Thursday, November 27, 2008

நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை


மனிதவாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரசனைகளும், விருப்பங்களும் கொள்கைகளும் முக்கியத்துவங்களும் மாறிவருவதுபோல உறவுகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் எம் கண்ணுக்கு தெரியாத ஒரு ரகசியபாதையில் தடம் மாறி செல்கின்றன. குழந்தை பருவத்தில் தாயுடன் இருக்கின்ற நெருக்கமான உறவு பின்னர் தந்தையுடன் நெருங்கிபின்னர் பதின் பருவத்தின் மத்தியில் நண்பர்களுடன் தாவுகின்றது. இந்த உறவு எல்லார் வாழ்விலும் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது.

பொதுவாக உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு தீர்க்கமுடியாத பந்தத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நட்பை பொறுத்தவரை அதற்கு எந்தவித கட்டாயமுமில்லை. எந்த ஒரு நெருங்கிய நண்பனையும் ஒரே நாளில் நண்பனில்லை என்று ஒதுக்கி வைக்ககூடிய ஒரு உறவு அது. நட்பின் பெருமையும் இதுவே, சிறுமையும் இதுவே. இளமையில் நட்பை கொண்டாடுவோர் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு வசனம் இது. இருபதுகளின் ஆரம்பத்தில் பொறுளாதார ரீதியில் பெரிய நெருக்கடிகளும் ஏற்படாத, அதே சமயத்தில் சமூகத்தில் ஒரு முழுவயதினராக (adult ) கணிக்கப்டும் போது நண்பர்களே உலகம் என்று தோன்றும். நட்புக்காக உயிரை தருவேன் போன்ற வசனங்கள் எல்லாராலும் பேசப்படும். ஒருவித குழு மனப்பான்மை பரவி சிலசமயங்களில் குழு கலாசாரம் வரை (Gang Culture / Mob Culture) இட்டுச்செல்லும்.

இதன் பிறகு இருபதுகளின் இறுதியில் திருமணம் நிகழ அதன் பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். விரும்பிய நேரத்தில் படுத்து, எழும்பி, உண்டு, குளித்து , சவரம் செய்து அல்லது இவையேதும் செய்யாமல், வார இறுதி என்றால் இரவிரவாக நண்பர்களுடன் வெட்டிக் கதைபேசி இருந்த வாழ்வுக்கு புதிதாக ஒரு தடா வந்தவுடன் பெரும் மனக்குழப்பம் வரும். அதிலும் நண்பர்களின் பிறந்த நாள், அவர்களின் காதலியரின் பிறந்த நாள், முன்னாள் காதலியரின் பிறந்த நாள், இந்தியா பாகிஸ்தானை வென்ற நாள் மூன்றாம் மாடியில் இருக்கும் கீதா முதன் முதலாய் பார்த்து சிரித்த நாள் என்றெல்லாம் கூறி பார்ட்டி வைக்கும் கதையெல்லாம் எடுபடாமல் போகவே விரக்தியும் உண்டாகும். அதிலும் நண்பர்கள் கூட்டத்தில் முதலில் கல்யாணம் ஆனவன் என்றால் அதோகதி தான். அவன் இப்ப மாறீட்டான் மச்சான் (அல்லது அத்தான்), மனிசீன்ற கால்ல விழுத்திட்டான் என்ற காமென்ட்ஸ் அப்பப்ப காதில்விழ கோவிந்தா கோவிந்தாதான்.

இப்படிபட்ட ஒரு நிலையை மிக அழகாக எதிர்பக்கம் என்று ஒரு கதையாக்கியிருப்பார் பாலகுமாரன். கல்யாணத்தின் பின்னர் நண்பர்களுடனான தொடர்பு குறைய, கல்யாணம் ஒரு கால்விலங்கு போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கி, இறுதியில் வாழ்வின் ஒரு கட்டம் இது. இதுவும் கடந்துபோகும் என்று அழகாக கதையை முடித்திருப்பார் பாலா. வரது மைலாப்பூரில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். கணேசன், மனோகர், கலியபெருமாள், சுப்பிரமணி என்று ஒரே அந்தஸ்தில் உள்ள நண்பர்கள்.இந்நிலையில் திடீரென வரதுவுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அத்தனை நண்பர்க்ளும் தம் வீட்டு விசேஷம் போல காலை காப்பி முதல் கையலம்புகிற தண்ணீர் வரை பொறுப்பை இழுத்துபோட ஜாம் ஜாமென்று கல்யாணம் முடிகின்றது. வரது மனைவி கல்யாணியுடன் மைலாப்பூர் வருகின்றான்.

கல்யாணி வரதுவின் நண்பர்களை அண்ணா அண்ணா என்றழைக்கிறாள். வரது நண்பர்களுடன் தம்பதியராய் நின்று படமெடுத்து நடு ஹாலில் மாட்டுகிறான். பொம்பள கையால சாப்பிட்டு எத்தனை காலமாச்சு என்று ஒருவன் அங்கலாய்க்க அவர்களின் வீட்டிற்கு கல்யாணியின் சமையலில் இரண்டு வாரம் வத்தக்குழம்பு போகிறது, ஒருவாரம் ரசம் போகிறது , நாலாம் வாரம் முடியல என்று தகவல் மட்டும் போகிறது. அதே நேரம் கல்யாணி நண்பர்கள் திருமணத்தில் செய்த உதவிகளை எல்லாம் அடிக்கடி கேலியாக்குகிறாள். கிராமத்திலிருந்து வந்த கல்யாணியால் திருமணத்தில் லைட் ம்யூசிக் ஏற்பாடு செய்த நண்பர்களின் செயல் கேலி செய்யப்படுகிறது. பேச்சு வளர நண்பர்களுடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தவேண்டும் என்று கல்யாணி வற்புறுத்துகிறாள். தான் தன் வீட்டை விட்டு வந்தது போல வ்ரதுவும் நண்பர்களைவிட்டு விலக வேண்டுமென்று வாதிடுகிறாள். கல்யாணி இவன் நண்பர்கள் உதவிகளை எல்லாம் நக்கலாக பேச வரது பதிலுக்கு அவள் உறவினர்களை பற்றி திட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்லுகிறான்.

அடுத்த நாள், கல்யாணி கலியபெருமாளிடம் சென்று வரதுவை பற்றி முறையிட, மன்னிப்புகேட்டு வத்தகுழம்பு ஒரு சட்டியும் கொடுத்துவிட்டு வருகிறாள். முழு பிரச்சனையும் வத்தகுழம்பாலே வந்தது போன்ற ஒரு நிலை உருவாக்கப்படுகிறது. உன் உறவே வேண்டாம் என்று நண்பர்கள் வேறு புறக்கணிக்கதொடங்குகிறார்கள். அதன் பிறகு மனோகரை ஒரு சந்தர்ப்பத்தில் காண்கிறான். அவன் தனது கல்யாணத்துக்கு வரதுவை அழைக்கிறான். (இந்த இடத்தில் அவன் கை குலுக்கலில் சினேகமில்ல்லை என்று ஒரு வசனம் வரும்). கல்யாண ஒழுங்குகள் எல்லாமே காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டதாய் மனோகர் சொல்கிறான். ஒரு முறை பட்டதே போதும் என்று அவன் சொல்வது வரதுவை தாக்குகிறது. தனக்காக வீட்டில் புதிதாக யாரும் வந்துள்ளார்களா என்று வரது கேட்க ஆறு வருட ஸ்னேகமே மூன்று வாரத்தில் புட்டுகிச்சு, புதுசா ஒண்ணு தேவையா என்று சொல்கிறார்கள். கல்யாணியிடம் முன்னர் வத்த குழம்பு கேட்ட கணேசன் வத்த குழம்பென்றாலே தனக்கு பிடியாது என்கிறான். இப்படி புறக்கணிப்பின் வலி மீண்டும் மீண்டும் வரதுவுக்கு உணர்த்தப்படுகிறது. சில காலம் செல்கிறது. கல்யாணி பிள்ளை பெற , குடும்ப சகிதம் கோயிலுக்கு போகும்போது தாம் முன்பு சந்திக்கும் அதே கோயிலருகில் அடுத்த தலைமுறை இளைஞர்கள் நிற்பதை பார்த்தபடி, கல்யாணி குழந்தைகளின் உடை பற்றி ஏதோ சொல்ல ஆமாம் என்று சொன்னபடி போகிறான்.


நம் யதார்த்த வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை ஒன்றை இக்கதை மூலம் தெளிவாக காட்டுகிறார் பாலா. பொதுவாக போனால் வேலை, வந்தால் வீடு என்றளாவில் பலர் வெளிப்புற தேடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அதனை பார்த்து வளரும் பெண்கள் தம் கணவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் முளைவிடுகின்றது இந்த பிரச்சனை. அதுவும், தனது அப்பாவோ, அண்ணாவோ, மாமாவோ, அத்தானோ அப்படி இருக்கிறான் என்பதற்காக அப்படியே தன் கணவனும் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. பல்லாண்டுகாலமாக இருந்த தொடர்புகளை, வழக்கங்களை ஒரே நாளில் அறுப்பது முடியாதென்பதை இருவருமே உணரவேண்டும். இதற்கு இன்னொரு காரணம் ஒருவனுக்கு இருக்கும் எந்த கெட்ட பழக்கத்திற்கும் அவனது நண்பர்களையே காரணமாக சொல்கின்ற ஒரு சபிக்கப்பட்ட மனநிலை. ஒருவன் கெட்டுப்போனால் அவன் நண்பர்களை குற்றம் சாட்டுபவர்கள் ஒருபோதும் அவன் நல்ல நிலைக்கு வரும்போது நண்பர்களை பாராட்டுவதில்லை. இந்த நிலையே பெண்களை பொதுவாக கணவர்களை நண்பர்களிடம் இருந்து பிரிக்க தூண்டுகிறது. இதுபோல நான் அவதானித்த இன்னொரு முரண், ஒருவரை பற்றி விசாரிக்கும்போது “அவன் நல்ல பெடியன், friends என்றதே இல்லை” என்று கூறுவது. இதில் என்ன யதார்த்தம் என்ன என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை.

இந்த கதையில் பாலா எந்த ஒரு முடிவையும் முன்வைக்கமாட்டார். வரது அந்த வாழ்க்கையையே ஏற்றுகொண்டான் என்றளவில் கதை முடியும். இது ஒரு சமரச மனப்பாங்கு. இது நம் வாழ்க்கைமுறை பற்றி, குடும்பம் பற்றி மிகப்பெரும் கேள்விகளை எழுப்புகின்றது. எல்லா கேள்விகளும் பதில் சொல்லவேண்டியனவும் அல்ல ,பதில்கள் உடையனவும் அல்ல.


எதிர்பக்கம் கதை நானே எனக்கொரு போதிமரம் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளியானது.

Wednesday, November 26, 2008

தமிழ் சினிமாவில் தந்தைப்பாசம்

தமிழ் சினிமாவுக்கென்று நிறைய கல்யாணகுணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது செண்டிமெண்ட். இந்த சென்ரிமெண்ட் மசாலா கலக்கப்படாத எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறமுடியாது என்பது அதன் சாபக்கேடுகளில் ஒன்று. அதிலும் உறவு முறை சித்திகரிப்புகளில் தாய்ப்பாசம், காதல், சகோதரப்பாசம், நட்பு, எஜமான விசுவாசம், தேசப்பற்று, சாதிப்பற்று என்று வரும் பட்டியலில் மிகத்தொலைவிலேயே தந்தையர் பாசம் இருக்கின்றது. தாயை முன்னிலைப்படுத்துவதாலேயே பெண்களை கவரலாம் என்கிற ஒரு உத்தி இருப்பது இதற்குகாரணமானாலும், இதனை முன்னிலைப்படுத்தி தந்தையரை சித்திகரிக்கும் விதம் மிகுந்த விசனத்துக்குரியது. அதிலும் ஹீரோயினின் தந்தை என்றால் கேட்கவே வேண்டாம் 90% அவர்தான் வில்லன். அதனால் ஹீரோவுடன் மோதி, “நீ இவளோட அப்பன் என்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன்” என்று விரலை சொடுக்கி ஏகவசனத்தில் ஹீரோ பேசுவதை கிழிந்த சட்டை, உடலெங்கும் அப்பிய புழுதி மற்றும் காயங்களுடன் கேட்கவேண்டும். கதாநாயகனின் அப்பாவுக்கு கதாநாயகனிடம் அடிவாங்கும் சந்தர்ப்பம் வராதே தவிர அவரது இருப்பு பெரும்பாலும் படங்களில் உணரப்படுவதேயில்லை.

ஒரு பிள்ளை ஆரோக்கியமாக வளர தந்தை – தாய் உறவு நிலை நன்றாக இருக்கவேண்டும். அதே போலவே ஒரு சமுதாயம் இயங்கவும். ஆனால், தாயை போற்றுவதற்காக தமிழ் சினிமாவில் தந்தையர் பெரும்பாலும் காதலியை கர்ப்பினியாக்கிவிட்டு ஓடுபவர்களாகவோ (மிஸ்டர் பாரத்) குடிகாரர்களாகவோ, வேறு பெண்களுடன் தொடர்புள்ளவர்களாகவோ காட்டப்படுவது வழக்கம். இதற்கு எதிர்மாறாக நல்ல தந்தையை காண்பிக்கிறேன் பேர்வழி என்று தந்தையரை அளவிற்கு மிஞ்சிய ஏமாளிகளாக மகன்களால் பிற்காலத்தில் கைவிடப்படுபவர்க்ளாக காண்பிப்பது இன்னொரு மிகை (ஒன்பது ரூபாய் நோட்டு, சிவாஜியின் பல படங்கள்). போனால் போகட்டும் என்று ஒரு நகைச்சுவை பாத்திரமாக (ப்ரியமுடன்) அல்லது எது செய்தாலும் மகனை கரித்துகொட்டும் ஒருவித சைக்கோ காரக்டராகவோ வருவது (எம்டன் மகன், தனுஷின் படங்கள்) இன்னொரு வகைபடங்கள். இவை எல்லாவற்றையும் தவிர்த்து தந்தை – மகன் உறவை ஒரு யதார்த்தமான முறையில் வெளிக்காட்டிய படங்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படியான சில படங்கள் பற்றிய பார்வை இது.

கிங்

பெரியளவி
ல் வெற்றி பெறாத படம். விக்ரம் – சினேகா இணைந்து நடித்த இப்படத்தில் நாசர் – விக்ரம் முறையே அப்பா மகனாக நடித்தனர். ஹாங்காங்கில் இருவரும் இருப்பதாக வரும் காட்சிகளில் இருவரதும் உறவுமுறை நன்றாக காட்டபட்டிருக்கும். நோயால் தாக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் விக்ரத்திடம் அதை மறைத்து தனக்கு வருத்தம் என்று நாசர் நாடகமாடும் படம். உண்மையை விக்ரம் உணரும் கட்டங்களில் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். அவர் நடித்த படங்களிலேயே அற்புத நடிப்பை கொண்ட சில காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன. இயக்குனர் சாலமனின் (கொக்கி, லீ) முதல் படம் இது. இப்படத்திற்காக 8 பாடல்களை உருவாக்கி (வைரமுத்து – தினா) 3 பாடல்களை ஆல்பமாக தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பினார்கள்.


லவ் டுடே

இதுவும் ஒரு அறிமுக இயக்குனரின் படம். பாலசேகரன் இயக்கிய படத்தில் ரகுவரன் – விஜய் தந்தை மகனாக (விஜய் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு முற்பட்ட காலம்) நடித்திருந்தனர். இவ்வளவு அன்பான, நட்பான அப்பா எல்லார் கனவிலும் நிச்சயம் வந்திருக்கும். அதிலும் காலையில் அவசர அவசரமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நிற்கும் சுவலக்‌ஷ்மியை பார்க்க செல்லும் விஜயை ரகுவரன்
“காலங்காத்தால எங்க இவ்வளாவு அவசரமாக போற” என்று கேட்கும் ரகுவரனிடம் விஜய் “கம்பியூட்டர் க்ளாஸ்க்கப்பா” என்று சொல்ல அவர் சென்ற பின் (தனக்கேயுரிய) புன்னகையுடன் “நான் பாக்காத கம்பியூட்டர் க்ளாசா! எந்த பொண்ணு பின்னாடி சுத்திறானோ” என்று ரகுவரன் சொல்லும் காட்சி அற்புதம். அதேபோல மீன் தொட்டிக்கு அருகில் வைத்து விஜய்க்கும், சாப்பாட்டு மேசையில் வைத்து அவர் நண்பர்களுக்கும் ரகுவரன் அறிவுரை சொல்லும் காட்சிகள் நன்றாக இருக்கும்.

தவமாய் தவமிருந்து

படத்தின் முற்பாதியில் ராஜ்கிரனை தியாகி ரேஞ்சிற்கு கட்டமைத்த சேரன் பிற்பாதியில் சற்று யதார்த்ததுக்கு திரும்பியிருப்பார். கஷ்டப்பட்டு சேரனை படிப்பிக்க அவர் காதலியுடன் தகப்பனிடம் வாங்கிய பணாத்துடன் ஊரைவிட்டு ஓடி பின் ஓரளவு நல்ல நிலையில் மீண்டும் பெற்றோரை வைத்து போற்றுவதாகவரும் கதை. சேரனுக்கு பிள்ளை பிறந்தது தெரிந்து வரும் ராஜ்கிரண் அவருக்
கு பண உதவி செய்யும் காட்சியிலும் அதேபோல சேரனின் வீட்டை பார்த்து அடு பற்றி சேரனிடம் கேட்கும்போது சேரன் கடனில் வாங்கிய வீடென்று சொல்ல, “எப்பவும் நம்ம வருமானத்துக்குள்ள வாழ பாக்கனுமப்பா” என்று சொல்வதும் உணர்வுபூர்வமான காட்சிகள். படத்தின் பிற்பகுதியில் வசனமேயில்லாமல் பிண்ணனி இசையுடன் 10 நிமிடங்களுக்கு மேலாக வரும் காட்சி ஒரு கவிதை. அதுபோல ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு அம்மா அப்பா பாடலின் காட்சியும் நல்ல ரசனையுடன் படமாக்கப்படிருக்கும்.

உல்லாசம்

இப்படத்தில் அஜித்தும் விக்ரமும் மற்றவர்களின் தந்தையருடனே (ரகுவரன், பாலசுப்ரமணியம்) நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் உறவுமுறை நன்கு
காட்டப்படும். தனக்கு தெரிந்த கவிதை, பாடல், என்று பாலா விக்ரத்துக்கு சொல்லிக்கொடுத்து அவரை மென்மையாக வளர்க்க, ரகுவரன் தனக்குத் தெரிந்த அடி தடி, அதிரடிகளை அஜித்திற்கு சொல்லி வளர்க்கிறார். ரகுவரனின் அடியாள ஒருவர் இறக்க அந்த அடியாளின் கதிதான் அஜித்திற்கும் ஏற்படும் என்று விகரம் ரகுவரனிடம் கடுமையாக சொல்ல ரகுவரன் தனது ரவுடிசத்தை மூட்டைகட்ட முடிவெடுப்பார். இந்த சந்தர்ப்பத்தில் “சின்ன வயசில குரு ...” என்று தொடங்கி ரகுவரன் பேசும் வசனமும், மஹேஸ்வரியை விக்ரமும் காதலிப்பதால் அவரை விட்டு விலகும்படி அஜித்திடம் பாலா கேட்கும் காட்சியும் சிறப்பாக அமைந்தபடம். பாலகுமாரனின் வசனமும் ஜேடிகெர்ரியின் இயக்கமும் நன்றாக இருந்தும் சரியான திரையரங்குகளில் திரையிடப்படாமல் அமிதாப்பின் AB Corporationஐயே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வைத்தபடம்.

காதல்கவிதை

ஜனாதிபதி விருது பெற்ற அகத்தியனின் இயக்கத்தில் மணிவண்ணன் – பிரஷாந்த் முறையே தந்தை மகனாக நடித்தபடம். தந்தை மகன் உறவை இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம் என்றபோதும் சில காட்சிகள் நன்றாக இருக்கும். மணிவண்ணன் தொழிலதிபர். மனைவி அம்பிகா. மகன் பிரஷாந்த். பிள்ளையும் கணவனும் எப்போதும் வீட்டில் நிற்காததால் அம்பிகா எந்நேரமும் சண்டையிட்டுகொண்டே இருப்பார். பின்னர் மணிவண்ணன் இதை உணார்ந்து அவரை மாற்றுவார். இதில் வீட்டில் அமைதி இல்லை என்று வெளியே திரியும் பிரஷாந்தை மணிவண்ணன் கையேந்தி பவனில் வைத்து காணும் காட்சி சிறப்பு.

கிரீடம்

பிரியதர்ஷனின் மலையாளாத்திரிப்படத்தின் த
மிழ் படம் இது. ராஜ்கிரண் – அஜித் தந்தை மகனாக நடிக்க புதுமுக இயக்குனர் விஜை சிறப்பாக இயக்கினார். தன் மகன் போலிஸ் ஆகவேண்டுமென்ற தந்தையின் கனவை யதார்த்தமாக அணுகியிருந்தார். அதனாலோ என்னவோ படம் பெரிய வெற்றியை பெறவில்லை. மற்றும்படி தன் மகனை ஒவ்வொரு கட்டத்திலும் தாங்கும் ராஜ்கிரணின் அணுகுமுறையும், போலீசாக இருந்தபோதும் குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் காடும் மென்மையும் என்னை கவர்ந்தது. அஜித்தும் மென்மையாக, ஒரு matured கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருப்பார்.

வாரணம் ஆயிரம்

அண்மையில் வந்த படம் என்பதால் இதன் வெற்றி தோல்வி பற்றி இப்ப்ப்து ஒன்றும் கதைக்க முடியாது. ஆனால் படம் மிக மெதுவாக செல்கின்றது என்ற பொதுவான கருத்து உள்ளது. என்னை பொறுத்தவரை தந்தைக்கு தியாகி என்றோ, அப்பாவி என்றோ வேஷம் கட்டாமல் தன் மகனுக்கு ஒரு role model ஆக இருக்ககூடிய தந்தையை படத்தில் காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல்
”முதலடி வாங்கியவன் முடிவுக்கு அஞ்சுவதில்லை
வாங்கும் வரை வாதங்கள், வாங்கியபிறகு எல்லாம் வே
தங்கள்” என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையை அனுபவங்களின் தொகுப்பாக, எவரையும் புனிதராக்காமல் சொல்லும் படம். படத்திலேயே அப்பா சூர்யா சொல்வதுபோல life has to go on என்பதை மீண்டும் மிண்டும் வலியுறுத்துகிறபடம். பத்திரிகை விமர்சனங்களையும் மற்றோர் கருத்துக்களையும் மட்டும் கேட்காமல் படத்தை ஒருமுறை அரங்கில் பார்க்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இதுபோல இன்னும் சில படங்கள் வெளியாகியிருக்கலாம். அவற்றை தெரிந்தவர்கள் அறியதந்தால் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் நான் எடுத்துச் சொல்லப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் மற்றைய உறவுகளைவிட இந்த உறவு முறை மிக குறைந்த எண்ணிக்கையில் திரைப்படமாக்கப்பட்டமையே.

Monday, November 3, 2008

ஞாநியை நான் ஏன் நிராகரிக்கிறேன்

அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது.

ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர்
பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.


அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள்.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்????


முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடு
தலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.)
சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்ப
டாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா

Sunday, November 2, 2008

தோற்றுப்போன வெற்றி: என் உயிர்த் தோழன்

மிக தீவிரமான திரைப்பட ரசிகனாக இருந்தும் நல்ல சினிமா, கெட்ட சினிமா என்கிற விவாதங்களில் நான் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. என்னை பொறுத்தவர சினிமாவை ரசித்த சினிமா, ரசிக்காத சினிமா என்றுதான் பாகுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று கூறுவது இப்போதெல்லாம் ஒரு fashion ஆகவே மாறிவிட்டது. மொழி திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் போது ஞாநிக்கு பதிலாக இயக்குநர் அமீர் சொன்னது போல நல்ல சினிமாக்களை எல்லாம் திரையரங்கில் சென்று பார்த்திருந்தால், அதனை மற்றவர்களுக்கும் சொல்லியிருந்தால் நிச்சயம் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கும். எந்த இயக்குநர்களும் மோசமான படங்களை எடுக்கவேண்டும் என்று படம் எடுப்பதில்லை. திரைப்பட தயாரிப்பில் பெருமளவு பணமும் முதலீடு செய்யப்படுவதால் வணிகரீதியான வெற்றி பற்றிய தயக்கம் சில சமயங்களில் நல்ல படங்கள் எடுப்பதை தவிர்த்துவிடுகிறது. இந்த தொடரில் நல்ல கதையம்சத்துடன் வெளியாகி, பரவலான கவனிப்பை பெறாத, வசூல் ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் பற்றிய பார்வை.


என் உயிர்த் தோழன்


பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றான இது வசூல் ரீதியாக எடுபடாமல் போனது பலத்த ஏமாற்றமே. 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு பூபாளமாக புகுந்த பாரதிராஜா வித விதமான கிராமத்து காதல்கதைகளை திரையில் கவிதையாக விவரிப்பதில் தனித்த ஆளுமை கொண்டவராக விளங்கினார். இடையில் நகர்ப்புற கதைகளுக்கு வந்த போதும் அந்த கதைகளிலும் கூட அவரது கிராமத்து தேவதைகள் வெள்ளையுடையுடன் வந்து போனார்கள், சில காட்சிகள் கிராமங்களில் நடந்தன, அவையே மக்களால் பெரிதளவும் ரசிக்கப்பட்டன (உதாரணம் : நிழல்கள், ஒருகைதியின் டயரி, சிகப்பு ரோஜாக்கள்). இந்த நிலையில் தொடர்ந்து கிராமத்து காதல்களையும், த்ரில்லர்களையும் எடுத்து வந்த பாரதிராஜா சற்று மாறுபட்டு விமர்சனத்துக்குரிய ஒரு காதலை முதல் மரியாதை என்ற பெயரில் இயக்கினார். படம் பெரு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தாஷ்கெண்டில் வைத்து கௌரவிக்கப்பட்டபோது (வழமைபோல ) உணர்ச்சிவசப்பட்டு இனி சமூக சீர்திருத்த படங்களை மட்டுமெ எடுப்பேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து வேதம் புதிது, கொடி பறக்கிது (இது சமூக நீதிக்காக எடுக்கபடவில்லை, நிதி ரீதியான சில சிக்கல்களை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டது.)

இதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து கொண்டு தந்த அற்புதமான படம் தான் என்னுயிர் தோழன். இந்த படத்தின் டைட்டில் வரும்போது கூட பாரதிராஜாவின் என்று ஒரு slide வரும் பின்னர் என்னுயிர் தோழன் என்று அடுத்த slide வரும். பின்னர் இளையராஜா என்று அடுத்த slide வரும். அதாவது சேர்ந்து வாசித்தால் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், இளையராஜா என்று அர்த்தம் வரும். ஆனால் இளையராஜாவுடன் இணைந்ததால் 1980ம் ஆண்டு வைரமுத்துவை அறிமுகம் செய்த பின்னர் இந்த படத்தில் தான் (10 ஆண்டுகளின் பின்னர்) முதன் முதலாக வைரமுத்து பாடலெழுதாமல் ஒரு பாரதிராஜா திரைப்படம் வெளியானது.

புதுமுகங்களை வைத்து பெரு வெற்றிகளை பெற்ற பாரதிராஜா கமல், ரஜினி, சத்யராஜ் என்று பெரிய நடிகர்களை வைத்தே படங்களை இயக்குகிறார் என்ற குற்றசாட்டு பலமாக வைக்கப்பட்டபோது மீண்டும் மூன்று புதுமுகங்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பாபுவே வசனங்களை எழுதியிருந்தார். (இது போலவே புதிய வார்ப்புகள் திரைப்படத்துக்கும் அதன் வசன கர்த்தாவான பாக்யராஜையே நாயகனாக்கியிருந்தார்). மண்வாசனை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா படங்களை போலவே கலைமணியே இதற்கும் கதையெழுதிருந்தார்.

இந்த படத்தின் முக்கிய விடயம் இது சொல்லும் செய்தியாகும். எல்லா அரசியல்வாதிகளிற்கும் உணார்ச்சிவசப்பட்ட இளைஞர்களையும், மாணவர்களையும் தமது சுயநலத்துக்கு உள்ளாக்கினாலும் அதை விமர்சித்து எடுக்கப்பட்ட படங்கள் மிக குறைவு. இதற்கு காரணம் ஒரு புறம் அரசியல்வாதிகளால் வரக்கூடிய எதிர்ப்பாக இருந்தாலும் இன்னொரு காரணம் அரசியலில் ஈடுபடும் இளைஞர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற நிஜத்தை முகத்தில் அடிப்பது போல சொல்லி திரையரங்குகளுக்கு இளைஞர்களின் வருகை குறைந்துவிடக்கூடாதே என்பதுதான். இன்னும் சொன்னால் புதிய மன்னர்கள் (விக்ரம் நடிக்க விக்ரமன் இயக்கம்), சத்யா (கமல் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்) போன்ற பெரிய நட்சத்திரங்கள் இணைந்த படங்கள் பெருந்தோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிட்டு (ரமா) வசிக்கும் கிராமத்தில் நாடகம் போடவரும் தென்னவன் (ரமேஷ், பின்னர் தனது பெயரை தென்னவன் என்றே மாற்றி ஜெமினியில் “கை”யாக நடித்து பிரபலமானவர்) சிட்டை காதலித்து அவளை கூட்டிக்கொண்டு சென்னை செல்வதாக ஏமாற்றி அவளது நகைகளையும் எடுத்துக்கொண்டு அவளை ரயிலில் விட்டு விட்டு பிரிகிறான். அவள் தர்மனிடம் அடைக்கலம் கோருகிறாள். அதே நேரம் உள்ளூர் அரசியல்வாதி டெல்லியும் (லிவிங்ஸ்டன்) அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயல்கிறார். அப்போதைய எதிர்கட்சியான பொதுக்கட்சியின் தொண்டனான தர்மன் டெல்லியின் முயற்சிகளை முறியடைத்து அவளை மணக்கிறான். இதே சமயம் தென்னவனும் போர்முரசு பொன்வண்ணன் என்ற பெயரில் நடிகனாகிறான். டில்லி அரசியல் லாபம் தேடி டெல்லி பொதுக்கட்சியில் இணைந்து பின்னர் போர்முரசு பொன்வண்ணனையும் அதேகட்சியில் இணைக்கிறான். தர்மன் – பொன்னி இருக்கும் குயிலு குப்பம் தொகுதியில் போர்முரசு பொன்வண்ணன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறான். அவனை அடையாளம் காணும் பொன்னி தர்மனிடம் உண்மையை சொல்ல அவன் கட்சி செயல்பாடுகளிலிருந்து விலக, ஊரே பொதுக் கட்சியை புறக்கணிக்கிறது. அதன் பின்னர் கட்சி தலைவர் தர்மனை அழைத்து அழகு தமிழில் உணார்ச்சிமயமாக் ஒரு உரையாடலை நிகழ்த்த தர்மன் மனம் மாறி மீண்டும் தன் தலைவரின் நியாயங்களை பொன்னியிடம் சொல்லுகிறான். மீண்டும் கட்சி பணியில் முழுவீச்சில் இறங்குகிறான். தலைவர் புகழ்பாடி போஸ்டர்களை ஒட்டிவிட்டு, தேர்தல் பணிசெய்து களைத்துபோய் தன் சக கட்சி தொண்டனிடம் உணர்ச்சிவசப்பட்டு தன் தலைவரின் புகழ்பாடி, அவருக்கு பணி செய்யும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தர்மனை கொன்று அந்தப் பழியை எதிர்க்கட்சி மீது போட்டால் தாம் பெரு வெற்றி பெறலாம் என்ற அவன் கட்சியின் சதியில் பரிதாபமாக கொல்லப்படுகிறான். அதன் பின்னர் இறுதி காட்சியில் ஊரே கூடி போர்முரசு பொன்வண்ணனை, கட்சி தலைவரை, டெல்லியை என்று எல்லாரையும் கொன்று தள்ளுகிறது.


சமுதாயமும் அதில் இருக்கின்ற கட்சிகளும் எப்படியெல்லாம் மக்களை, அப்பாவி மனிதர்களை தமது சுயநலத்துக்கு பகடைகளாக பாவிக்கின்றாது என்று அருமையாக சொல்கிறதுபடம். எந்த விடயத்தையும் அளவுக்கு மிஞ்சி உணார்ச்சிவசப்பட்டு பார்க்கின்ற தமிழர்களின் நிலையை படம் துல்லியமாக் சொல்கின்றது. கட்சிதலைவர் பொன்னம்பலத்தை விடுதலை செய்யவேண்டும் எனக்கேட்டு தர்மன் தீக்குளிக்கும் காட்சி ஒரு உதாரணம். இந்த தீக்குளிக்கும் கலாசாரம் மிகப்பெரிய ஒரு பித்தலாட்டம் என்பது என் கருத்து. நடிகர்கள் இறக்கின்றபோது, அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரி, அவர்கள் புதிய பட அறிவிப்பை செய்யவேண்டும் என்றேல்லாம் கேட்டு செய்யப்படும் தீக்குளிப்புகள் மிகப்பெரிய அபத்தங்கள். படத்தின் இறுதியில் வரும் தர்மனுடனான கட்சிதலைவரின் உரையாடல் அரசியல்வாதிகளின் கபட பேச்சுக்கு ஒரு உதாரணம். தமிழர்களை பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய டாப் 10 குணாம்சங்களுல் முண்ணனி வகிப்பது அவர்களது பேச்சாற்றல். உணர்ச்சிவசப்படுத்தி மக்களை அறிவுரீதியாக சிந்திக்க வைக்காமல் உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்கும் இந்தப் பேச்சுகளால் எமது வாழ்க்கைநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டது என்று கடந்த கால வரலாற்றை பார்த்தால் தெரியும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னியுடனான தென்னவனின் பேச்சுகளும் தர்மனுடனான பொன்னம்பலத்தின் பேச்சுகளும் இதற்கு உதாரணங்கள். அதேபோல மக்கை கையில் பிடித்துகொண்டு எல்லாரும் பேசும் அப்த்தமான பேச்சுகள் (உதாரணமாக LIC கட்டடத்தை இரவில் ஏழைகள் தஙும் இடமாக மாற்றவேண்டும் போன்றா கருத்துகளை இப்படத்தில் ஒரு அரசியல்வாதி பேசுகிறார்). மேலும் எல்லா கதாபாத்திரங்களும் வழமையான தமிழில் கதிக்கின்றன, ஆனால் போலியான, மற்றவரை ஏமாற்றும் விடயங்களை பேசும்போது மட்டும் அழகு தமிழுக்கு மாறுகின்றன. திராவிடக்கட்சிகளினால் தமிழரின் பல அடையாளங்கள் காக்கப்பட்டாலும், இந்த ஆடம்பரமான அலங்கார வார்த்தைகளாலான பேச்சுகளும், ரசிகர்மன்ற, கட்சி தொண்டர் என்கிற, கட் – அவுட் போன்ற மக்களின் அடிப்படை வாழ்வை பெருமளவு பின்னோக்கி தள்ளிய கூறுகள் வாழ்வியலுடன் இணைந்தது மிகப்பெரிய ஒரு பாதிப்பே.



படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஒரு குறியீடாக காட்டபடும் முதியவரின் கதாபாத்திரம். அது பார்வையாளரை / அவர்களது மனநிலையை குறிப்பதாக அமைகின்றது. இறுதிக்காட்சியில் அந்த கதாபாத்திரம் மூலமாகவே டில்லி (லிவிங்ஸ்டன் - அப்போது அவர் ரஞ்சன் என்ற பெயரில் நடித்துவந்தார்) மற்றும் அரசியல்வாதிகள் கதாபாத்திரங்கள் கொல்லப்படுகின்றன. இதே போன்ற உத்தி பாலாவின் சேது திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதேபோலவே கட்சிக்காரர்கள் தயாரிக்கும் தர்மன் பற்றிய மரண அறிவித்தலிலும் அதேபோல தர்மன் எழுதும் தலைவர் ”பொன்னம்பபலம் வாழ்க” என்கிற சுவரோர வரிகளிலும் காண்பிக்கபடும் எழுத்துப்பிழைகள் கூட இயக்குணரின் வேண்டுமென்றே செய்தகுறியீடுகளாஅகத்தான் இருக்கவேண்டும்.


இந்தப் படத்தின் வணிக ரீதியான தோல்வியை நான் மக்களின் மனநிலையுடனேயே தொடர்புபடுத்தி பார்க்கின்றேன். என்னுயிர் தோழன் சொல்லும் நீதிகளை எவருமே ஒத்துக்கொள்ளப்போவதில்லை. கேட்டால் எனது தலைவர் அப்படிப்பட்டவரில்லை என்பார்கள். இருக்கலாம், ஆனால் ஒரு தனிமனிதனை தலைவனாக ஏற்று அவன் சொல்லும் கருத்துகளை எல்லாம் கண்மூடி தலையாட்டி மாற்றுகருத்துக்களை அடியோடு நிராகரிக்கும் சமுதாயம் மீளவே முடியாத பின்னடைவைத்தான் சந்திக்கும். இது வரலாறு சொல்லும் பாடம்.