மனிதவாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரசனைகளும், விருப்பங்களும் கொள்கைகளும் முக்கியத்துவங்களும் மாறிவருவதுபோல உறவுகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் எம் கண்ணுக்கு தெரியாத ஒரு ரகசியபாதையில் தடம் மாறி செல்கின்றன. குழந்தை பருவத்தில் தாயுடன் இருக்கின்ற நெருக்கமான உறவு பின்னர் தந்தையுடன் நெருங்கிபின்னர் பதின் பருவத்தின் மத்தியில் நண்பர்களுடன் தாவுகின்றது. இந்த உறவு எல்லார் வாழ்விலும் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது.
பொதுவாக உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு தீர்க்கமுடியாத பந்தத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நட்பை பொறுத்தவரை அதற்கு எந்தவித கட்டாயமுமில்லை. எந்த ஒரு நெருங்கிய நண்பனையும் ஒரே நாளில் நண்பனில்லை என்று ஒதுக்கி வைக்ககூடிய ஒரு உறவு அது. நட்பின் பெருமையும் இதுவே, சிறுமையும் இதுவே. இளமையில் நட்பை கொண்டாடுவோர் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு வசனம் இது. இருபதுகளின் ஆரம்பத்தில் பொறுளாதார ரீதியில் பெரிய நெருக்கடிகளும் ஏற்படாத, அதே சமயத்தில் சமூகத்தில் ஒரு முழுவயதினராக (adult ) கணிக்கப்டும் போது நண்பர்களே உலகம் என்று தோன்றும். நட்புக்காக உயிரை தருவேன் போன்ற வசனங்கள் எல்லாராலும் பேசப்படும். ஒருவித குழு மனப்பான்மை பரவி சிலசமயங்களில் குழு கலாசாரம் வரை (Gang Culture / Mob Culture) இட்டுச்செல்லும்.
இதன் பிறகு இருபதுகளின் இறுதியில் திருமணம் நிகழ அதன் பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். விரும்பிய நேரத்தில் படுத்து, எழும்பி, உண்டு, குளித்து , சவரம் செய்து அல்லது இவையேதும் செய்யாமல், வார இறுதி என்றால் இரவிரவாக நண்பர்களுடன் வெட்டிக் கதைபேசி இருந்த வாழ்வுக்கு புதிதாக ஒரு தடா வந்தவுடன் பெரும் மனக்குழப்பம் வரும். அதிலும் நண்பர்களின் பிறந்த நாள், அவர்களின் காதலியரின் பிறந்த நாள், முன்னாள் காதலியரின் பிறந்த நாள், இந்தியா பாகிஸ்தானை வென்ற நாள் மூன்றாம் மாடியில் இருக்கும் கீதா முதன் முதலாய் பார்த்து சிரித்த நாள் என்றெல்லாம் கூறி பார்ட்டி வைக்கும் கதையெல்லாம் எடுபடாமல் போகவே விரக்தியும் உண்டாகும். அதிலும் நண்பர்கள் கூட்டத்தில் முதலில் கல்யாணம் ஆனவன் என்றால் அதோகதி தான். அவன் இப்ப மாறீட்டான் மச்சான் (அல்லது அத்தான்), மனிசீன்ற கால்ல விழுத்திட்டான் என்ற காமென்ட்ஸ் அப்பப்ப காதில்விழ கோவிந்தா கோவிந்தாதான்.
இப்படிபட்ட ஒரு நிலையை மிக அழகாக எதிர்பக்கம் என்று ஒரு கதையாக்கியிருப்பார் பாலகுமாரன். கல்யாணத்தின் பின்னர் நண்பர்களுடனான தொடர்பு குறைய, கல்யாணம் ஒரு கால்விலங்கு போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கி, இறுதியில் வாழ்வின் ஒரு கட்டம் இது. இதுவும் கடந்துபோகும் என்று அழகாக கதையை முடித்திருப்பார் பாலா. வரது மைலாப்பூரில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். கணேசன், மனோகர், கலியபெருமாள், சுப்பிரமணி என்று ஒரே அந்தஸ்தில் உள்ள நண்பர்கள்.இந்நிலையில் திடீரென வரதுவுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அத்தனை நண்பர்க்ளும் தம் வீட்டு விசேஷம் போல காலை காப்பி முதல் கையலம்புகிற தண்ணீர் வரை பொறுப்பை இழுத்துபோட ஜாம் ஜாமென்று கல்யாணம் முடிகின்றது. வரது மனைவி கல்யாணியுடன் மைலாப்பூர் வருகின்றான்.
கல்யாணி வரதுவின் நண்பர்களை அண்ணா அண்ணா என்றழைக்கிறாள். வரது நண்பர்களுடன் தம்பதியராய் நின்று படமெடுத்து நடு ஹாலில் மாட்டுகிறான். பொம்பள கையால சாப்பிட்டு எத்தனை காலமாச்சு என்று ஒருவன் அங்கலாய்க்க அவர்களின் வீட்டிற்கு கல்யாணியின் சமையலில் இரண்டு வாரம் வத்தக்குழம்பு போகிறது, ஒருவாரம் ரசம் போகிறது , நாலாம் வாரம் முடியல என்று தகவல் மட்டும் போகிறது. அதே நேரம் கல்யாணி நண்பர்கள் திருமணத்தில் செய்த உதவிகளை எல்லாம் அடிக்கடி கேலியாக்குகிறாள். கிராமத்திலிருந்து வந்த கல்யாணியால் திருமணத்தில் லைட் ம்யூசிக் ஏற்பாடு செய்த நண்பர்களின் செயல் கேலி செய்யப்படுகிறது. பேச்சு வளர நண்பர்களுடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தவேண்டும் என்று கல்யாணி வற்புறுத்துகிறாள். தான் தன் வீட்டை விட்டு வந்தது போல வ்ரதுவும் நண்பர்களைவிட்டு விலக வேண்டுமென்று வாதிடுகிறாள். கல்யாணி இவன் நண்பர்கள் உதவிகளை எல்லாம் நக்கலாக பேச வரது பதிலுக்கு அவள் உறவினர்களை பற்றி திட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்லுகிறான்.
அடுத்த நாள், கல்யாணி கலியபெருமாளிடம் சென்று வரதுவை பற்றி முறையிட, மன்னிப்புகேட்டு வத்தகுழம்பு ஒரு சட்டியும் கொடுத்துவிட்டு வருகிறாள். முழு பிரச்சனையும் வத்தகுழம்பாலே வந்தது போன்ற ஒரு நிலை உருவாக்கப்படுகிறது. உன் உறவே வேண்டாம் என்று நண்பர்கள் வேறு புறக்கணிக்கதொடங்குகிறார்கள். அதன் பிறகு மனோகரை ஒரு சந்தர்ப்பத்தில் காண்கிறான். அவன் தனது கல்யாணத்துக்கு வரதுவை அழைக்கிறான். (இந்த இடத்தில் அவன் கை குலுக்கலில் சினேகமில்ல்லை என்று ஒரு வசனம் வரும்). கல்யாண ஒழுங்குகள் எல்லாமே காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டதாய் மனோகர் சொல்கிறான். ஒரு முறை பட்டதே போதும் என்று அவன் சொல்வது வரதுவை தாக்குகிறது. தனக்காக வீட்டில் புதிதாக யாரும் வந்துள்ளார்களா என்று வரது கேட்க ஆறு வருட ஸ்னேகமே மூன்று வாரத்தில் புட்டுகிச்சு, புதுசா ஒண்ணு தேவையா என்று சொல்கிறார்கள். கல்யாணியிடம் முன்னர் வத்த குழம்பு கேட்ட கணேசன் வத்த குழம்பென்றாலே தனக்கு பிடியாது என்கிறான். இப்படி புறக்கணிப்பின் வலி மீண்டும் மீண்டும் வரதுவுக்கு உணர்த்தப்படுகிறது. சில காலம் செல்கிறது. கல்யாணி பிள்ளை பெற , குடும்ப சகிதம் கோயிலுக்கு போகும்போது தாம் முன்பு சந்திக்கும் அதே கோயிலருகில் அடுத்த தலைமுறை இளைஞர்கள் நிற்பதை பார்த்தபடி, கல்யாணி குழந்தைகளின் உடை பற்றி ஏதோ சொல்ல ஆமாம் என்று சொன்னபடி போகிறான்.
நம் யதார்த்த வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை ஒன்றை இக்கதை மூலம் தெளிவாக காட்டுகிறார் பாலா. பொதுவாக போனால் வேலை, வந்தால் வீடு என்றளாவில் பலர் வெளிப்புற தேடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அதனை பார்த்து வளரும் பெண்கள் தம் கணவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் முளைவிடுகின்றது இந்த பிரச்சனை. அதுவும், தனது அப்பாவோ, அண்ணாவோ, மாமாவோ, அத்தானோ அப்படி இருக்கிறான் என்பதற்காக அப்படியே தன் கணவனும் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. பல்லாண்டுகாலமாக இருந்த தொடர்புகளை, வழக்கங்களை ஒரே நாளில் அறுப்பது முடியாதென்பதை இருவருமே உணரவேண்டும். இதற்கு இன்னொரு காரணம் ஒருவனுக்கு இருக்கும் எந்த கெட்ட பழக்கத்திற்கும் அவனது நண்பர்களையே காரணமாக சொல்கின்ற ஒரு சபிக்கப்பட்ட மனநிலை. ஒருவன் கெட்டுப்போனால் அவன் நண்பர்களை குற்றம் சாட்டுபவர்கள் ஒருபோதும் அவன் நல்ல நிலைக்கு வரும்போது நண்பர்களை பாராட்டுவதில்லை. இந்த நிலையே பெண்களை பொதுவாக கணவர்களை நண்பர்களிடம் இருந்து பிரிக்க தூண்டுகிறது. இதுபோல நான் அவதானித்த இன்னொரு முரண், ஒருவரை பற்றி விசாரிக்கும்போது “அவன் நல்ல பெடியன், friends என்றதே இல்லை” என்று கூறுவது. இதில் என்ன யதார்த்தம் என்ன என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை.
இந்த கதையில் பாலா எந்த ஒரு முடிவையும் முன்வைக்கமாட்டார். வரது அந்த வாழ்க்கையையே ஏற்றுகொண்டான் என்றளவில் கதை முடியும். இது ஒரு சமரச மனப்பாங்கு. இது நம் வாழ்க்கைமுறை பற்றி, குடும்பம் பற்றி மிகப்பெரும் கேள்விகளை எழுப்புகின்றது. எல்லா கேள்விகளும் பதில் சொல்லவேண்டியனவும் அல்ல ,பதில்கள் உடையனவும் அல்ல.
எதிர்பக்கம் கதை நானே எனக்கொரு போதிமரம் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளியானது.