கின்றார்கள். கொழும்புவில் வாங்கிய இந்தப் புத்தகத்தை வாங்கிய உடனேயே வாசிக்கவும் தொடங்கினேன். அதற்கு முக்கிய காரணம் ஜமாலன் வழங்கியிருந்த முன்னுரை. இணையத்தில் ஜமாலனின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் ஆழமாகவும், தெளிவாகவும் எந்த ஒரு விடயத்தையும் அலசும் அவரது பாணி எனக்கு அதிகம் பிடித்தே
இருக்கிறது. இதற்கு அண்மைக்காலத்தில் நல்ல உதாரணம் அவர் எழுதிய குடிக் கலாச்சாரம் அல்லது கலாச்சாரக் குடி, பின்நவீனத்துவம் பற்றிய கட்டுரைகள். இந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கும் ஒரு விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார் ஜமாலன். மண்டோ எழுதிய கடிதங்களை வாசிப்பவர்களுக்கு, முன் தீர்மானங்களை ஏற்படுத்தாத அறிமுகங்களை விரிவாகத் தருகின்றது ஜமாலனின் முன்னுரை.

அங்கிள் சாம் என்பது, இந்தியாவை பாரத மாதா என்று உருவகப்படுத்துவது போல அமெரிக்காவுக்கான உருவகம். எனவே இதில் இடம்பெற்றிருக்கும் ஒன்பது கடிதங்களும் அமெரிக்காவை நோக்கி சதாத் ஹாசன் மண்டோ கடித வடிவில் முன்வைத்த பகிரங்க விமர்சனங்களும் கேள்விகளுமேயாகும். பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் 1912ல் பிறந்து வெறும் 43 வயதிலேயே இறந்து போன மண்டோ 22 சிறுகதைத் தொகுதி
கள் 5 கட்டுரைத் தொகுதிகள் உட்பட எழுத்து மற்றும் திரைப்பட, நாடகத் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அவரது உச்ச பட்ச சாதனையாக அமெரிக்கா பற்றிய அவரது முன்கூட்டிய தீர்மானங்களையே என்னால் சொல்ல முடியும். இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பிறகு உலகைத் தன் கட்டுக்குள் கொண்டுவர ஓயாமல் துடித்த / ஓரளவு கொண்டு வந்த அமெரிக்கா அப்படி கொண்டு வர எடுத்த முயற்சிகளை முளையிலேயே இனம் கண்டு கொண்டு அவை பற்றிய தன் கேள்விகளையும், விமர்சனங்களையும், தீர்மானங்களையும் தனக்கேயுரிய கிண்டலுடன் முன்வைத்தார் மண்டோ. உதாரணத்துக்கு

//நீங்கள் கொரிய யுத்தத்தை முடித்துக் கொண்டதால் தான் உங்களுடைய தொழிலும் வியாபாரமு பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தவறு. உங்களுடைய டேங்குகள், குண்டுகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் இவற்றெயெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?.........நீங்கள் ஏன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு யுத்தத்தை தொடங்கக் கூடாது? இதில் கிடைக்ககூடி
ய லாபம் கொரிய யுத்தத்தோடு ஒப்பிட்டால், அவை ஒன்றுமே இல்லாமல் போகும்.//
என்று மண்டோ சொல்வது இன்று கூட அமெரிக்கா மீது முன்வைக்கப்படும் குற்றச்சாற்றுத்தான். அது போல சிவப்பு பயங்கரவாதம் என்று சொல்லி கம்யூனிசத்தை அழிக்க பின்னாளில் அமெரிக்காவாலேயே பச்சைப் பயங்கரவாதம் என்று சொல்லப்படப்போகும் முஸ்லீம் பயங்கரவாதத்தை அமெரி
க்கா எப்படிக் கட்டமைத்தது என்று அவர் எழுதும் கடிதம் அதிசயிக்கவைக்கின்றது. அவர் இந்தக் கடிதங்களை எழுதிய காலப் பகுதி டிசம்பர் 51 முதல் ஏப்ரல் 54 வரையான இரண்டரை ஆண்டுகள். இந்தக் காலப்பகுதியில் பாகிஸ்தான் உருவாகி (அல்லது உருவாக்கப்பட்டு) வெறும்ம் 4 ஆண்டுகளே ஆகியிருந்தன. இதனை குறுகிய காலத்தில் வருங்கால அரசியலை முன்கூட்டியே கணித்து எழுதியிருப்பது நிச்சயம் ஆச்சரியமூட்டுகின்றது. மேலும் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் விமர்சிப்பவர்கள் கம்பூனிஸ்டுகள் என்ற ஒரு பொது புத்தி உள்ளது. ஆனால் மாண்டோவோ கம்யூனிஸ்டுகளின் தவறுகளையும் உடனடியாக விமர்சித்தது மட்டுமன்றி நான் ஒரு கம்யூனிஸ்டு அல்லவே அல்ல என்று பலமுறை அறிவித்தவர்.

தனது முதலாவது கடிதத்தில்
“எனக்குத் தெரியவேண்டியதெல்லாம் நிலையான உலக அமைதியை ஏற்படுத்த இன்னும் எத்தனை நாடுகள் இந்தப் பூமியின் முகத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்பதுதான். பள்ளியில் படிக்கும் என் அக்கா மகள் நேற்று உலக வரை படத்தை வரையச் சொல்லிக் கேட்டாள். சற்றுக் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, முதலில் நிலைத்திருக்க போகிற நாடுகளின் பெயரை அங்கிள் சாமிடம் (அமெரிக்காவிடம்) கேட்டுக் கொள்கிறேன் என்றேன். உங்களிடம் கேட்ட பிறகே உலக வரை படத்தை வரைந்து கொடுப்பதாக உறுதி தந்தேன்”.
என்று எழுதுகிறார்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால் இன்றைய உலக வரைபடமே அமெரிக்காவும், பிரிட்டனும் மற்றும் அதன் நேச நாடுகளும் கூட்டாகத் தீர்மாணித்து வரைந்ததுதானே. நாளை, உலக வரைபடத்தின் திருத்திய பதிப்புகளை வெளியிடக்கூட இவர்கள் தானே துப்பாக்கித் தூரிகைகளுடனும், ரத்த மையுடனும் தயாராக காத்து இருக்கின்றனர்.



Wednesday, December 23, 2009

கொழும்புக் காட்சிகளும், ஊடகங்களும், தமிழ் மொழிக்கான எதிர்காலத் தேவைகளும் : சில பகிர்தல்கள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரான கொழும்புப் பயணம் என்பது எத்தனையோ ஆச்சரியங்களுடனும், சலிப்புகளுடனும், சந்தோசங்களுடனும் மெல்ல முடிவடைந்தது. தாய்நாடு பற்றிய ஏக்கமும், நனவிடை தோய்தல்களும் சராசரிக்கு சற்று அதிகமாகவே நிரம்பிய எனக்கு இது போன்ற உணர்வுகளின் சங்கமம் எதிர்பார்ககூடிய ஒன்றே.


-1-

தலதா மாளிகையை பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தோம். புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் பழம் சிறப்புடையது தலதா மாளிகை. தலதா மாளிகையில் முதலில் எம்மை வரவேற்றதே ஒரு தமிழ்ப்
படுகொலைதான். அதன் வாசல் ஒன்றில் “உட் பேகவாண்டாம்” என்றூ எழுதியிருந்தார்கள். உட் போக வேண்டாமாம். நாம் எல்லாரும் இந்நாட்டு பிள்ளைகள் என்று சிங்களவரான ஜனாதிபதி தமிழில் (சில நிமிடங்களாவது) பேசும் காலத்தில், நாட்டின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையத்தில் இப்படியான பிழைகளை அறிவித்தல் பலகைகளில் விடுவது எந்த விதத்திலும் ஏற்கமுடியாதது. கொழும்பில் ஓடும் பஸ்களில் பல இடங்களில் “அங்கவீனர்களுக்கு ஒதுக்கபப்ட்டது என்று எழுதுவதற்குப் பதிலாக “ங” என்பதற்குப் பதிலாக “நஃப் உ” என்றெல்லாம் போட்டு ஏதோ ஒரு புது எழுத்தை உருவாக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில் முழுக்க சிங்கள அரசை மட்டும் என்னால் பழி கூற முடியவில்லை. சம்பந்தப்பட்ட இடங்களில் நிச்சயம் உயர் பதவிகளில் தமிழர்கள் பணி செய்வார்கள். அவர்கள் இந்த விடயத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இது போன்ற விடயங்கள் செய்வதைக் கூட அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக செய்ய முடிவதில்லை என்று சொன்னால் அது பம்மாத்து. சம்பந்தப்பட்டவர்களின் அக்கறையின்மையே இவற்றிற்குரிய காரணம்.

இதே நேரம் இந்த தமிழ்க் கொலைகள் கொழும்பில் எல்லாத் தரப்பாலுமே செய்யப்படுகின்றது. கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாங்கும் பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் நவம்பர் முதல் வாரம் (அல்லது அதற்கு ஒருவாரம் முந்திய அல்ல பிந்திய) வந்த ஒரு செய்தித்தாளில் “நிலைவரம்” என்று பாவிக்கப்பட்டிருந்தது. சிறிய எழுத்துக்களில் வரும் எழுத்துப் பிழைகளை மன்னிக்கலாம். அது நேரும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் “நிலைவரம்” வெளியாகி இருந்தது ஒரு செய்தித் தலைப்பில். தமிழுக்கு வந்த ”நிலைவரத்தைப்” பாருங்கள்.

சக்தி தொலைக்காட்சியின் தமிழே ஒரு புதிய திசையில் பாய்கின்றது. உச்சரிப்புகளைக் கேட்கும்போதே சங்கடமாக இருக்கின்றது. தவிர சொற்களை தேவை இல்லாத இடத்தில் இடைவெளி விட்டும், தேவை இல்லாமல் சொற்களை சேர்த்தும் வாசிப்பது பரவலாக நடைபெறுகின்றது. கனடாவில் 24 மணி நேர வானொலி ஒன்றில் காலைச் செய்திகள் வாசிப்பவர் ஒருவர் இதே போல செய்தி வாசிப்பார். அவரது குரலில் இருக்கும் கம்பீரத்தையும் தாண்டி, அவர் உச்சரிக்கும் விதத்தைக் கேட்கும் போது அய்யோ என்று கத்த வேண்டும் போல இருக்கும். செய்திகள் நிறைவுபெறுகின்றன என்று வாசிப்பதை “நிறைவு .... பெறு ... கின்றன” என்று வாசிப்பார். என்ன
செய்வது ஆள் கொஞ்சம் தமாஷ் பேர்வழி. இப்படித்தான் ஒரு முறை இவர் தமாஷாக 2004 சமாதான காலப் பகுதியில் ஏப்ரல் முதலாம் திகதி செய்திகளிலோ அல்லது விசேட செய்திகளிலோ பேச்சு வார்த்தைகளின்போது விடுதலைப் புலிகள் முன்வைத்த முன் வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கேயும் தனி விமானத்தில் நோர்வே நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்ததை அவர் இலங்கை சென்றிருந்தபோது விடுதலைப் புலிகள் சார்பில் சற்று சீரியஸாகவே எடுத்துக்கொண்டதாக ஒரு செய்தியும் வந்தது. சக்தி தொலைக்காட்சியின் உச்சரிப்புகளைக் கேட்கும்போது இவரது உச்சரிப்புகளுக்காக ஒரு பொன்னாடையே போர்த்தலாம் போல இருக்கின்றது.

நான் கொழும்புவை விட்டுப் புறப்படும்போது இருந்த சக்தியின் FM வானொலி ஆதிக்கத்தை இப்பொழுது வெற்றி கைப்பற்றி இருக்கின்றது. பெரும்பாலும் காலை நேரங்களில் லோஷன் நிகழ்ச்சிகள் செய்கின்றார். பதிவராக லோஷன் இன்னும் சிறப்பாக செயற்படலாம் என்ற எண்ணம் எனக்கு வலுவாகவே இருந்தாலும், ஒரு ஒலிபரப்பாளராக லோஷன் நிச்சயம் திறமையாகவே செயற்படுகிறார். அதே நேரம் வானொலி ஒலிபரப்பாளர்கள் பற்றிய பெரும் கு
றை ஒன்றும் எனக்கு இருந்தது. பொதுவாக எல்லா வானொலி ஒலிபரப்பாளர்களும் ஒரே பாவனையில் பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேச்சும் பேச்சும் இயற்கையாக இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிந்தது. அதாவது மலையகத் தமிழ், கொழும்புத் தமிழ், யாழ்பாணத் தமிழ், மட்டக்க்களப்புத் தமிழ், முஸ்லீம் தமிழ் என்றில்லாமல் வானொலித் தமிழ் என்கிற புதிய தமிழில் பேசுகிறார்கள். தவிர செய்திகள் தவிர்த்து, பெரும்ப்பாலான ஏனைய நிகழ்ச்சிகளின் போது அவர்கள் பேசுவதில் நேர்முக வர்ணனை செய்வது போல ஒரு ஓட்டம், வேகம் இருப்பதை உணர் முடிந்தது. இது பற்றி இலங்கையில் வானொலித் துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் பேசிய போது ஒலிபரப்பாளர்கள் அவர்களுக்கே உரிய விதத்தில் கதைத்தால் வேறுபட்ட தமிழ்கள் நிரம்பியதாக நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதால் திட்டமிட்டே இப்படியான ஒரு தமிழில் ஒலிபரப்பாளர்கள் பேசுகிறார்கள் என்கிற அவர்கள் பக்க நியாயத்தை தெரிவித்தார். சொல்லப் போனால் பெரும்பான்மையான தமிழ் சினிமாக்களில் பாத்திரங்கள் பேசும் தமிழ் தமிழகத்தில் எங்குமே பேசப் படாத, தமிழ்த் திரைப்படங்களுக்கேயுரிய தமிழ் வடிவம். முன்னர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான வானொலி நாடகங்களில் பேசப்பட்ட தமிழ் வடிவம் கூட உண்மையில் இலங்கையில் பேசப்பட்ட தமிழ் வடிவமல்ல. ஆனால் துரதிஸ்ட வசமாக புலம் பெயர் நாடுகளில் தயாராகும் திரைப்படங்கள் பலவற்றிலும் இந்த வானொலி நாடகத் தமிழே பயன்படுத்தப் படுகின்றது. தெனாலி திரைப்படத்தில் கமல்ஹாசனும் இதே தமிழைப் பேச அது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது. சமீபத்தில் கிருத்திகன் எழுதிய ஒரு பதிவுக்கான பின்னூட்டத்தில் ஆதிரை தன் நண்பர் சொன்னதாக பதிவிட்டிருந்த “நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்" என்ற வரிகள் தான் ஞாபகம் வருகிறது.



-2-


மொழி என்பதற்குரிய தேவை என்ன என்பது ஒரு நீண்ட, ஆழமான விவாதத்துக்குரிய விடயம். மொழி என்பது ஒரு தொடர்புசாதன ஊடகம் என்பதுடன், வரலாறு, கலாசாரம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கைமுறை என்று பல இடங்களிலும் தன் வேர்களை ஆழப் பதித்திருக்கின்றது. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த தமிழ்” என்கிற முட்டாள்த் தனமான உளறல்களை ஒதுக்கி வைத்து விட்டு சற்று அறிவு பூர்வமாக யோசிப்போம். நாமெல்லாம் மொழியை மொழியாகப் பார்க்காமல்
அதிகம் உணர்ச்சிவசப்பட்டு, அதை தெய்வ நிலைக்கு உயர்த்தி அப்படியே வளர விடாமல் தடுத்து விடுகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. “முலை கொடுத்த தமிழுக்கு மூண்டதொரு துயரென்றால் தலை கொடுக்கத் தயங்காத தற்கால குமணன்” என்றும், “தாயைப் பழிக்கினும் தாங்குவேன், தமிழைப் பழிப்பின் தாங்கேன்” என்றும் உணர்வு பூர்வமாக எழுதப்படும் வரிகளை மனப்பாடம் செய்துகொண்டு, உலகின் சிறந்த மொழி தமிழ் மொழி என்று யார் யார் சொன்னார்கள் என்று பட்டியல் போட்டுக்கொண்டு, வள்ளுவன் தன்னை உலகிற்குத் தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றோம். யாரோ எழுதி இருந்தார்கள், வள்ளுவனை நாம் உலகிற்கே தந்தோம் ஆனால் யார் வாங்கிக் கொண்டார்கள் என்று. இதுதான் உண்மையான நிலை. இன்றைய உலகில் தமிழுக்கான தேவை என்ன என்ற கேள்வி நிச்சயம் மகிழ்வூட்டக்கூடிய பதில்களைத் தராது.

இன்று புலம்பெயர் நாடுகளில் வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் தெரிவதில்லை என்று பலமாகப் பேசப்படுகின்றது. சில பெற்றோர் தம் குழந்தைகளுடன் தாம் தமிழ் தான் பேசுவோம், அவர்களும் தமிழில்தான் தம்முடன் பேசுவார்கள் என்று கர்வமாகச் சொல்வதுண்டு. இதில் அவர்கள் கவனிக்காத
விடயம் என்னவென்றால், அந்தப் பிள்ளைகள் பெற்றோருடனும், ஏனைய பெரியோருடனும் கதைக்கும்போது மட்டுமே தமிழில் பேசுகின்றன. தம் வயதானவர்களுடன் பேசும்போது ஆங்கிலம் அல்லது அவர்கள் வாழும் நாட்டின் மொழியோ தான் பேசுகின்றார்கள். அப்படியானால் இந்தப் பிள்ளைகள் தமிழ் கதைப்பது தம் பெற்றோரின் தலைமுறையுடன் நின்றுவிடும் என்றுதானே தோன்றுகின்றது. இலங்கையிலும், இப்போது நிறைய தமிழர்கள் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்களின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை International School என்று சொல்லப்படுகின்ற இடங்களில் சேர்த்து ஆங்கில மொழியில் கல்வி கற்க அனுப்புவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உலகமயமாக்கலின் விளைவாக, இப்படி ஆங்கில மொழிமூலம் கல்வி கற்ற பிள்ளைகள் வேலை பெறும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. இந்தியாவிலும் இதே நிலை. அப்படியானால் தமிழின் எதிர்காலம்?. முதலில், தமிழ் மொழி தெரியாமல் ஆங்கிலமோ அல்லது வேற்று மேற்கத்திய மொழி ஒன்றோ அறிந்து வளரும் ஒரு குழந்தையின் பார்வையில் பார்ப்போம். அந்தப் பிள்ளை தமிழ் தெரியாததால் என்ன இழக்கப் போகின்றது என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம். உண்மையில் அந்தப் பிள்ளை தமிழ் பேசத் தெரியாமல் இருப்பதால் பிறப்பால் தான் சார்ந்திருந்த சமூகத்திடமிருந்து, அதிலும் அந்தப் பிள்ளை பேசும் மொழி தெரியாத சமூகத்திடமிருந்து விலகி, பிரிந்து போகின்றது. இதைத் தவிர வேறு எந்த இழப்புமில்லை (அந்த பிள்ளை வாழும் நாட்டில் வதிவுரிமை பெற்றிருக்கும் பட்சத்தில்).

மொழி பற்றிய இது போன்ற கருத்துகள் தொடர்ச்சியாகப் பேசப்படவேண்டியன. 2 மாதங்களின் முன்னர் என் வீட்டில் இது பற்றிய பல மணித்தியாலங்கள் நீடித்த ஒரு கல்ந்துரையாடல் நடைபெற்றது. நண்பர் மெலிஞ்சி முத்தனும் தர்ஷனும் பேசிக் கொண்டதை கேட்டுக் கொண்டேயிருந்தேன். இது போன்ற உரையாடல்கள் நிச்சயம் நிறைய தெளிவைத் தரும்.



-3-


தலதா மாளிகைக்குச் சென்றது பற்றி எழுதி விட்டு பின்னர் தடம் மாறிவிட்டேன். தலதா மாளிகை நிர்வாகத்தை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த ஒப்பந்தத்தின் நகல் ஒன்று அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்ச்யம் எல்லாரும் பார்க்கவேண்டிய விடயம் அது. அந்த ஒப்பந்தத்தில் மன்னனில் இருந்து எல்லாரும் தமிழிலேயே கையொப்பம் இட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக “ரத்வத்த” என்கிற பெயரும் இருந்தது. இந்த ரத்வத்த, சந்த்ரிக்கா பரம்பரையின் முன்னோடிகளில் ஒருவராம். அனுரத்த ரத்வத்தவின் நேரடி முன்னோடி. இதைவிட முக்கியமான விடயம், பெயரில் “ஈழம், தமிழ்” என்கிற (இவையெல்லாம் பெயரளவுக்குத்தான் இந்த அடையாளங்களைக் கொண்டுள்ளது வேறு விடயம்) அடையாளங்களைக் கட்சிகள் கொண்டிருப்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்று கூறி அந்தக் கட்சிகளைத் தடைசெய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் (அதே போல “சிங்கள என்கிற அடையாளத்தைப் பெயரில் கொண்டிருக்கும் கட்சிகளும் தடைசெய்யப்படுமா என்று தெரியவில்லை) விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிதைவடைந்த தலதா மாளிகையின் தோற்றத்தினை கிட்டத்தட்ட ஒரு முழு மண்டபம் அளவுக்குமே, எடுக்கக் கூடிய எல்லாக் கோணத்திலும் புகைப்படம் எடுத்து மாட்டி வைத்திருப்பதன் பின்னாலுள்ள அரசியல் தெரியவில்லை. சிலவேளை இனவாதம் சிங்களவர்களுக்கும், தமிழர்கள் ஒரு காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம் தலதா மாளிகையைப் பார்க்கவரும் பிற நாட்டவர்களுக்கும் தோன்றலாமே தவிர தமிழர்களுக்கு தம் மீது கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரவாதங்கள் எதுவுமே ஞாபகம் வரக்கூடாது என்ற எண்ணமோ?



**தொடர்ச்சியாக பல மணிநேரம் தொலைபேசிமூலமும், நேரிலும் பேசி நிறைய விடயங்களைத் தெளிவாக்கிய என் இளவலுக்கு நன்றிகள்.


Tuesday, December 22, 2009

சில பாடல்கள், சில காதல்கள், சில நிகழ்வுகள்

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஒரு அழகான பாடல் என்னவளே என்ற திரைப்ப்டத்தில் இடம் பெற்றிருந்தது. எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுதிய பாடல். பாடியவர் உன்னிகிருஷ்ணன். சற்று நினைத்துப் பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்க முடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், சமயங்களில் வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்வின் பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்து போன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம் சரமாக ஒன்றுடன் ஒன்று தொடுத்து வருவதை நாம் காணமுடியும்.


அப்போது இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் தங்கி இருந்தோம். நாளை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு. பாடசாலைகள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் இருந்த வீடுகளில் அடைக்கலம் அடைந்திருந்தனர். அப்போது நான் இருந்த வீட்டில்தான் பதிவர் புல்லட்டும் தங்கி இருந்தார். அதே போல கதியால் என்ற பெயரில் பதிவெழுதுபவர் மிக நீண்டகாலமாக என் ஆக நெருங்கிய நண்பர் ஆதலால் அவரும் ஒவ்வொரு நாளும் வீட்ட வந்து விடுவார். 90முதலே யாழ் குடா நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் வேறு இருக்கவில்லை. பொழுது போவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பாடல்கள் மட்டுமே எப்போதும் துணை செய்தன. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பின் காலை நிகழ்ச்சிகள் எப்போதும் எம் காலை நேர நண்பன். நல்ல வேளை, இலங்கை வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கக் கூடாது, அப்படி கேட்பவன் துரோகி என்று அப்போது யாரும் புறப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் யாழ் குடாநாட்டு மக்கள் பலாலியில் இருந்து ஒலிபரப்பாகும் எஃப் எம் ஒலிபரப்பு நிகழ்வுகளைக் கூட கேட்டு ரசிக்கவே செய்தனர்.


அந்த நேரங்களில் எஸ் பி. பாலசுப்ரமணியமும் ஜானகியும் இணைந்து சற்று விரகத்துடன் பாடும் பாடல்களுக்கு நானும் விசாகனும் தயா என்ற நண்பனும் நிறையவே ரசிகர்களாகி இருந்தோம். புள்ளகுட்டிக்காரன் படத்தில் வரும் ஒரு பாடலும், திரு. மூர்த்தி என்ற திரைப்படத்தில் வரும் செங்குருவி, செங்குருவி என்ற பாடலும் இதில் அடக்கம். இதில் செங்குருவி பாடல் வெளிவந்து சில காலமே ஆகி இருந்தபடியால் அந்தப் பாடல் மீது ஓரளவு வெறியே இருந்தது. ஒரு முறை நானும் விசாகனும் எனது பெரியம்மாவை வேலைக்கனுப்ப கொடிகாமச் சந்திக்கு சென்றிருந்தோம். பெரியம்மாவை பஸ்சில் ஏற்றி விட்டு திரும்பும் போது மூலையில் இருந்த கடையின் வானொலி “விளம்பரங்களை அடுத்து திரு மூர்த்தி திரைப்படத்தில் எஸ்பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இணைந்து பாடிய பாடல் ஒலிபரப்பாகும். பாடலுக்கு இசை தேவா” என்று ஒலிப்பானது. அந்த பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று இருவருக்கும் ஒரே நேரத்தில் யோசித்தோம். கடைக்கு வெளியில், தெருவோரமாக இருந்து பாடல் கேட்டால் ஒழுங்காக இராது. வாகன இரைச்சல் வேறு. சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தோம். அது ஒரு அப்பக் கடை. ஆளுக்கு இரண்டு அப்பமும் தேனீரும் பாடலைக் கேட்டபடியே, பாடலைக் கேட்பதற்காகவே சாப்பிட்டோம். அவ்வளவு சுவையான அப்பம் அதன் பிறகு சாப்பிட்டதுமில்லை, அந்த பாடலை அத்தனை நெருக்கமாக பின்னொருபோதும் உணர்ந்ததும் இல்லை.

திரைப்படங்களில் ஏதாவது முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாடலைத் திரும்ப திரும்ப காட்டுவார்கள். இதெல்லாம் சினிமாத்தனம் என்றுதான் நாம் பெரும்பாலும் நினைத்திருப்போம். ஆனால் சினிமாவைவிட நம்ப முடியாத நிகழ்வுகள் வாழ்க்கையில்தான் அதிகம் இடம்பெறுகின்றன. அச்சமில்லை அச்சமில்லை என்ற இந்திரா திரைப்படப் பாடலை நான் கேட்ட பெரும்பாலான சந்தர்ப்பங்களும் அது போன்ற அதிசயம்தான். வாழ்வில் நெருக்கடி மிகுந்து, அடுத்தது என்னவென்று தெரியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் இருந்து இந்தப் பாடலை காலம் எனக்காக ஒலிபரப்பும். 95ல் யாழ்ப்பாணத்தை விட்டு, பெற்றோர்கள், தம்பி, தங்கை எல்லாம் கொழும்பு சென்றிருக்க, நானும் ஒரு தம்பியும் (எனக்கு 16 வயது அவனுக்கு 13 வயது) 16 மைல் தூரத்தை இரண்டு நாட்களாக
நடந்து கொடிகாமம் வந்து சேர்ந்த அன்று இந்தப் பாடலைக் கேட்டேன். பின்னர் கொடிகாமத்தில் இருந்து ராணுவக் கட்டுபாட்டு யாழ்ப்பாணத்துக்குச் செல்கையில் இதே பாடலைக் கேட்டேன். இது போல தனியாக இந்தியா சென்று தனியறையில் படுத்து இருந்த ஒரு இரவில், கனடா வந்தபின் எல்லா நம்பிக்கைகளும் உடைந்து போய் இருந்த ஒரு மறக்க முடியாத இரவில் என்று எத்தனையோ பொழுதுகளில் காலம் இந்தப் பாடலை எனக்காக பின்னணி இசையாக்கி உள்ளது.


புறா விடு தூது, கிளி விடு தூது, புழுதி விடு தூது என்கிற விடு தூதுகளைப் போல நான் தூது சொல்ல அனுப்பியவையும் பாடல்களே. அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். தோழி ஒருத்தியிடம் மெல்லக் காதலைச் சொல்லவேண்டும். அவளோ நீ யாரைக் காதலிக்கிறாய், யாரைக் காதலிக்கிறாய் என்று அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருப்பவள். உன்னைத்தான் என்று சொல்ல ஆசை, அதைக் கேட்கத்தான் அவளு
ம் ஆசைப்படுகிறாள் என்று நிச்சயம் தெரியும். ஆனாலும் சொல்லத் தயக்கம். அப்போதும் பாடல் தான் துணை வந்தது. உல்லாசம் திரைப்படத்தில் “வீசும் காற்றுக்கு” என்று ஒரு பாடல் வரும். படத்தில் நாயகி மகேஸ்வரி நாயகன் விக்ரமிடம் நீ யாரைக் காதலிக்கிறாய் என்றூ கேட்க, உன்னைதான் என்று சொல்ல முடியாமல் விக்ரம் தவிப்பார். இதையே நானும் பயன்படுத்திக் கொண்டேன். இந்த சமயத்தில்தான் (இந்த நிகழ்வு நடைபெறும்போதுதான்) மின்சாரக் கண்ணா திரைப்படப் பாடல்களும் வெளியாகி ”உன் பேர் சொல்ல ஆசைதான்” பாடல் என் விருப்பப் பாடலாக வீட்டில் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினேன். ஒரு பாடல் கசட்டில் (இசைத்தட்டுகள் எல்லாம் அப்போது அவ்வளவு பிரபலமாகவில்லை) இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து பதிந்து கசட்டுக்கு “யாரோ அவளுக்கு என்று பெயரும் எழுதி அவளிடம் கொடுத்தேன். நான் காதலிக்கும் பெண் யாரென்று இந்தப் பாடல்களில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளிடம் வாக்மேனைக் கொடுத்தேன். வீசும் காற்றுக்கு பாடல் ஒலிக்கின்றது. யாரவள் யாரவள் என்று பின்னணியில் ஒலித்த குரல்கள் மெல்ல அடர்த்தியாகிவர, “மேகம் போலே என் வானில் வந்தவளே, யாரோ அவளுக்கு நீதான் என்னவளே” என்று பாடல் ஒலிபரப்பாகும். அடுத்து ஒலித்த உன் பேர் சொல்ல ஆசைதான் பாடலும் அதை உறுதி செய்ய, எதிர்பார்த்த செய்தி, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கிடைத்த பரவசம் அவள் முகத்தில்.


-2-


ஞாபகங்கள் இனிமையானவை. சமயங்களில் அவை கொடுமையானவையும் கூட. மறந்தே தீரவேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகளை புதைக்கவே முடியாமல் போவது போல துன்பம் வேறில்லை. “மறக்கத்தான் நினைக்கிறேன்” என்று ஒரு வரியில் இதைக் கவித்துவமாகத் தன் கிறுக்கல்கள் புத்தகத்தில் சொல்லி இருப்பார் பார்த்திபன். ஆட்டோகிராப் சினேகா போல ஒருத்தி. புலம்பெயர் வாழ்வின் என் முதல் கட்டத்தில் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்தவள். அலைபாயும் மனத்துடன் நான் தடுமாறும் போதெல்லாம் என்னை நிலையாக்கினவள். என் நண்பன், என்பதைத் தாண்டி, எனக்கு மட்டுமே நண்பன் என்கிற அவள் எதிர்பார்ப்பு சமயங்களில் எரிச்சலூட்டினாலும், ஒ
ரு போதும் அவளை வெறுக்க முடிந்ததில்லை. கோகுலத்தில் சீதை திரைப்படத்தில் வரும் ”எந்தன் குரல் கேட்டு” பாடல் எப்போதும் அவள் இருப்பையே நினைவூட்டும். ஒரு கொடிய பொழுதில் எனக்கும் அவளுக்குமான உறவு முறிக்கப்பட்டபோதும் நினைவுகளை நான் மறக்க நினைத்தாலும், மறக்கத்தான் (மறக்கத் தான்) நினைக்கிறேன். மதுவுடன் கூடிய சில மாலைப் பொழுதுகளில் நான் அதிகம் நேரம் செலவளிக்க விரும்புவது அனேகமாக இந்தப் பாடலுடன்தான். என் ஆரம்பகால கனேடிய நட்புகளில் புத்தகம் வாசிப்பவள் இவள் ஒருத்திதான். அப்போது பாலகுமாரனின் தீவிர வாசகர்களாகி இருந்தோம். பயணிகள் கவனிக்கவும், கரையோர முதலைகள், சினேகமுள்ள சிங்கம் போன்ற பாலகுமாரனின் பல புத்தகங்களை ஒன்றாக இருந்தே வாசித்தும் இருக்கிறோம். சண்டையிட்டு இருக்கிறோம். எல்லாரும் படித்த பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்(இதில் “க்” வராது. ஏனென்று நாவலின் கடைசி அத்தியாயத்தில் அழகாகச் சொல்லியிருப்பார் பாலா. இப்படியெல்லாம் பாலா யோசிக்க மாட்டார், இது சுப்ரமண்ய ராஜூவின் யோசனையாகத்தான் இருக்கும் என்பாள் அவள். எனக்கு பாலாவை அதிகம் பிடிக்கும், அடிக்கடி அவருடன் பேசுவேன் என்பதாலேயே அவர் பற்றி வம்பிழுப்பாள் அவள்.) இரும்பு குதிரைகள் அவள் ஏன் வாசிக்கவில்லை என்றால், அதில் வரும் நாயகி பெயர் தாரணி. இவளோ புத்தகத்தில் தாரணி என்று வரும் எல்லா இடங்களிலும் பேனா மையால் அழித்து வைத்தாள். அந்தப் பெயரை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். தன்னைத் தவிர எவரிடமும் நான் நெருக்கமாகி விடக்கூடாது என்ற முனைப்பு அவளுக்கு. இதற்கும் தாரணிக்கும் என்ன சம்மதம் என்று கேட்கிறீர்களா. அதைத்தான் ”காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதுமில்லை என்று பின்னொரு நாளில் பதிவிட்டு வைத்தேன். கொடிகாமத்திலும், கொக்குவிலிலும் நண்பன் விசாகன் அடிக்கடி என்னைப் பார்த்து “கொஞ்ச நாள் பொறு தலைவா...” என்று பாடுவான். அவன் ஏனோ பாடியதை நான் எனக்காகப் பாடியதாக எண்ணிக் கொண்டேன். விசாகன் பாடும் “கொஞ்ச நாள் பொறு தலைவா...:” அவளே ஒரு முறை பாடிய “கஸ்தூரி மான் குட்டியாம் பாடலும்” எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான பாடல்களே. எப்போதும் என்னால் மறக்கமுடியாத, எவருடனும் பேசவே விரும்பாத ஒரு நினைவாகிப் போனாள் அவள். இரட்டைப் பின்னல், எதிலும் காட்டும் வேகம், சடாரென்ற (நடிகர் ரஜினியை ஒத்த) உடல் அசைவுகள், குறும்பு, அடிக்கடி அணியும் கறுப்பு – சிவப்பு உடைகள்........ ம்ம்ம்

”மீண்டும், சந்திக்கும் வாய்ப்பு வந்தால் தள்ளி நின்றழுது பார்ப்போம்” - வைரமுத்து

Sunday, December 20, 2009

சாரு நிவேதிதா சொல்லும் கேரளமும், சக்கரியா சொல்லும் தமிழ்நாடும்

அரபிக்கடலோரம் என்ற சக்கரியா எழுதி சுகுமாரன் மொழி பெயர்த்த பத்திகளின் தொகுப்பை கொழும்பு பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் வாங்கினேன். பத்தி எழுத்துகளை வாசிப்பவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் சக்கரியா பற்றிய அறிமுகம் அவசியமில்லை. முக்கியமான மலையாள எழுத்தாளர். பத்திரிகையாளர், ஊடக ஆலோசகர், பத்தியாளர், விவசாயி, சினிமா, சிறுகதை – நாவல் எழுத்தாளர் என்ற பல தளங்களில் செயல்படுபவர் சக்கரியா. தொடர்ச்சியாக ஆங்கிலம், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். காலச்சுவடு இதழுக்காக பிரத்தியேகமாக இவர் எழுதிய பத்திகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், புகழ் பற்றி சலித்துக் கொள்ளும் போதெல்லாம் சாரு நிவேதிதா கேரளாவில் சக்கரியாவுக்கு கிடைக்கும் மரியாதை, சக்கரியாவின் படைப்புகளுக்கு ஊடகங்களில் தரப்படும் மரியாதை என்று ஒப்பிட்டுக் கொள்வது வழக்கம், ஆனால் இந்த இடத்தில்தான் சிக்கலே புறப்படுகின்றது. தமிழ்நாட்டின் மோசமான அரசியல் (இந்த இடத்தில் மோசமான என்பதை விட வலுவான வேறு வார்த்தைகள் இருந்தாலும் பொறுத்திப் பார்க்கலாம் – என் பிரத்தியேக உபயோகத்தில் இத்துப் போன), சமூக, இலக்கிய, ஊடக, திரைப்படச் சூழல்கள் பற்றி எழுதும்போதெல்லாம் சாரு கேரளாவில் இப்படி நடக்குமா என்று எழுதுவார். ஆனால் சக்கரியா என்ன சொல்கிறார் என்றால் “இந்தக் குறிப்புகளில் கேரளத்தை அதிகமாக விமர்சித்தும் தமிழ் நாட்டைக் கூடுதலாக பாராட்டியுமிருக்கிறேனா என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு, சரிதான். கேரளத்தை எவ்வளவு விமர்சித்தாலும் போதாது.- அந்த அளவுக்கு மகா பாக்கியங்களைத் தொலைத்துவிட்டு ஒட்டாண்டியாகிக்கொண்டிருக்கும் சமூகம் அது. அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் மதங்களும் அதிகாரிகளும் அறிவுஜீவிகளுமே அதில் பிரதானமான குற்றவாளிகள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அதிகாரிகளும் புனிதர்களல்ல என்று தெரியும். ஆனால், தமிழோடும் தமிழரோடுமுள்ள அடிப்படையான நன்றியுணர்வு அவர்களிடம் எங்கோ மறைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான், ஆளும் கட்சிகள் மாறிவரும் போதும் தமிழ்நாடு முன்னோக்கிச் செல்கின்றது. இங்கே ஆடம்பர மாடங்களின் நிர்மாணம்தான் முன்னேறுகின்றது, கூடவே மதவெறியும், சாதி வெறியும்...”.

கேரளம் பற்றிய அபரிதமாக வைத்திருந்த நம்பிக்கைகளை ஒரு முறை கேள்விக்குள்ளாக்குகின்றது கேரளத்தின் கடைசி அறிவுஜீவி என்று ஒரு சாரரால் அழைக்கபடும் சக்கரியாவின் எழுத்து. இதில் சக்கரியா சொல்கின்ற முக்கிய விடயங்களில் ஒன்று தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும்கட்சி ஒரு நல்ல திட்டத்தை அறிமுகம் செய்தால் அந்தக் கட்சி ஆட்சியை விட்டுப்போனாலும் அடுத்து ஆளும் கட்சி நிறைவேற்றும், அதே நேரம் அதற்கான முழு உரிமையயும் தானே எடுத்துக் கொள்ளும் என்பது. மக்களைப் பொறுத்தவரை நல்ல திட்டங்கள் நிறைவேறியே வருகின்றன என்கிறார். தமிழ்நாட்டு அரசியலைச் சலிப்புடனே பார்த்து வளர்ந்த தலைமுறையச் சேர்ந்தவன் நான். தமிழ் நாட்டு அரசியல் பற்றி எனக்கு பத்து வயது கூட ஆகியிராத காலத்தில் வாசித்து வளர்ந்த விடயங்களே எம்ஜிஆர் தன் ரசிகர்களை (அல்லது தொண்டர்களை) கத்தி வைத்திருக்க சொன்னது, ஆனந்த விகடன் ஆசிரியர் சிறையிடப்பட்டது, ஜெயில் சிங்கும் எம்ஜிஆரும் செய்து கொண்ட கடித பரிமாற்றங்கள் என்று துக்ளக் இதழில் (கற்பனையில்) வெளியான கடிதங்களில் செய்யப்பட்ட அரசியல் ரீதியான கிண்டல்கள் இப்படியான மொன்னைத்தனங்கள் தான். என்னால் சக்கரியா சொல்கின்ற சில கருத்துகளை ஜீரணிக்க முடியாமலே இருக்கின்றது எனினும், கேரளா தன் கம்பீரமான பீடத்தில் இருந்து பல படிகள் கீழிறங்கி விட்டதோ என்றே தோன்றுகின்றது. அதே நேரம் சில கட்டுரைகளில் சக்கரியா மீதிருந்த கம்பீரமான மரியாதை கூட சற்று அசையவே செய்கின்றது. “காஞ்சியில் கைது: ஒரு மலையாளத் திரைக்கதை” என்ற கட்டுரையில் அவர் எழுதுகிறார் “செல்வி ஜெயலலிதாவுக்கு (நானறிந்த வரையில் அவர் ஆழ்ந்த இறை நம்பிக்கையாளர்) காஞ்சி மடாதிபதியை சட்டத்தின் முன் கொண்டுவரும் முதுகெலும்புண்டென்றால் நான் அதைத் தனிநபரின் சக்தியாக மட்டும் பார்க்கவில்லை, தனி நபரின் செயலாற்றலும் தமிழ் சமூகத்தின் செயலாற்றலும் ஒன்றிணைந்த நடவடிக்கை இது....” என்கிறார். உண்மையிலேயே ஜெயலலிதா ஆட்சியில் பாராட்டவேண்டிய விடயங்களில் முக்கியமான ஒன்று காஞ்சி சங்கராச்சாரியார் கைது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல், அப்போதைய ஆளுங்கட்சி தலைவர்கள் வரை அனைவரையும் அலற வைத்த நிகழ்வு அது. அதற்காக ஜெ வுக்கு ஒரு பாராட்டு என்றாலும், அதை ஜெயலலிதா செய்ய “நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்ற நக்கீர குணம் மட்டுமே காரணம் என்று சொன்னால் நரசிம்மராவ் கூட சிரித்துவிடுவார். வேண்டுமானல், வெகுஜன நம்பிக்கைகளைத் தாண்டிக் கூட எடுத்த முடிவை செயலாற்றக்கூடிய வல்லமை தமிழக அரசியல்வாதிகளுக்குண்டு என்று சொல்லலாம். அப்படி சொல்லும் போது அந்த வல்லமை தானே வேலை நிறுத்தம் செய்தவர்களை வேலை நீக்கம் செய்யும் சட்டங்களாகவும் மாறியது என்றும் சொல்லலாந்தானே?. சங்கராச்சாரியார் கைது விவகாரத்தில் அவர் குற்றம் செய்தவர், எனவே தண்டிக்கப்படவேண்டியவர் என்று ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி முடிவெடுப்பவராக அவர் இருந்திருந்தால், நியாயமான ஆட்சியை அமைத்திருந்தால் ஒரு போதும் கருணாநிதிக்கு – ரஜினி மட்டுமல்ல ஒட்டுமொத்த “வருங்கால முதல்வர்களும்” சேர்ந்து வாய்ஸ் கொடுத்திருந்தால் கூட – மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஜெயலலிதா ஆட்சிக்காலம் முழுவதும் நாள்தோறும் ஏதாவது பரபரப்புகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தார். அபத்தங்களும், பழிவாங்கல்களும், அதிகார வெறியும் வெளிப்படையாகவே ஆட்சியாளர்களால் காட்டப்பட தொடங்கிய காலம் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம். எல்லாவிதத்திலும் ஜெயலலிதாவைவிட தான் முன்னோடியாக இருக்க ஆசைப்படும் கருணாநிதி, ஜெயலலிதாவால் கூட கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு அபத்தங்கள் நிறைந்த நாட்களை தற்போது தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார். (இதில் மறுப்பிருப்பவர்கள் கருணாநிதி கடந்த ஒரு வருடத்தில் விட்ட அறிக்கைகளை ஒன்று விடாமல் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.)

இந்தப் தொகுப்பில் மிக முக்கியமான கட்டுரைகயாக நான் கருதுவது பிளாச்சிமடையில் கொகோ கோலா நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் பற்றிய “மாயாவித் திருடர்கள்” என்ற கட்டுரை. பிளாச்சிமடையில் கொகோ கோலா தொழிற்சாலை நிறுவப் பட்டதால் (இது நிறுவப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்னர் தொழிற்சாலை மூடப்பட்டது கம்பூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில்) நிலத்தடி நீரில் பெரும் பகுதி அவர்களாலேயே உறிஞ்சப்பட ஆதிவாசிகளுக்கு நீர் கிடைப்பதில்லை, கொகோ கோலாவில் பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருக்கின்றன என்று சொல்லி போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ச்சியாக தொழிற்சாலை இயங்க தடை விதிக்கப்பட்து. இது பற்றி சக்கரியா சொல்லும் வாதம் வலுவானது. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு வரும் காய்கறிகள் எல்லாமே பூச்சிகொல்லிகளில் மூழ்கிக் குளித்தே வருகின்றன. கேரளா குடிநீர் வாரியம் விநியோகம் செய்யும் குடிநீரில் கூட நச்சுக் கூறுகள் கலந்திருக்கின்றன. 90% ஆனவர்கள் காலவதியானதும், தடை செய்யப்பட்டதுமான மருந்துகளை பயன்படுத்தும் மாநிலத்தில், 60% ஆனவர்கள் கலப்படம் செய்த மதுவை குடிக்கும் ஒரு மாநிலத்தில் தடை செய்யப்பட்டது வெறும் 0.5% மக்கள் மட்டும் குடிக்கும் கொகோ கோலா பானம் தடை செய்யப்படுகின்றது என்றால் ஏன் என்ற கேள்விகள் எழத்தானே செய்யும். அதற்கும் அவரே காரணம் சொல்கிறார். “இந்த உண்மைகள் வந்தனா சிவாவுக்கும், மேத பட்கருக்கும், வீரேந்திர குமாருக்கும் அவசியமில்லை. அவர்களுக்குத் தேவை கொக்கோ கோலா போராளிகள் என்ற சர்வதேசப் பெருமை. மகசேசே போன்ற விருதுகள். குடிநீரில் விஷமிருந்தால் யாருக்கு நஷ்டம்?. காய்கறியிலும் பழத்திலும் விஷமிருந்தால் அவர்களுக்கு என்ன? கொகோ கோலாதானே நட்சத்திரம்”. பெரு முதலாளிகள் மீதான எதிர்ப்பு, உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு என்ற வாதங்களில் நிறையவே நியாயங்கள் இருக்கின்ற அதே வேளை, இந்த எதிர்ப்புகளுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் உள்ளூர் முதலாளிகளகவும் தாம் சார்ந்த சமூகத்தின் தலைவர்களாக தம்மை நிறுவிக் கொண்டவர்களுமாகவே இருக்கின்றார்கள் என்பது நிச்சயம் சிந்திக்கவேண்டியதே.

அமிர்தானந்தமயி பற்றிய அலசல்களும் நிறையவே இருக்கின்றன. என் சொந்த அனுபவத்தில் அமைப்பு என்ற வடிவத்தை நான் நிறையவே வெறுக்கிறேன். சமூக அக்கறையும், தீர்க்கமான சிந்தனையும் கொண்டவர்களும் கூட அமைப்பு என்ற வடிவத்துக்குள் சிறைப்படும் போது முற்றிலும் நீர்த்துப் போய்விடுகிறார்கள். உதாரணமாக பெரியாரைச் சொல்லலாம். பெரியார் என்றாலே பொதுவாக திராவிடர் கழகம்தான் நினைவுக்குவரும். இன்றும் தி.கவும், அதன் வழி வந்த கட்சிகளும் தம்மை பெரியாரின் வழிவந்தவர்களாகவே சொல்லிக் கொள்ளுகிறார்கள். நானும் ஒரு பெரியாரிஸ்ட் என்று அறிக்கை விடுகிறார்கள். பெரியாரையும், திராவிடர் கழகங்களையும் தொடர்பறுத்துப் பார்க்கமுடியாமல் இருக்கும் போது, இன்றைய “பெரியாரிஸ்டுகள்” செய்யும் கூத்துக்களைப் பார்த்தால் பெரியாரின் சிந்தனைகள் எத்தனை தூரம் அவர் சார்ந்திருந்த அமைப்பினூடாக நீர்த்துவிட்டன?. சென்ற ஆண்டு கூட அமிர்தானந்தமயி கனடா வந்த போது கனேடியப் பத்திரிகைகள் எல்லாமே அது பற்றி செய்திகள் வெளியிட்டதுடன் அவரது நிதி விடயங்கள் தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பி இருந்தன. இன்று நான் காணும் பெரும்பாலான மதத்தலைவர்கள் எல்லாமே ஒரு “கார்பரேட்” வடிவத்துக்குள் தாராளமாகவே வந்துவிட்டனர். தனிமையில் தொடர்ச்சியான தியானம், தேடல்கள் மூலமாக உயர்ந்த தத்துவ விசாரங்களையும், ஆன்மீக அனுபவங்களையும் அடைந்தவர்களே ஞானிகள். ஆனால் எம். எஸ். உதயமூர்த்தி பாணியில் மனநலக் கட்டுரைகளை எழுதித் தள்ளும் நவீன “கார்ப்பரேட்” சாமியார்கள் முறையான தியான அனுபவத்தைக் கூட அடைவார்களா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கின்றது. அமிர்தானந்தமயி மீதான சக்கரியாவின் குற்றச்சாற்றுகள், பெரும்பாலான “நவீன சாமியார்களுடன்" தொடர்பு படுத்திப் பார்க்க கூடியவையே.

இந்த நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சுகுமாரன் தன் முன்னுரையில், இதில் சொல்லப்படும் கருத்துகள் சிலவற்றில் எனக்கு முழுமையாக உடன்பாடில்லாத போதும் அவர் கருத்துக்களில் குறுக்கிடாமல் ஒரு மொழி பெயர்ப்பாளராக எனது பணியை சரியாக செய்திருக்கிறேன் என்று கூறுவார். சக்கரியாவின் கருத்துக்களில் பூரணமான உடன்பாடில்லாவிட்டாலும் கூட அவர் எழுத்துக்களை, அவர் எழுப்பும் கேள்விகளை, முன்வைக்கும் வாதங்களை நிச்சயமாக கவனிக்கவே வேண்டும். அவரது எழுத்துகள் ஏற்படுத்தும் சலனங்களும், அதை ஒட்டிய கேள்விகளும் எம்மை நிச்சயம் விசாலப்படுத்தும்.


பின் குறிப்பு – 01
” The Indian citizen is not committed to a nation except when they have a stupid cricket match with Pakistan “ என்று இவர் பேட்டி ஒன்றில் கொடுத்ததாக படித்திருந்தேன். கிட்டத்தட்ட இதே கருத்தினை தன் அண்மைய திரைப்படத்தில் இலங்கை இயக்குநர் பிரசன்ன விதானகேயும் அழகாகக் காட்டியிருப்பார். முக்கியமான சம்பவங்கள் கடந்து செல்லும்போதெல்லாம் பின் புலத்தில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்படும் டிவியையும், ஸ்கோர் கேட்ப்பவர்களையும் காட்டியிருப்பார். இவரது திரைப்படத் தொகுப்பு ஒன்றையும் கொழும்புவில வாங்கி வந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்வேன்.

Tuesday, October 13, 2009

நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்


- 1 -



vijayநடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற வைத்துள்ளனர். இந்த மோசமான வணிகத்தை புலம்பெயர் நாடுகளிலும் பெரும்பாலான பத்திரிகைகளும், ஊடகங்களும் தம் பங்குக்கு பெரிதாக்கி, நாளும் பொழுதுமாக செய்திகளை வெளியிட்டு செய்யும் அட்டகாசம் பெரிதாகியே வருகின்றது. முதலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், உரிமை.


ஆனால் நடிகர்கள் மட்டுமே முதல்வர்கள் ஆகலாம் என்கிற பிம்பத்தை உரிவாக்கியவை எல்லாமே ஊடகங்கள் தானே. விஜயை எடுத்துக் கொள்வோம். அவருக்கு அரசியலில் என்ன அரிச்சுவடி தெரியும்?. எந்த மக்கள் பிரச்ச்னை பற்றி அவர் தீவிரமாக குரல் கொடுத்திருக்கிறார்? இது பற்றிய எந்தக் கேள்விகளும் இல்லாமல் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் அரசியலுடன் முடிச்சுப் போட்டு, ஒவ்வொரு பேட்டியிலும் அவரிடம், நீங்கள் அரசியலுக்கு வருவீர்காளா? என்கிற அதி முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டுத் தொலைத்ததெல்லாம் ஊடகங்கள் தானே. விஜய் தன்னும் ஓரளவு தன்னை திரை உலகில் நிலைப்படுத்திக் கொண்ட நடிகர். ஆனால் சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா, விஷால் என்று மூன்று படம் நடித்து முடித்துவிட்டாலே அவர்களைப் பார்த்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்பது போன்ற கேனத்தனம் வேறு எதுவும் இல்லை.



இது பற்றி என்ன சொன்னாலும் உடனே எம்ஜிஆர் நடிகர் தானே அவர் 13 வருடம் நாடாளவில்லையா என்பார்கள். எம்ஜிஆர் என்ன செய்தார், அது இலவசம், இது இலவசம் என்று வாக்குக் கொடுத்து மக்களை நிரந்தர சோம்பேறி ஆக்கினார். அதை ஜெயலலிதா தொடர்ந்தார். இப்போது இலவச டிவி வரை கருணாநிதி கொண்டுவந்திருக்கிறார். ரேஷன் பொருட்கள் இலவசம் என்று இந்நாளைய முதல்வர் சொல்ல, அதை வீடு வீடாக இலவச டெலிவரி செய்வேன் என்று "வருங்கால முதல்வர்" விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். மக்களுக்கு உழைப்பதற்கான ஆற்ற்லும், சக்தியும் நன்றாக இருக்கின்றபோது ஏனையா இலவசம்?. இப்படி இலவசம் மேலாக இலவசம் என்று கொடுத்து ஒரு மக்கள் கூட்டத்தையே சிந்திக்க விடாமல் அடக்கி வைத்திருக்கிறீர்கள். விஜய் ஏன் அரசியலுக்கு வருவார் என்பதற்கு அவரது முதல் கட்ட தகுதியாக அவர் பலருக்கு உதவுகிறார், பலரைப் படிப்பிக்கிறார் என்றெல்லாம் அவர் தந்தை சொல்ல அதை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து பிரசுரித்தன. உண்மையாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே தகுதியாகிவிடுமா? அபப்டிப் பார்த்தால் இவரை விட அதிகம் சமூக சேவை செய்த அன்னை தெரஸா, வித்யா சாகர் போன்றவர்களை எல்லாம் யாராவது அரசியலுக்கு இழுத்தார்களா? பிறகேன் இவரை மட்டும் அதோ வாறார், இதோ வாறார், ஆடி வாறார் அசைந்து வாறார் என்ற அளவுக்கு ஆலாபனை செய்கிறீர்கள். இது போன்ற செய்திகளைப் பார்த்து பார்த்து விகடன், குமுதம், குங்குமம் என்கிற மூன்று கமர்ஷியல் குப்பைகளையும் படிப்பதென்றாலே அலர்ஜி ஆகிவிடுகின்றது.


- 2 -



நன்றாக எழுதி, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்துவிட்டு திடீரென்று தம்மை மௌனப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருவர் பற்றி கடந்த வாரம் ஒருமுறை அசைபோட்டேன். முதலில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்ற ஈழத்து எழுத்தாளர். 80களில் கணையாழியில் பத்திகள், சிறுகதைகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சுகிர்தராஜா இப்பொழுதெல்லாம் பெருமளவு எழுதுவதில்லை என்றே தெரிகின்றது. அவரது சில சிறுகதைகளை தொகுத்து அ/சாதாரண மனிதன் என்ற பெயரில் ஒரு புத்தகமாக காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. 80களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளின் சிறப்பு, அக் காலப்பகுதிகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் எப்படி சாதாரணர்களைப் பாதித்தது என்று சொல்லிச் செல்வதாகும். எனது வாசிப்பில் இதில் முக்கியமான கதை என்று "அ/சாதாரண மனிதன்" என்ற கதையையே சொல்வேன். பொதுவாக செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் திடீரென்று வீழ்ச்சி நடைந்துவிட்டால் நான் முதலிலேயே யோசித்தனான். இது எனக்கு முதலிலேயே தெரியும் என்கிற பீடிகைகளுடன் ஆலோசனை தர ஒரு கூட்டமே தயாராக இருக்கும். அப்படி தெரிந்திருந்தால் அதை முன்னரேயே சொல்லியிருக்கலாம் தானே?. இந்தக் கதையிலும் டேவிட் முரே என்ற பாத்திரம் இப்படி ஒரு நிலைக்கு வரும்போது அவரது முன்னாள் சக ஊழியர், இவை எல்லாவற்றையும் விட அவருக்குப் பிடித்த மட்டன் கபாப்களில் கொஞ்சம் வாங்கிக் கொடுப்பது இந்த ஆலோசனை எல்லாவற்றையும் விட மேலானது என்று முடிவு செய்வதுடன் கதை முடிகின்றது. இவரது அண்மைக் கால எழுத்தாக "காலம்" இதழில் வெளியான ஒரு கட்டுரையையும், "ஸ்லம் டோக் மில்லியனியர்" பற்றிய ஒரு கட்டுரையையும் தவிர எதையும் வாசிக்கவில்லை. வாசிக்கும் ஆர்வம் நிறையவே இருக்கின்றது.



அடுத்ததாக, ஜே. பி. சாணக்யா வின் கனவுப் புத்தகம் என்ற சிறுகதைத் தொகுதியை சில வாரங்களுக்கு முன்னர்தான் வாசித்து முடித்திருந்தேன். அவரது பல கதைகளை தனித் தனியாக வாசித்து இருந்தாலும் ஒரு புத்தகமாக வாசிப்பது இதுவே முதல் முறை. தலித் மக்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் உறவு முறைச்சிக்கல்கள் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட கதைகள் அவருடையவை. உயிர்மை இதழ் ஆரம்பித்த காலங்களில் அதில் வெளியான அமராவதியின் பூனை என்ற கதை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. பத்துக் கதைகள் அடங்கிய இந்தத் தொகுதியில் எனக்கு அதிகம் பிடித்த சிறு கதை “ஆண்களின் படித்துறை “ தான். கோடை வெயில் என்கிற கதை ஒரு கதையாக பிடித்திருந்தபோதும், யோசித்துப் பார்க்கையில் தன் கணவனின் வேலைக்காக தான் அண்ணா என்று அழைத்த உறவு முறைக்காரனுடனேயே வசந்தா உடலுறவு கொள்ளுகின்றாள் என்று வ்ரும் முடிவு தரும் தாக்கம், புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை நினைவூட்டுகின்றது. (இந்த முடிவை முன்வைத்து வியாகூல சங்கீதம் என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா புதுமைப்பித்தனை காய்ச்சி எடுத்திருப்பார்) இந்தக் கதைக்கு முடிவாக புரட்சிகரமாக கதையை முடித்து வைக்கிறேன் என்று வேறு விதமாக எழுதியிருந்தால் அங்கே ஒரு நாடகத் தன்மை வந்திருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், மனதளவில் இந்தக் கதையின் முடிவு அமைதியின்மையை ஏற்படுத்தியது உண்மை. சமீபகாலமாக அவர் பெரிதாக எழுதுவதில்லை என்று அறிந்தேன். சில வேளை அவர் ஈடுபட்டிருக்கும் உதவி இயக்குனர் பணிகள் காரணமாக அவரது எழுத்துப் பணி தடைப்பட்டிருக்கலாம். அதைக் கடந்து தொடர்ந்து எழுதும்போது இது போன்ற நல்ல கதா அனுபவங்களையும், சமுக அமைப்பு பற்றிய அடிப்படையான சில கேள்விகளையும் நாம் அடையப்பெறலாம் என்றெண்ணுகின்றேன்.



- 3 -



கனேடிய மண்ணில் இருந்து மெலிஞ்சி முத்தனின் முதலாவது நூல் உயிர்மை வெளியீடாக வெளிவர இருக்கின்றது. “நான் தனிமையில் இருந்த போது எழுதத் தொடங்கினேன், பின்பு எழுதுவதால் தனியனானேன்” என்று தன் படைப்புகளின் ஊடாகச் சொல்கின்ற மெலிஞ்சிமுத்தன் கூத்து மற்றும் கவிதை ஆகிய துறைகளிலும் தன் ஆளுமையை ஏற்கனவே ஆழப் பதித்தவர். அச்சில் வர இருக்கும் இவரது முதல் புனைவு இதுவே. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தன் இணையத் தளத்தில் இந்த நூலுக்காக தான் எழுதியிருந்த முன்னுரையினை வெளியிட்டிருந்தார். பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு நல்ல ஆளுமையும், திறமையும் இருந்தும் அவர்கள் பெருமளவுக்கு வெளியில் தெரிய வராமைக்கு அவர்கள் சரியான முறையில் வெளிக்கொணரப் படாமையும் காரணமாக இருக்கவேண்டும். அதிலும் இளம் ஈழத்து எழுத்தாளர்கள் எவரையும் கண்டு கொள்ளாத அல்லது கடுமையான விமர்சனங்கள் மூலமாக நிராகரித்து விடுகிற சூழலே பரவலாக இருக்கின்ற நிலையில் – உதாரணமாக ஜெயமோகன் சிலாகிக்க வேண்டும் என்றால் அ.மு எழுதவேண்டும், சாரு நிவேதிதா கொஞ்ச நாள் ஷோபா சக்தியையும் சுகனையும் சொன்னார். மற்றும்படி இந்த விடயங்களில் பாபாவை நினைத்து தியானத்தில் மூழ்கிவிடுவார் – எஸ். ராமகிருஷ்ணனின் இந்த செயல் பாராட்டுக்கு உரியதே.



vadaliஅண்மைக்காலமாக காலச்சுவடு, உயிர்மை, அடையாளம் போன்ற பதிப்பகங்கள் பல ஈழத்தமிழர்களின் எழுத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இது நிச்சயம் ஒரு நல்ல அறிகுறியே. ஆனால் எம்மிடையே இருக்கின்ற சொல்ல மறந்த / மறுக்கப்பட்ட எல்லாக் கதைகளையும் இந்தியப் பதிப்பகங்கள் ஊடாகச் சொல்ல முடியாது என்பதுதானே யதார்த்தம். அண்மையில் த. அகிலனின் மரணத்தின் வாசனை வெளியிடப்பட்டபோது கூட அதன் பெயரை மாற்றுமாறு திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம் தானே வடலி பதிப்பகம் உருவாகக் காரணமாக அமைந்தது. இப்படியான நேரங்களில்தான் எமக்கென்று ஒரு பதிப்பகம் அமையவேண்டிய தேவை எழுகின்றது. இதுவரை வடலி வெளியீடாக வெளிவந்த 4 புத்தகங்களுமே ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களாக அமைந்ததுடன், வெவ்வேறு விடயங்கள் சார்ந்தனவுமாக இருக்கின்றன. தவிர, புலம்பெயர் நாடுகளில் வடலி நண்பர்கள் வட்டம் என்று அமைத்து புத்தக அறிமுகங்களைச் செய்யும்போது அது பலரைச் சென்றடையவும் வாய்ப்பாகின்றது. இளைஞர்கள் சேர்ந்து செய்த இம்முயற்சி தொடர்ந்து வெற்றிபெறுவது வாசகர் கையிலேயே இருக்கின்றது.



ஈழ நேசன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது


புகைப்படங்கள் நன்றி: ஈழநேசன்



Sunday, October 4, 2009

சடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்

-1 –



சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.

sadankuசெந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.

வெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஆபாசமாக கதை எழுதினார் என்பதற்காக மு. தளையசிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் உளறித்தள்ளும் அறம் சார்ந்த மேதாவிகள் இந்தக் கதை பற்றி என்ன சொன்னார்களோ தெரியவில்லை.



-2-



புலம் பெயர்ந்தும், சொந்த நாட்டில் வேலை நிமித்தமாகவும் குடும்பத்தையும், சொந்த மண்ணையும் பிரிந்திருந்து தம் இளமையை ஆகுதியாக்கும் எத்தனையோ பேரின் கதைகள் நிச்சயம் பதிவாக்கப்படவேண்டும். போர் தின்ற எம் சனங்களின் வாழ்வின் எத்தனையோ கதைகள் இன்னும் பதிவாக்கபடாமலேயே இருக்கின்றன. ஈழத்தில் இருந்து போர் தூக்கி எறிந்த எத்தனையோ பேர் உலகெங்கும் பதிவர்களாகப் பரவிக் கிடந்தாலும் இன்னும் பதிவாக்கப்படாமலேயே எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம் வருத்தத்துக்குரியது. அண்மையில் நண்பர் அந்நியனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு பதிவரும் மானசீகமாக, ஒவ்வொரு தலைப்பை அல்லது விடயத்தை தன் பதிவுகளில் முன்னிலைப்படுத்தவேண்டும். அதாவது அந்தப் பதிவர் வேறு விடயங்கள் பற்றி எழுதக் கூடாது என்பதில்லை. எதைப் பற்றியும் எழுதலாம். ஆனால் தான் மானசீகமாக எடுத்துக் கொண்ட விடயம் பற்றி ஆழமான, விரிவான பதிவுகள் எழுத வேண்டும். எல்லாப் பதிவர்களும் இதைப் பின்பற்றினால் பேசப்படாத விடயங்கள் அதிகமாகப் பதியப்படும். உதாரணத்துக்கு பதிவுகளில் இதுவரை 95 ஒக்டோபரில் இடம்பெற்ற இடப்பெயர்வு பற்றி பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. அதுபோல வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, தம்மை நாராக்கி தம்மைச் சார்ந்தவர்களை உயர்த்தியபின் ஆயிரம் கனவுகளுடன் ஊர் திரும்பி, வாழ்வின் வசந்தங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்ந்த இளைஞர்கள் – யுவதியர் பற்றிப் பேசப்படவில்லை. இதுபற்றியெல்லாம் தொடர்ச்சியாக எழுதப்படும்போது அவை எமக்கான ஆவணங்களாகக் கூட கருதப்படலாம்.



-3-



கனடாவின் வன்கூவரில் நடைபெற இருக்கின்ற திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்படுவதற்காக ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 1999 என்கிற திரைப்படம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்றறிந்து மகிழ்ந்தேன். கனடாவில் தமிழ் இனக்குழுக்களின் மோதல்கள் உச்சத்தை அடைந்திருந்த 1999 ம் ஆண்டளவில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற தகவலையும் அறிந்தேன். புலம்பெயர் நாடுகளில், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இனங்களில் ஒன்றான ஈழத்தவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இந்தக் குழுக்களிடையேயான மோதல்களும் இருக்கின்றன.

1999

வேற்றினத்தவர்கள் எம் மீது அதிகாரம் செய்ய செய்ய முற்பட்டதாலேயே எம் இளைஞர்கள் குழுக்களாகி வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்கின்ற ”ஜில்மால்” கதைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு இந்தப் பிரச்ச்னைகள் எப்படி உருவாகின்றன?, ஏன் உருவாகின்றன? என்றெல்லாம் திறந்த வெளியில் உண்மைகளைப் பேசுவதால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். (எனக்குத் தெரிந்த அளவில் தமிழ் இனக்குழுக்கள் தமிழ் இனக்குழுக்களுடன் மட்டுமே மோதுவது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன). இது போன்ற காரணங்களாலும், ஒரு முக்கிய திரைப்பட விழாவில் திரையிடப்பட தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற வகையிலும் இத்திரைப்படத்தையாவது கள்ள விசிடி வரும்வரை காத்திருக்காமல், திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டுகிறேன். மேலும் இப்படியான சில நல்ல திரைப்படங்களைப் பார்க்காமல் விடுவது கூட குருவி, ஏகன், போன்ற கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட ஒரு காரணமாக இருக்கின்றது. கருட புராணத்தில் இதற்கும் ஏதோ தண்டனை இருக்கிறதாம். எச்சரிக்கை.



நன்றி : ஈழநேசன் இணைய இதழ்



புகைப்படங்கள் நன்றி: ஈழநேசன்

Monday, September 28, 2009

நூலகம் - உன்னதம் - விழாக்கள் : சில எண்ணங்கள்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். 'யாழ்ப்பாணம் எரிகிறது', '24 மணி நேரம்' ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில் அந்த வலியை, அதற்குப் பின்னால் நடந்த மோசமான சிங்கள மற்றும் சில தமிழர்களின் அரசியலை ஒரு குறுநாவல் ஆக்கினார். இவையெல்லாம் நிச்சயம் எல்லாரும் பார்க்கவும், படிக்கவும், பத்திரப் படுத்தவும் வேண்டிய ஆவணங்கள். தமிழர்களிடம் இருக்கும் மிக மோசமான வழக்கம் சரியான முறையில் ஆவணப்படுத்தாமை என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலங்களிலேயே அதே தவறை திருப்பித் திருப்பிச் செய்துவருகிறோம்.

burned_library

ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் பல முக்கியமான புத்தகங்கள் தற்போது அச்சிலேயே இல்லை. சில அவசர தேவைகளின்போது உசாத்துணை செய்யக்கூட அவை கிடைப்பதில்லை. அண்மையில் முக்கியமான ஈழத்து எழுத்தாளர் ஒருவரது படைப்புகளை முன்வைத்து ஒரு விரிவான ஆய்வு ஒன்றினை ஒருவர் செய்ய விரும்பியபோது அவரது பல புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் பெருந்தடையாக அமைந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் நூலகம் (www.noolaham.net) என்கிற பெயரில் இணையத்தில் செய்யப்படுகிற ஈழத்தமிழ்ப் படைப்புகளின் தொகுப்பின் முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது. 5000 இற்கும் அண்மித்த புத்தகங்களை ஒழுங்கான பகுப்புகளுடன் மிகவும் நேர்த்தியாகத் தொகுத்துள்ளது தமிழர்க்கும், தமிழ் இலக்கியத்துக்கும் ஈழத்தமிழ் படைப்பிலக்கியத்தின் பங்கைச் சரியான முறையில் வெளிப்படுத்தும் என்றே நினைக்கிறேன். தவிர, இணையத்தில் பதிவேற்றப்பட்டவற்றுக்கு இருக்கும் சாகாவரம் காரணமாக மோசமான போர்ச் சூழலையும் தாண்டி படைப்புகள் சிரஞ்சீவித்தனம் பெற்றுவிடுகின்றன. எந்த ஒரு விடயத்தையும் அது வாழும் காலத்தில் கொண்டாடாத தமிழர்கள், நூலகத்தின் பயனையாவது சரியான முறையில் நுகர்வார்கள் என்ற கிளர் ஒளி நம்பிக்கை இருக்கின்றது.

2

தமிழ் வாசகப் பரப்பில் வெகுஜன எழுத்து, தீவிர எழுத்து என்கிற கதையாடல்கள் அடிக்கடி பாவிக்கப்படுவதுண்டு. வெகுஜனப் பத்திரிகைகளில் வருவன எல்லாம் வெகுஜன எழுத்துக்கள் அல்ல என்பதும் தீவிர இதழ்களில் வருவன எல்லாம் தீவிர எழுத்துக்கள் அல்ல என்பதும் பொதுவாக எல்லாரும் அறிந்ததே. அதே நேரம் தமிழின் முக்கிய சிற்றிதழ்கள் என்று சொல்லப்படும் உயிர்மையும், காலச்சுவடும் உண்மையாக சிற்றிதழ்களாகவே இருக்கின்றானவா என்ற கேள்வியும் நான் உட்பட பலரிடம் உண்டு. எனது கருத்தில் இவை இரண்டுமே இப்போது சிற்றிதழ் X வெகுஜன இதழ் என்கிற நிலைகளைத் தாண்டி, நடுவாந்திர இதழ்கள் என்கிற நிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொல்வேன். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என்கிற முக்கிய மூன்று வெகுஜன இதழ்களுமே “கமர்ஷியல் குப்பைகள்” என்ற இடத்தை அடைந்துவிட்ட நிலையில் அவற்றுடன் ஒப்பிடும்போது இவற்றைத் தீவிர இதழ்கள் என்று கொண்டாட வேண்டிய நிலை இருப்பினும், பரவலான அறிமுகத்தைப் பெறாமலே தீவிர தளத்தில் இயங்கி வருகின்ற இதழ்கள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பும் இருக்கின்றது.

unnatham_SEP_issue_copyஎனது அண்மைக்கால வாசிப்பு அனுபவத்தில் தமிழில் சிற்றிதழ்களுக்கான இடைவெளியை நிரப்பும் பங்கை கௌதம சித்தார்த்தனின் “உன்னதம்” சஞ்சிகை சரியாகச் செய்கின்றது. இச்சஞ்சிகையின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் இதழ்களை வாசித்திருக்கிறேன். அவற்றில் முறையே “போரும் வாழ்வும்”, இனப்படுகொலைகள், போன்ற விடயங்கள் மையமாக (தீம்) எடுக்கப்பட்டு ஆக்கங்கள் அமைந்துள்ளன. தவிர நிறைய புதியவர்கள் எழுதுவதால் புதிய சிந்தனைகளுக்கான களமாகவும் இது அமைகின்றது. அதுபோல உயிர்நிழல் இதழின் 31ஆவது இதழும் வாசிக்கக் கிடைத்தது. வழமையைவிட அளவில் பெரிதாக வந்துள்ள அதே நேரம் தரத்திலும் குறை வைக்கவில்லை.

பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்தில், ஆழமான விடயங்கள் இந்த இதழில் பேசப்பட்டுள்ளன. தமிழில் நல்ல இதழ்கள் வெளிவருவதில்லை என்ற அங்கலாய்ப்பை சற்றே தள்ளிவைத்து விட்டு இதை ஒருமுறை படிப்பது நலம்.

இலங்கையில் இருந்து ஜீவநதி, அம்பலம் என்கிற இதழ்கள் வெளிவருகின்றன. அம்பலத்தின் தரம் சிறப்பாக இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது போன்ற இதழ்களை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் இரவல் வாங்கி வாசிக்காமல் தனித்தனியே வாங்கி வாசிப்பது பதிப்பாளருக்குப் பெரும் ஆதரவாக அமையும். பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்தபடி வெளிவரும் முக்கியமான சிற்றிதழ்களை பிறருக்கு அறிமுகம் செய்வதே தவிர இரவலாக தொடர்ந்து தருவதில்லை என்ற கொள்கையில் ஓரளவு உறுதியாகவே இருக்கிறேன்.

3

புலம்பெயர் நாடுகளில் குடும்ப விழாக்களில் அடிக்கப்படும் கூத்துக்களை அவ்வப்போது சகித்துக்கொண்டு எமது சகிப்புத் தன்மையைப் பரிசோதித்துப் பார்த்து விடுகின்ற சந்தர்ப்பங்கள் நேர்ந்துவிடுவது உண்டு. பூப்பு நீராட்டுவிழா என்ற பெயரில் செய்யப்படும் ஆபாசங்களில் கலந்து கொள்வதில்லை என்ற என் கொள்கையையும் உறவுமுறைச் சிக்கலகளைச் சமாளிக்கும் பொருட்டு தளர்த்திக் கொண்டு சென்றவாரம் ஒரு பூப்பு நீராட்டு விழாவில் கலந்து கொண்டு அதன் அபத்தங்களைத் தரிசித்தேன். பத்து வயது மட்டுமே ஆன அந்தப் பெண் மேடை ஏறியதும், பெண்ணின் அண்ணனும் அண்ணியும் சேர்ந்து அவருக்கு ஆண்டாள் மாலை அணிவித்தனர்.

age_attendஅந்த நேரம் பார்த்து அறிவிப்பாளர், “ஆண்டாள் மாலையுடன் பார்க்கும்போது ஆண்டாளே கண்ணெதிரே தோன்றியது போல உள்ளது, இவர் ஆண்டாள் போலவே புகழ்பெற வாழ்த்துங்கள்" என்றார். அடப்பாவிகளா, கண்ணனைக் காலமெல்லாம் காதலித்துக் கிடந்தவள் ஆண்டாள் என்றுதானே எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்போ, இவரும் காலெமெல்லாம் அதே கதிதானா?, அதுக்கு ஒரு வாழ்த்தா?. இது தன்னும் பரவாயில்லை, 'தாயாரும் அறியாமல்' என்ற “உயிரோடு உயிராக” திரைப்படப் பாடலுடன் ஓரளவு பொருத்தமாகவே பாடல்களைத் தொடங்கிய DJ தொடர்ந்து ஒலிபரப்பிய பாடல் மேமாதம் 98ல் மேஜரானேனே...பாடல். அந்தப் பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் எவருக்குமே அந்தப் பாடலின் பொருள் விளங்கிவிடக்கூடாது என்று DJ யின் நலன் வேண்டி பிரார்த்திக் கொண்டேன். இது தன்னும் பரவாயில்லை இறுதியில் பஃபே முறையில் உணவு பரிமாறல் தொடங்கியபோது ஒலிபரப்பப்பட்ட பாடல் “டாடி மம்மி வீட்டில் இல்லை”. அன்று DJ பணி செய்த இளைஞரே கவனம், குழந்தைகளைப் பாலியல் ரீதியில் வர்ணித்துப் பாடல் ஒலிபரப்பினீர்கள் என்று சட்டம் உங்கள்மேல் பாயக்கூடச் சந்தர்ப்பம் இருக்கிறது.



இந்த பதிவு ஈழநேசன் இணைய இதழில் வெளிவந்தது.

படங்கள் : நன்றி ஈழநேசன்

Monday, August 31, 2009

பதிவுலக நண்பர்களும் அனுபவங்களும் மற்றும் புல்லட் உடனான என் மீண்ட நட்பு

-1-

து 2006ம் ஆண்டு. கனேடிய புலம்பெயர் வாழ்வு தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது வரை கொண்டாடிய உறவுகளும், நட்புக்களும், நம்பிக்கைகளும் தம் கோரமான சுய முகத்தைக் காட்டி என்னைக் கேலிபேசிக் கொண்டிருந்த காலம். புலம்பெயர முன் ஈழத்தில் கிடைக்கப் பெற்று, உலகெல்லாம் சிதறிக் கிடந்த சில நட்புக்களும், ஓரிரு உறவுகளும், எப்போதும் நான் நேசித்த புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே எனக்கு துணை வந்து கொண்டிருந்தன. எப்போதும் கூட இருந்த இருபதுக்கு மேற்பட்ட நட்புகளும், ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியும் மெல்ல விலகிச் செல்ல தனிமையின் குழந்தையாய் வெறுமையை உணரத் தொடங்கினேன். அதுவரை புத்தகங்களையும் இதழ்களையும் இணையத்தில் மட்டுமே வாசித்து வந்து கொண்டிருந்த எனக்கு தனது வலைப்பதிவு ஒன்றினை அவுஸ்திரேலியாவில் இருந்து நண்பன் தெய்வீகன் அறிமுகம் செய்தான். அவன் வலைப் பதிவும், அதில் இடப்படிருந்த பின்னூட்டங்களும் எனக்கு அப்போது ஆச்சர்யங்களாக இருந்தன. அந்த பிரமிப்பு தீர முன்னரே தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றையும் அறிமுகம் செய்தான்.

தமிழ் மணத்தில் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் டீசே தமிழனின் எழுத்துக்களைப் பார்த்து அதிகம் பிரமித்து ஒரு ரசிகனாகவே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். இதே நேரத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பதிவர் கானா பிரபா. அப்ப்போது அவர் அதிகம் நினைவுப் பதிவுகளாகவும், மலையாள மற்றும் பிறமொழி திரைப்படங்கள் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தார். அவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விடயங்கள் எனக்கிருந்தன. இயலுமானவரை பின்னூட்டங்கள் மூலம் செய்யப்பட்ட பகிர்தலின் இடையே, பகிர்தலுக்கு பின்னூட்டம் மட்டுமே வழி என்ற நிலையில் இருந்த போதாமையை நான் உணார்ந்து கொண்ட ஓர் இரவில் நான் என் கருத்துக்களை, எண்ணங்களை, கோபங்களை, பேசுவதற்கு எவருமே கிடையாத தனிமையை பதிவுகள் மூலம் வெளியிடத்தொடங்கினேன்.

பதிவுகளுக்கு சொல்வதெல்லாம் உண்மை என்று பெயர் வைத்த பின்னர் என்ன பெயரில் எழுதலாம் என்று யோசித்த போது அந்த நாட்களில் ராஜராஜசோழன் மேல் இருந்த அதீதமான காதலினால் (இதற்கு பொன்னியின் செல்வனும், பாலகுமாரன் எழுதிய ராஜராஜசோழன் பற்றிய கதைகளும் காரணமாக இருக்கலாம்) அருண்மொழிவர்மன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் நான் எழுதிய சில பதிவுகளை வாசிக்கும்போது வெட்கவே தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை உலக தரத்தில் ஒரு சினிமா என்று சொல்கிற முட்டாள்தனத்தை எல்லாம் செய்திருக்கிறேன். கவிதைகள் என்கிற பெயரில் சில கொடுமைகளை (இது சாடிஸத்தின் கீழ் கூட வரும்..???) கூட பதிந்திருக்கிறேன். அண்மையில் நண்பர் மெலிஞ்சி முத்தன் சில பழைய பதிவுகளை நீக்கி விடலாமே என்றூ ஒரு வேண்டுகோளாக வைத்தபோதும் கூட அதை நான் நீக்கவில்லை. நான் எழுதிய எல்லா அபத்தங்களுக்கு இடையிலும் அப்போதைய என் மன நிலையும், பேதமையும் நிறைந்தே இருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்துதானே நான். தவிர, எத்தனை மேற்படிப்பு படித்தாலும், “அ”னா “ஆ”வன்னா எழுதிப் பழைய பழைய கடதாசிகள் மற்றவர்களுக்குத்தான் குப்பைகள். எழுதினவனுக்கு பொக்கிஷங்கள்.

பதிவுகள் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தொழினுட்ப ரீதியாக இருந்த சில அறிவுக் குறைவுகள் காரணமாக என்னால் அவற்றை தமிழ்மணத்தில் இணைக்க்வோ, பதிவுப் பட்டையை இணைக்கவோ முடியவில்லை. அப்போது என்னுடன் உலாவந்த தாழ்வு மனப்பாண்மை காரணமாக அதற்கான முயற்சிகளைச் செய்யக்கூடவில்லை. ஒரு இன்ப அதிர்ச்சியாக “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்று நான் எழுதிய பதிவு ஒன்றிற்கு நான் அதிகம் கொண்டாடிய டிசே தமிழன் பின்னூட்டமும் இட்டு, பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கவும் கேட்டுக்கொண்டார். இதே போன்று கானாபிரபாவும் கேட்டுக்கொண்டதுடன், என்னுடன் எந்த அறிமுகமும் இல்லாதபோதும், என் வலைப்பதிவில் பதிவுப்பட்டையை இணைத்தும், வேறு சில வசதிகளைச் செய்தும் தந்தார். தனிப்பட்ட வாழ்விலும் நிறைய சிக்கல்களுல் சிக்கி உழன்று கொண்டிருந்த நாட்களில் எனக்குப் பெரும் நம்பிக்கையும், என் தனிமையை, மன உளைச்சல்களைக் கொல்ல ஒரு வெளியாக ப்திவுகளைத் தொடர உதவிய இருவர்க்கும் காலமெல்லாம் நன்றிகள்.

இதன்பின் ஒரு நீண்ட இடைவெளி. மன உளைச்சல்களால், தனிப்பட்ட சிக்கல்களால், உறவுகள் தந்த ஏமாற்றங்க்ளால், இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் நண்பர்கள் வட்டமே சிதறி விட ஏற்பட்ட வெறூமையினால் அதிகம் அல்லாடினேன். மீண்டும் ஒரு முறை கானாபிரபா மடல் எழுதினார். ஏன் நீண்ட காலம் பதிவுகள் எழுதவில்லை என்று கேட்டு, சுகம் விசாரித்து, மீண்டும் எழுதும்படி மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருந்த கடிதம் அது. அன்று இருந்த விரக்தியில் “என் மீதும் அக்கறைப் பட மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை தந்த கடிதம் அது. 2007ம் ஆண்டு பிப்ரவரியில் எழுதிய பதிவின் பின்னர் மீண்டும், 2008 மேயில் பதிவெழுதத் தொடங்கினேன். இடைப்பட்ட இந்தக் காலத்தில் சக பதிவர் விஜேசந்திரன் டொரண்டோ வந்திருந்தார். வலைப்பதிவுகளில் ஏற்பட்ட அறிமுகத்தில் அவர் டொரண்டோ வரும்போது சந்திப்பதாக உறுதி செய்திருந்தேன். உண்மையில் அதில் மிகவும் ஆவலாயும் இருந்தேன். ஆனால் அவர் இங்கு வந்திருந்த நேரம் தேவையில்லாத ஒரு வழக்கு காரணமாக அவர் பலமுறை அழைத்தும் சந்திக்க முடியாமல் இருந்தேன். இப்போதும் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் வேதனை அது.

எந்த நேரத்திலும் நான் மன் அழுத்த நோய்க்கு உள்ளாகிவிடலாம் என்று குடும்ப வைத்தியர் அபாயச் சைகை காட்டியிருந்த நேரத்தில் டிசே தமிழன மற்றும் நிவேதாவை ஒரு குறும்பட வெளியீட்டு விழாவில் முதன்முறையாக சந்தித்தேன். காலம் செல்வம் அறிமுகம் செய்துவைத்தார். அதன் பின்னர் அருண்மொழிவர்மன் என்று என்னை அறிமுகம் செய்து நிறையப் பேசினோம். ” வலைப்பதிவுகளுக்கு நான் புதியவனாக இருந்தாலும் உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டேன். எனது இலக்கிய தேடல்களுக்கும் வழிகாட்டல் இல்லாத வாழ்க்கைக்கும் உங்கள் அறிமுகம் உதவும் என்று நம்புகிறேன்.” அவரது பதிவொன்றிற்குப் பின்னூட்டமிட்டதனை அதிகம் நம்பத் தொடங்கினேன். அவர் மூலமாக நிறைய எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அனேகமாக எல்லா இலக்கிய விழாக்களிற்கும் செல்லத் தொடங்கினேன். சராசரி, நடுத்தர புத்தகங்களை விட்டு விலகி நவீன இலக்கியங்களை வாசிக்கவேண்டும் என்ற அதீதமான ஆவலும், எதை வாசிப்பது என்ற குழப்பமும் நிறைந்திருந்த என்னை பல திசைகளில் பயணிக்க பழக்கப்படுத்தினார். அருமையான பல புத்தகங்களை பகிர்ந்துகொண்டார். மெல்ல மெல்ல என்னை மன உளைச்சல்கள், அழுத்தங்கள், அலைச்சல்களில் இருந்து மீட்க அதிகம் உதவியது அவர் அறிமுகம். கிட்டத் தட்ட இதே காலப்பகுதியில் ஊரில் என் தோழனாயிருந்த, பிரதீபனின் கனேடிய வருகையும் எனக்கு ஆதரவாக இருந்தது. தூக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு விடிய விடிய இலக்கியம், அரசியல் என்று நிறையப் பேசினோம். பேசுவதற்கு ஆட்களே இல்லை என்ற தனிமையில் இருந்து மனம் விட்டு நிறையப் பேசலாம் என்று நட்புகள் அருகிலேயே நெருங்கத் தொடங்கின. அனேகமான என் எல்லாப் பதிவுகளின் முதல் வாசகனாய் இருந்து அதிகம் ஊக்கப்படுத்திய, கடல் கடந்து இருந்தாலும் பெரும்பாலும் தினமும் கதைத்து விடுகிற, 17 ஆண்டுகால நட்பில் சண்டை பிடிப்பதற்கான உரிமையை எப்போதும் தந்துவிடுகிற கதியால் தந்த ஆதரவும் பெரும்பங்கு.

பொதுவாக நிறையப் பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிடுவது மிகக்குறைவு. பல பதிவுகளை வேலை நேரத்தில் வாசிப்பதாலும் (தமிழில் தட்டச்சும் வசதி கிடையாது) இயல்பாகவே எனக்கு இருக்கும் சோம்பேறித் தனத்தாலும் பின்னூட்டமிடுவதற்கான சந்தர்ப்பங்கள் தவறிப்போய்விடுகின்றன. அப்படி இருந்தும் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் கதியால், தமிழன் கறுப்பி, துர்க்கா-தீபன், கிருஷ்ணா, வாசுகி, பாரதி போன்றவர்கள் நிச்சயம் நன்றிக்குரியவர்கள். அது போலவே எந்த அறிமுகமும் இல்லாமல் எனக்கு சுவையார்வ பதிவர் என்று கௌரவம் தந்து நல்ல அறிமுகம் தந்த கோவி. கண்ணனும். ஒரு மூத்த, பிரபல பதிவரான இவர் தந்த அறிமுகம் எனக்கெல்லாம் பெரும் ஊக்கம் தருவது.


-2-

அண்மையில் இந்த பதிவுலகம் எனக்கு இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. அண்மையில் கொழும்புவில் நடந்து முடிந்த பதிவர் சந்திப்பின் படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன. படங்களைப் பார்த்த நண்பன் விசாகன் msn messenger மூலம் தொடர்புகொண்டு “டே உனக்கு “புல்லட்” யாரென்று தெரியுமா? என்று கேட்டான். கேள்விப்பட்டிருக்கிறேன், தெரியாதென்றேன். அவன் உடனே புல்லட்டின் டம் ஒன்றை அனுப்பினான். ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனேன். அதே மூக்கு, அதே கண், அதே சில்க் தலை முடி, அவனேதான். 95ல் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் ஒரு பாரிய இடப்பெயர்வு நடந்தது நினைவிருக்கலாம். அப்படி இடம்பெயர்ந்து இருந்த போது நானும் அவனும் ஒரே வீட்டில்தான் தங்கி இருந்தோம். அவனுக்கு என்னை விட 6 வயது குறைவு. என் தம்பியின் வயது. வயது வித்தியாசம் தாண்டி ஒரு நட்பு உருவாகி இருந்தது. ப்கல் முழுதும் ஓயாத பேச்சு, மாலை முழுவதும் நான், என் தம்பியர் இருவர், புல்லட், அவர் தம்பி, விசாகன், தயாபரன், சயந்தன் என்ற நண்பர்கள் என்று கிரிக்கெட் இப்படியாக அந்த இருண்டகாலத்தையும், இனிப்பானதாக மனதில் பதிய வைத்ததில் புல்லட்டுக்கும் அவன் தந்தைக்கும் பங்குண்டு. அதன் பிறகு 96ல் மீண்டும் யாழ் சென்று பின்னர் நாம் 97ல் கொழும்பு வந்துவிட தொடர்புகள் அறுந்துவிட்டன. பல தடவைகள் நான் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. பதிவர் சந்திப்பில் பார்த்த அவர் படங்களின் பின்னர் மீண்டும் தொடர்புகொண்டேன். அவனுடனான தொடர்பாடலை அவன் அனுமதியுடன் கீழே இணைத்துள்ளேன். பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்தவர்களுக்கும், படங்களை வெளியிட்டவர்களுக்கும் தனி நன்றிகள்.


கடிதம் 1
வணக்க்ம்

புல்லட்,
நினைவிருக்கிறதா? என் பெயர் சுதர்ஷன் / சுதன் அண்ணா என்றழைப்பீர்கள்

கொடிகாமத்தில் ஒரே வீட்டில் இருந்தோம்.

இன்றுதான் விசாகன் உங்கள் படத்தைப் பார்த்து நீங்கள்தான் புல்லட் என்று சொன்னான்.

உங்கள் சுகம் எப்படி. நான் சுகமே உள்ளேன். இப்போது கனடாவில் இருக்கிறேன். மிச்ச எல்லாரும் கொழும்பில்.
உங்கள் தந்தையின் செய்தி எனக்கு தாமதமாக தான் கிடைத்தது
சொரி புல்லட்
தம்பி, தங்கை என்ன செய்கிறார்கள்?

அம்மா எப்படி இருக்கிறார்?

நான் சும்மா அருண்மொழிவர்மன் என்ற பெயரில் solvathellamunmai.blogspot.com என்று எழுதுகிறேன்....

உங்களுடன் நிறைய கதைக்க வேணும் போல உள்ளது....

அந்த கொடிகாம வீட்டில் இருந்து 3 பதிவர்கள் உருவாகி விட்டோம்
(நான், நீங்கள், கதியால் என்ற பெயரில் எம் நண்பன்)

உஙகளிடன் ஃபேஸ்புக் இருந்தால் sutharshan@hotmail.com ல் என்னை இணைக்கலாம்... இல்லை நான் இணைக்க முயல்கிறேன்

வேற்ன்ன...
சந்திப்போம்

என்றென்றும் அன்புடன்
சுதர்ஷன்


கடிதம் 2

கதிரை மலைக்கந்தா! அட அநியாயமே? உங்கள் முழுப்பெயர் சுதர்சனா? நான் பெஸ் புக்கில தேடாத கொம்பினேசன் இல்லை .. சுதன் சிறிநிவாசன் , சிறிநிவாசன் சுதன் என்று .. உங்கள் ஏனைய சகோதரர்களின் பெயர் மறந்து விட்டேன்.. தீபன் என்று என்வயதில் ஒருத்தன் இருந்ததாக ஞாபகம்.. மற்றது ஒரு 3 வயது மூத்த ஒருவரும் ஒரு தங்கையும் இருக்கிறாரக்ளல்லவா? அம்மாவின் பெயர் தவனாக்கா தானே? கடவுுளே.. எவ்வளவு காலம் 15 வருடங்களாகிவிட்டது.. ம்ம்.. நான் பல்கலையில் எஞ்சினீரிங் முடித்து ஒரு அமெரிக்க கம்பனியில் வேலை செய்கிறேன்.. தம்பியார் ஓரிரு வருடங்களில் மருத்துவராகி விடுவார்.. தங்கை ஏ எல் படிக்கிறார்.. அப்பம்மா 2000 இல் இறந்து விட்டார்.. அப்பா 2006 இல் இறந்து விட்டார்.. வேறு புதினங்கள் இல்லை.. நான் மேல் படிப்புக்காக கனடா அல்லது அமெரிக்கா செல்லும் எண்ணம் உள்ளது.. 2011 இல் என்று முடிவெடுத்துள்ளேன்.... மற்றது உங்கள் வீட்டாருடன் கட்டாயம் தொடர்பை ஏற்படுத்துவேன் முகவரி தரும் பட்சத்தில்.. வேறு என்ன? உங்களின் முகம் ஞாபகம் இல்லை.. ஒரு உயரமான நெடுத்த உருவம் சறமும் டீசேட்டும் போட்டு மங்கலாக ஞாபகம் இருக்கிறது..

தில்லானா முத்து பட பாட்டு கேட்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் ஒரு முறை வந்து போகும்.. ஏனெனில் இந்த பாட்டு முதன்முதல் கேட்டது உங்கள் டேப்ரெக்கோடரில“தான்.. காதலன் பெடராப் பாட்டு நீங்கள் கொண்வந்தபோது கேட்கமுடியாமல் அவஸ்தைப்பட்டதும் ஏறத்தாழ 8 வருடங்களுக்கு பிறகு அந்த பாட்டை கேட்க முடிந்த போது சிரித்துதும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.. உண்மையை சொலவதானால் யாழில் இருக்கும் போதெல்லாம் உங்களயெல்லாம் நினைத்துப்பார்த்ததோ அப்பாவிடம் நீங்கள் எங்கேயென்று விசாரித்ததோ இல்லை.. இப்போது தனிமையில் கொழும்பில் இருந்து பழவையனவற்றை மீட்கையில்தான் மனது கனக்கி றது..

உங்கள் தாயார் ஒரு விசேடமாக புட்டு செய்வார்.. நான் சாகமுன்பு அதை எப்படிச் செய்வது என்று தெரிந்து விடவேண்டுமென்ற முயற்சியில்தான் உங்களை தேடும் மயற்சியில் இறங்கினேன்.. சிரிப்பாயிருக்கிறதா? அவர் ஒரு முறை செய்த சக்கரைப்புட்டு இன்னும் நாவில் நிற்கிறது.. அவர் முகமும் மற்ந்து விட்டது.. எப்படி உள்ளார்கள் எல்லாரும் ? கேட்டதாக சொல்லுங்கள்.. உங்களுக்கு திருமணமாகி விட்டிருந்தால் மனைவி குழந்தைகளை க்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்..

நீங்கள் தொடர்பு கொண்டது இன்ப அதிர்ச்சி.. விசாகன் அண்ணாவுக்கு நன்றிகளை சொல்லுங்கள்.. அவர் தற்போது சிங்கையில்தான் உள்ளாரென்று நினைக்கிறேன்.. அவர் தொட‌ர்பும் இல்லை..

பரபரப்பில் எல்லாம் உளறலாக எழுதி விட்டேன்.. தொகுத்து வாசித்துக்கொள்ளுங்கள்.. :) உங்கள் பதிவை வீடு சென்று அறுதலாக வாசிக்கிறேன்..
நான் சின்னப்பிள்ளைத்தனமாகத்தன் எழுதுவேன்.. பதிவுலகில் சந்திக்க நேர்ந்தது பாரிய மகிழ்ச்சி..

தொடர்பிலிருங்கள்..

புல்லட்..


கடிதம் 3

mmm புல்லட்.

மிகவும் சந்தோஷமாக உள்ளது இப்படியாவது தொடர்பு கிடைத்ததே என்று. நான் நிறைய உங்களைப் பற்றி யோசிப்பேன். விசாகன் சொன்னான் சிலதடவைகள் உங்களை சந்தித்துக் க்தைத்ததாக, ஆனால் தொடர்புகள் இருக்கவில்லை என்று

புல்லட் உண்மையில் அந்தக் கொடிகாம வீட்டில் நிறையப் பேர் இருந்தாலும், நாங்கள் இரண்டு குடும்பமும் நிறையப் பழகினோம் இல்லையா?. நீங்கள் ஒரு கிரிக்கெட் பட் செய்வித்தீர்கள். அதைக் கொண்டு கிரிக்கெட் எல்லாம் விளையாடி இருக்கிறோம்... அதுவும் ஐயாவுக்குத் தெரியாமல். ம்ம் அது ஒரு காலம்.

இன்று எங்கள் வீட்டாரிடம் கொழும்பில கதைப்பேன். அப்போது உங்களைப் பற்றி சொல்வேன். புல்லட்,, உங்கள் தொலைபேசி இலக்கம் என்ன?.
தந்தால் கதைப்பேன்....


வேறென்ன புல்லட், உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்வேன்.
உங்கள் படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். உங்களில் முகத்தில்ல் அதே சாயல் உள்ளது. ஆனால் வளர்ந்துவிட்டீர்கள். மூக்கும், கண்ணும் அதே மாதிரி உள்ளது...

புல்லட், நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை, (உங்கள் உண்மைப் பெயரை மறைத்து) எனது ப்ளாக்கில் போடலாமா? உங்களுடன் உறவு மீண்டது பற்றி ஒரு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்
Enrenrum Anbudan ----------------Sutharshan


கடிதம் 4

நிச்சயமாக செய்யுங்கள்.. வேண்டுமானால் உங்கள் செம்மையான தமிழ்ப்பாணியில் அதை மாற்றி போடுங்கள்.. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.. நேற்றும் முந்தநாளும் உங்கள் பதிவுகளில் தேடியதில் கொடிகாமத்தை பற்றி எதையும் காணோம்.. சற்று கவலையாக இரந்தது.. நவாலிப்பதிவில் இடம்பெயர்ந்து சென்றதாக மட்டும் குறிபிபட்டிருந்தீர்கள்.. ஆனால் நானும் எழுதவில்லைதான் ... எனக்கு என்னத்தை எழுதுவது என்றுதான் பரபரப்பு .. எழுதவெளிக்கிட்டால் ஒரு பெரிய புராணம் போல தான் எழுத வேண்டும்..


என் தொலைபேசி இலக்கம் *********** .. தயவுசேய்து என்னை நீ என்றே அழைக்கவும் ... தொலைவாக உணர்கிறேன்.. :) நீங்கள் சற்றுக்குண்டாகி விட்டதுதான் வித்தியாசமாக உள்ளது..

நன்றி எல்லாவற்றுக்கும்...

புல்லட்



-3-

கீத் உடனான அறிமுகம் எனக்கு அண்மையிலேயே நிகழ்ந்தது. அவரது பல பதிவுகளை வாசித்துள்ளேன். அவரது சுவாரசியமான எழுத்து நடை எனக்கு அதிகம் பிடிக்கும். தவிர கலாசாரம், பண்பாடு என்று சமுதாயம் போடும் வேடங்களைக் கிழித்து நாராக்குவதில் காட்டும் வேகம் அதிகம் பிடிக்கும். ஒரு குறுகிய அறிமுகத்திலேயே “நள்ளிரவு 12 மணிக்கு அழைத்தாலும் சிரித்தபடி பேசும்..” என்று ஒரு அறிமுகத்துடன் என்னை இந்த “பதிவெழுத வந்த கதை” தொடர் பதிவிற்கு அழைத்துள்ளார். நல்ல நட்புகளை தேடுவதில் எப்போதும் ஆவலாய் உள்ள எனக்கு இவை எல்லாம் மகிழ்வூட்டுவனவே. நானும் என் பங்குக்கு 4 பேரை அழைத்து வைக்கிறேன்.

தமிழன் கறுப்பி ரசனை பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய பேரின்பநாயகியின் மயக்கம் எனக்கு இன்னும் தீரவில்லை. உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக அவர் எழுதிய ஒரு கதையைப் பார்த்துவிட்டு, நாம் எல்லாம் என்ன பிழைப்படா பிழைக்கிறோம் என்று சலித்தது தான் மிச்சம் சென்றவாரம் என் பிறந்த நாளிற்கு அமர்க்களமான ஒரு வாழ்த்தை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார்.

கதியால் – கிடுகுவேலி என்ற வலைப்பதிவில் எழுதுபவர். என் நெடுநாள் நண்பர். கடல் கடந்து இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் அதிகம் நான் பேசிக்கொண்டு இருந்தது இவருடனாகத் தான் இருக்கும். ஈழத்து ஆலயங்கள், கிரிக்கெட் என்று கலந்து கட்டி எழுதுபவர். இன்னும் சுவையான பல விடயங்களை எழுதக் கைவசம் வைத்துள்ளவர்.

புல்லட் வலைப்பதிவுகள் எனக்குப் புதுப்பித்து தந்த நட்பு. சிறு வயதிலேயே சூட்டிகையானவர். ஒரு முறை மாலை நேர வீதி உலாவிற்கு நானும் தயாபரனும் ஆயத்தமான போது பிராக்குப் பார்க்க போகிறீர்களா? என்று கேட்டார். நாம் ஓமென்று சொல்ல, frock என்றால் பெண்கள் போடும் சட்டை, அப்ப சைட் அடிக்க போகிறீர்கள். அப்படித்தானே என்றார். அப்போது அவருக்கு வயது 10.

இன்னும் நிறையப் பேரை அழைக்க ஆசைதான். ஆனால் எத்தனை பேரிடம் திட்டு வாங்குவது. இப்போதைக்கு இவர்கள் மூவரும் திட்டினால் போதும்.