Saturday, October 14, 2006

பாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்


அண்மையில் மீண்டும் ஒருமுறை பாலகுமாரன் எழுதிய இரும்புக் குதிரைகள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது பாலகுமாரன் மீது லேசான கோபம் வந்தது; ஏன் இவர் இப்படியான புத்தகங்களை இப்போது எழுதுவது இல்லை. அதிலும் அந்த குதிரை கவிதைகள்.

குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர…
……………………………..
………………………………….
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்.

என்று அவர் எழுதிய குதிரை கவிதைகள் எமது பதின் வயதுகளில் எம்மிடையே மிகப்பிரபலம். அதிலும் யுத்தம் காரணமாக புத்தகங்கள் தட்டுபாடான யாழ்ப்பாணத்தில் எனது பெரியப்பா மூலமாக எனக்கு நிறைய புத்தகங்கள் கி
டைப்பதால் எனது நண்பர்களுக்கோ எனக்கோ புத்தகங்களுக்கு தட்டுபாடு கிடையாது. அப்படியான நேரத்தில் எனக்கு பாலகுமாரனை அறிமுகம் செய்தவன் எனது நண்பன் தயாபரன். அவன் மூலமாக அவரது நெல்லுக்கு இறைத்த நீர் வாசித்து அதன் பாதிப்பில் தொடர்ந்து பாலகுமாரன் புத்தகங்களாக வாசித்து தள்ளதொடங்கினேன்.

பாலகுமாரனின் படைப்புகளை தொடர்ந்து தீவிரமாக படித்துவருபவன் என்ற அளவில் அவரது படைப்புகளை ஆரம்பகாலம், இடைக்காலம், தற்காலம் என்ற அளவில் பெரிய வித்தியாசங்களை காணலாம்.

ஆரம்பகாலங்களில் முற்போக்கான எண்ணங்களுடன் கம்யூனிச சிந்தனை பெண்விடுதலை என்கிற அளவில் எழுதிய மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், அகல்யா, ஆசை எனும் வேதம், தாயுமானவன் என்று அவர் எழுதிய நாவல்கள் நல்ல தரத்தில் இருந்தன. அவருடைய இரும்புக்குதிரைகள் நாவலில் வருகின்ற தாரணி, கௌசல்யா, காயத்ரி என்கின்ற மூன்று பெண்களுமே சாதாரண இல்லத்தரசி, முன்னேறும் வேகமும், துணிச்சலும் கொண்ட பெண், மரபுகளை மதியாத, அவற்றை உடைத்தெறியும் வேகம் கொண்ட புதுமைப்பெண் என்கின்ற மூன்று நிலைகளில் காட்டப்பட்டு இருப்பார்கள். கதையின் நாயகனான விஸ்வநாதனோ இலக்கிய தேடலும் கவிதை எழுதும் மோகமும் கொண்ட, ஆனால் குடும்பவாழ்வின் சுமைகளில் மூழ்கிப்போனவனாக சித்திரிக்கப்பட்டிருப்பான்.

இதைப்போலவே மெர்க்குரிப்பூக்கள் நாவலும் கம்பனி ஒன்றில் நிகழும் ஸ்ட்ரைக்கில் கொல்லப்பட்ட் தொழிலாளியயும், அதே கம்பனியில் வேலை செய்த அயல்வீட்டுப்பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்த இளைஞனும் இவர்கள் இருவரையும் சுற்றிய நிகழ்வுகளிலும் கதை பின்னப்பட்டிருக்கும். இந்த கதையை தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே எழுதவதாயும் அவர் தனது சுயசரிதமான முன்கதை சுருக்கத்தில் கூறி இருந்தார். இந்த காலகட்டங்களில் அவர் ட்ராக்டர் கம்பனியில் வேலை செய்து கொண்டே எழுதியிருந்தாலும் அவரது படைப்புகள் நல்ல தரத்தில் இருந்தன.

இதற்கு பின்னர் அவர் சினிமா ஆசையில் உத்தியோகத்தை உதறிவிட்டு K பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சிந்து பைரவி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் பணியாற்றினார். அக்கால கட்டங்களில் அவருடன் சக உதவி இயக்குனராக வேலை செய்தவர்கள் தான் சுரேஷ் கிருஷ்னா (பாஷா, வீரா, பாபா, ஆளவந்தான்) வஸந்த் (கேளடி கண்மனி, ரிதம், ஆசை, நேருக்கு நேர்). பின்னர் பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு என்கிற படத்தை இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் அந்த படத்தில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களால் அதற்கு பின்னர் எந்த ஒரு படத்தையும் இவர் இயக்கவில்லை. (ஆனால் பல படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அண்மையில் கூட புதுப்பேட்டை, மன்மதன் படங்
களில் வசனங்கள் பாராட்ட்ப்பட்டன.) ஆனால் திரை துறையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படியில் நிறைய நாவல்களை எழுதினார். ஆனால் இந்த நேரத்தில் தான் அவரது நாவலின் தரம் குறைய தொடங்கியது என்றும் சொல்லலாம். எழுத்தையே முழு நேர தொழிலாக கொண்டதால் நிறைய எழுதும்படி ஏற்பட்ட கட்டாயமும் இதற்கு காரணமாய் இருக்கலாம்.

அதே சமயத்தில் யோகி ராம்சுரத்குமாரடன் ஏற்பட்ட அறிமுகமும் ஆன்மிகத்துடன் எற்பட்ட அதீத ஏடுபாடும் கூட அவரது எழுத்தை பாதித்தது என்றே சொல்லவேண்டும். இக்கால கட்டத்தில் விதுரன் கதை, க்ருஷ்ண அர்ச்சுணன், முதிர் கன்னி, பழமுதிர்குன்றம், தங்கத்தாமரை போன்ற சில நல்ல படைப்புகளை படைத்திருந்தார். ஆனால் ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளராக, முற்போக்காளராக அறியப்பட்ட பாலகுமாரன் அதன் பின்னர் காணாமல் போய்விட்டர். இதன் பின்னர் இந்துத்துவ கருத்துகளை மிக வேகமாக பரப்பவே முற்பட்டார். அதே போல அவரது சோழர்கள் மீதான ஈடுபாடும் அவரது நாவல்களில் வெளிப்படையாக தெரிந்தது. அதே போல அவர் தன் நாவல்களில் வரும் கதா பாத்திரங்களை தொடர்ந்து தெளிவானவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் காட்டிக்கொண்டார். தமிழ்மொழி ஆர்வம் தியானம் போன்ற விடயங்களை பரப்பும் முயற்சியில் இவர் பங்களிப்பு தந்திருந்தாலும் கதைகளில் திரும்ப திரும்ப அது கூறப்பட்டபோது சலிப்பே தோன்றியது. மேலும் ஒருகாலத்தில் தன்னை கம்யூனிஸ்ட்டாக காட்டிக்கொ
ண்ட இவர் பின்னர் வெளிப்படையாகவே தன் பிராமண ஆதரவை காட்டிக்கொண்டார். அதேபோல அண்மையில் எழுதிய “குருவழி” என்கிற புத்தகத்தில் ஒருகாலத்தில் தன்னை வழிகாட்டியதாக கூறிய அயன் ராண்ட் இன் கருத்துக்களையே முட்டாள்தனமானவை என்று கூறி, தொடர்ந்து அதுவே வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டார்.

முன்பொருமுறை முன்கதை சுருக்கம் என்று இவர் எழுதியதற்கும் இப்பொது எழுதி வரும் சுயசரிதமான காதலாகி கனிந்துவுக்கும் இடையிலேயே எத்தனையோ வெளிப்படையான வித்தியாசங்கள். அது மட்டுமல்லாமல் அவர் அண்மையில் எழுதிய ஏழாவது காதல், அப்பம் சடை தயிர் சாதம், உடையார், காதல் சிறகு போன்றவை கூட இவரது ஆரம்ப காலங்கள் போல அமையவில்லை. கிட்ட தட்ட பாலகுமாரனின் 100 புத்தகங்களை ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கும் என்போன்ற தீவிர பாலகுமாரன் வாசகர்களுக்கு இது ஒரு இழப்பு தான்.